கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, August 19, 2013

குறுஞ்சாமிகளின் கதைகள்-16

 சப்பாணி முத்துசாமி

காதலுக்காக ஒரு களவு:
திருநெல்வேலி ஜில்லா சங்கரன் கோயில் தாலுக்காவுல மஞ்சநாயக்கன் பட்டின்ற ஊர்ல மாடப்பன்று ஒரு சமசாரி இருந்தார்.அவரோட பொண்டாட்டி பேரு மாடியம்மாள் அவங்களுக்கு ஒரே புள்ள பேரு முத்துசாமி அவன் வளர்ந்து வாலிபமானான்
மாடப்பருக்கு தங்கச்சி ஒருத்தி இருந்தா அவ் பேரு சங்கரம்மாள் அவளைப் பக்கத்துல இருக்கிற துங்கணாம் பட்டிங்கிற ஊர்ல சின்ன நம்பிங்கிற மாப்பிள்ளைக்கு கட்டிக் கொடுத்திருந்தாங்க சங்கரம்மாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துச்சி பொன்னமான்னு பேர் அவளும் வளர்ந்து பெரிய மனுஷியானாள்.
சங்கரம்மாளின் புருசங்காரன் சின்னநம்பி களவு எடுக்கறதுல மகா கெட்டிக்காரன் ராவெல்லாம் களவுக்குத்தான் போவான் விடிஞ்சதும் நாலு மனுஷ மக்கள் கூட நல்லபிள்ளை கணக்கா வந்து உக்காந்துக்குவான் எங்க களவாடப் போனாலும் பிடிபடமாட்டான்.
முத்துசாமி காட்டுல வேட்டையாடுறதையே தொழிலா வெச்சுகிட்டான் நேர்மையா உழைச்சி சம்பாதிச்சு சாப்பிடுறவன் வீராதி வீரனா சூராதி சூரனா திக் விஜயனாத் திகழ்ந்தான்.
அத்தை சங்கரம்மாளைப் பார்க்கிற சாக்குல அடிக்கடி துங்கணாம் பட்டிக்குப் போய் முறைப்பெண் பொன்னம்மாளைப் பார்த்துப் பேசிட்டு வந்தான்.
பொன்னம்மாளும் முத்துசாமியைத்தான் கட்டிகிடணும்னு நினைச்சாள்.
மாடப்பரும் மாடியம்மாளும் முறைப்படி முத்துசாமிக்குப் பெண் கேட்டு பொன்னம்மா வீட்டுக்கு போனாங்க.
சங்கரம்மாளோட புருஷன் சின்ன நம்பி மச்சான் உம்ம பையனிடம் ஒரு களவு திருடு இல்லை நான் அடிக்கடி வேட்டைக்குப்போய் என் மகளுக்கு வேண்டிய மட்டும் தங்க நகைகளை செஞ்சி போட்டிருக்கேன்.மான் வேட்டையாடி மாடி வீடா கட்ட முடியுமா?நாட்டுக்குள்ளையோ கோட்டைக்குள்ளையோ புகுந்து ஒரு களவாவது எடுத்து ஜெயிச்சி வரச் சொல்லுங்க அப்பதான் என் மகளைக் கட்டித் தருவேன்னு சொல்லிட்டார்.
மாடப்பரும் மாடியம்மாளும் ஊருக்கு வந்து மகனிடம் அவன் மாமன்காரன் சொன்னதை சொன்னாங்க.
முத்துசாமி பொழுது சாயற நேரத்துல துஙகணாம்பட்டிக்கு போனான் ஊர்க் கிணத்துல தண்ணி எடுக்க வந்த அத்தை மகள் பொன்னம்மாளைச் சந்திச்சி என்ன உங்க ஐயா அப்படிச் சொல்லுதார் நீ என்ன சொல்லுதன்னு கேட்டார்.
பொன்னம்மாளும் என் ஐயன் ஆசப்படுதாருல்ல ஒரே ஒரு களவு எடுங்க எங்கய்யா என்னை உங்களுக்கு கட்டிக் கொடுத்திடுவாரு அதுக்குப் பின்னால உங்க இஸ்டப்படி எப்படி வேணுமானாலும் இருக்கலாம்ன்னு ரொம்ப செல்லமா சொன்னாள்.
நீயே சொல்லிட்ட அதனால ஊரே மூக்குமேல விரலை வைக்கிற மாதிரி ஒரு பெரிய வேட்டையை முடிச்சிட்டு வாரேன் பாருன்னு அவளிடம் சொல்லிட்டு ஊருக்கு வந்தான் முத்துசாமி.
அந்தக் காலத்துல திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் வடமலையப்பரோட பராமரிப்பில்தான் இருந்துச்சு நெல்லையப்பர் கோயில் கருவறையில் இருக்கிற பொன் பொருளைக் களவாண்டாத்தான் தன் மாமனும் தன் காதலியும் முக்கின்மேல் விரலை வைப்பாங்கன்னு நினைச்சான் முத்துசாமி.

அவன் நேரே நெல்லையப்பர் கோயிலுக்குப்போயி நோட்டம் விட்டுட்டு வந்தான்
களவுக்கு போறத்துக்கு முன்னால காட்டுக்கு வேட்டைக்குப்போயி ஒரு உடும்பைப் பிடிச்சிகிட்டு வந்தான்.
அடுத்த நாள் களவு செய்யத் தேவையான ஆயுதங்களோட உடும்பையும் ஒரு பெரிய தாம்புக்கயிறையும் எடுத்துகிட்டு திருநெல் வேலிக்குப் போனான் நடுச்சாமம்போல கயிறு கட்டப்பட்ட உடும்பை வடக்கு கோட்டையின் உச்சிக்கு விட்டெறிஞ்சான் உடும்பு கோட்டை சுவரின் உச்சியில் போய் பிடிச்சிகிட்டு உடும்பின் வயிற்றில் கட்டி இருந்த கயிறு இப்ப கீழே தொங்குச்சி அந்தக் கயித்தை பிடிச்சிகிட்டு மளமளன்னு வடக்கு வாசல் கோட்டைச் சுவரின் மேலே ஏறி கோயிலுக்குள் இறங்கினான்.கோயில் கருவூல அறைக்கு போய் பூட்டை உடைச்சான் களவு செஞ்சோம்கிற அடையாளத்துக்காக அதிலிருந்து ஒன்று இரண்டு வைர நகைகளை மட்டும் எடுத்துகிட்டு திரும்புபோது இருட்டில் தரையில் கிடந்த கோயில் மணியின் நாவில் கட்டிய கயற்றை தெரியாமல் காலால் தட்டினான் கோயில் மணி அடித்தது.
மணிச் சத்தம் அர்த்த ராத்திரியில் கேட்டதால் கோயில் காவலர்கள் தடபுடன்னு எந்திரிச்சாங்க சத்தம் கேட்ட திக்கைப் பார்த்து கையில் தீப்பந்தங்களோட ஒடி வந்தாங்க.முத்துசாமிக்கு என்ன செய்ய ஏது செய்யறதுன்னு தெரியல கோயில் காவலர்களிடம் வசமா மாட்டிக்கிட்டான்.
கோயில் காவலர்கள் முத்துசாமியைப் பிடிச்சி நாலு சாத்துச் சாத்தி கைகளை முதுகுப்பக்கமா இழுத்து வச்சிகட்டி நேரே அவனைக் கோயில் நிர்வாகம் பாக்குற வடமலையப்பர் முன்னால கொண்டுபோய் நிப்பாட்டிட்டாங்க.
வடமலையப்பர்கிட்ட காதலியின் சொல்லுக்காக களவாட வந்தேன்னு உண்மையை சொல்லி ஒத்துகிட்டான்.
இவனைத் தாழையூத்து ஆவாரங் காட்டுக்கு கொண்டு போய் மாறுகால் மாறுகையை வெட்டி அவன் செத்த பிறகு அந்த இடத்துலயே புதைச்சிருங்கன்னு உத்தரவிட்டார் மலையப்பர்.
கோயில் காவல்காரர்கள் உத்தரவிட்டப்படியே முத்துசாமியோட கதையை முடிச்சாஙக்.
பொன்னம்மாள் தன் அத்தை மகன் தன்னைக் கட்டிக்கிடணும்ங்கிற் ஒரே நோக்கத்துக்காக களவு செய்ய போயி தன் உயிரையே கொடுத்துட்டாரேன்னு நினைச்சி பாம்பு புத்துக்குள்ள தன் கையை விட்டாள் நல்ல பாம்பு தீண்ட அந்த இடத்துலேயே மாட்டுட்டா.
ஒத்தக்கி ஒரு புள்ளை இப்படிஅநியாயமா செத்துடுச்சேன்னு சேதிக் கேட்ட இரண்டு குடும்பங்களும் அரளிவிதையை அரைச்சிக் குடிச்சி மாண்டன் கால் கை வெட்டப்பட்டு செத்துப்போனதால முத்துசாமியை மக்கள் சப்பாணி முத்துசாமின்னு கோயில் கட்டி கும்பிடுறாஙக்ன்னு சாமியின் வரலாற்றை ஒரு கதை போலச் சொன்னார் திருநெல்வேலி டவுனைச் சேர்ந்த தகவலாளர் ஒவியர் பொன் வள்ளிநாயகம்

No comments: