கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, August 19, 2013

குறுஞ்சாமிகளின் கதைகள்- 2

 சுடலையும் மந்திரவாதியும்


கொட்டாரக் கலையில இருக்கிற பகவதியம்மன் கோயில் ஈசான மூலையில ஒரு கிடாரம் நிறைய பொன் இருந்திச்சு அதைப் பாதுகாக்கிற பொறுப்பை பகவதி அம்மாள் சுடலைட்ட ஒப்படைச்சி இருந்தா.
மலையாளக்கரை ஒரமா காளிப்புலையன்னு ஒரு சூப்பர் மந்திரவாதி இருந்தான் அவன் சாமிகளின் கண்ணையே கட்டக்கூடியவன்.
ஒருநாள் அவன் எந்தெந்த இடங்கள்ல புதையல் இருக்குன்னு மை போட்டு பார்க்கும்போது பகவதியம்மன் கோயிலுக்குள்ள ஒரு கிடாரம் பொன் இருக்குங்கிற விவரம் அவனுக்கு தெரிஞ்சிச்சி உடனே நேரா பகவதி அம்மன் கோயிலுக்குப் போனான் சுடலை வெளியேறுகிற நேரம் பார்த்து கிடாரத்தைக் கைப்பத்தணும்னு நினைச்சுக் காத்திக்கிட்டிருந்தான் காளியப்புலையன்.
அன்னிக்கு வெள்ளிக்கிழமை நடுச்சாமம் போல சுடலை சுடுக்காட்டுக்கு வேட்டைக்கு புறப்பட்டார் உடனே காளிப்புலையன் நேரஏ பகவதி அம்மன் கிட்டப் போயி அவளை செயல் படவிடாம ஆரக்கட்டிட்டான் பிறகு கிடாரம் உள்ள இடத்துக்கு வந்து கிடாரத்தை தோண்டி எடுத்து ஒரு மந்திரக் காளை முதுகுல பொன்னப் பொதியாக போட்டு ஏத்திக்கிட்டு தன் இருப்பிடத்திற்கு போனான்.
வேட்டைக்குப் போயிட்டு வந்த சுடலை கிடாரத்தை பார்த்தார் ஒரு கிடாரம் பொன்னக் காணலை பகவதியம்மையிடம் போய் எப்படி கிடாரம் காணாம போச்சின்னு கோட்டார்.
பகவதி அம்மை நடந்ததையெல்லாம் சொல்லி அதை மீட்டுத் தர வேண்டியது உன் பொறுப்புதான்னு சொன்னாள்.
சுடலை மோசம் பண்ணுன காளிப்புலையனைக் கருவறுக்கணும்ங்கற வைராக்கியத்தோட நேரே மலையாள கரைக்கு வந்தவர் அங்க ஒரமா உள்ள ஒரு சுடுகாட்டுல போய் இருந்துகிட்டார் பொழுது விடிஞ்சதும் பிச்சைக்காரன் ரூபத்துல காளைப்புலையன் வீட்டுக்குப் போனார்.
அவனுக்கு ஒரு அழகான் ஒரு மகள் இருந்தாள் அவள் பேரு சூரி சுடலை முதல்ல அவளைக் கருவறுக்கணும்னு நினைச்சார்.
காளிப்புலையன் வீட்டு வாசல்ல கிழட்டுப் பிச்சைக்காரன் ரூபத்துல நின்னுகிட்டு அம்மா தாயே பிச்சை போடுங்கன்னு குரல் கொடுத்தார்.
சூரி வீட்டுக்குள்ள இருந்துகிட்டு தோழிப் பெண் ஒருத்தியிடம் பிச்சைப் பொருளை கொடுத்து அனுப்பினான்.
உடனே சுடலை நீ வீட்டுக்குள்ளே போ போயி இந்த வீட்டுக்கு உடமைப்பட்டவளக் கொண்டு வந்து பிசைப் பொருளை கொடுக்கச்சொல் என்றார் அதிகார தோரணையில்.
தோழிப்பெண் நேரே சூரியிடம் போய் தெருவில் நிற்கும் பிச்சைக்கார பெரியவர் சொன்னதை அப்படியே ஒப்பித்தாள்.
காளிப்புலையன் மகளும் அப்பேர்பட்ட கொம்பனைத்தானும் பார்க்க நினைச்சான் அதனால பிச்சைப் பொருளோட வீட்டு தலை வாசலுக்கு வந்தாள் வந்தவள் கிழட்டு பிச்சைக்காரனை ஏளனத்துடன் பார்த்து ஏய் பிச்சைக்கார கிழவா உமக்கா இம்புட்டு துமிர் மரியாதையா நான் தார பிச்சைப் பொருளை வாங்கிட்டு ஊர் போய் சேரும் எங்கப்பன் காளிப்புலையன் சேதி தெரியாம அலையா தீரும் னாள்.
சுடலை விடுவார அடியே காளிப்புலையனின் மகளே இன்னிக்கு ராத்திரி நடுச்சாமம் உன் அப்பங்காரன் வீட்டுல இருக்கும்போதே உன்னைப் பெண்டாளப் போறேன் முடிஞ்சா காப்பாத்திக்கபாரும் உங்கப்பனிடம் இதைச் சொல்லு எனக்கு நீதான் வேணும் உன் பிச்சைப் பொருள் வேண்டாம்ன்னார்.
சுடலை சொன்னதைக் கேட்டு சூரி அப்படியே ஆடிப்போயிட்டாள் வேர்த்துக் கொட்டியது தலை சுத்தியது பயந்து வீட்டுகுள்ள போய் தலைவாசல் கதவை அடச்சிகிட்டா.
ராத்திரி வெகு நேரத்துக்குபிறகு காளிப்புலையன் வீட்டில் இருக்கும்போதே சுடலை பாம்பு ரூபம் எடுத்து அவன் வீட்டுக்குள் போய் சூரியைக் கூடினார்.
அன்னைக்கே அவள் கருக்கொண்டாள் நாளாக நாளாக உடம்பில் தாய்மைக்குறிய அறிகுறிகள் தோன்றின தான் எப்படி கருத்தரிச்சோம்கிற சேதி தெரியல.
சுடலை காட்டு பன்னி ரூபம் எடுத்து காளிப்புலையனுக்கு சொந்தமான வாழத் தொப்புகளை எல்லாம் அழிச்சி துவம்சம் பண்ணினார்.
இது சுடலையின் வேலைதான்னு தெரிஞ்சுகிட்டு நேரே சுடலை இருக்குற சுடுக்காட்டுக்கு போனான் காளிப்புலையன்
சுடலை காளிப்புலையனைப் பார்த்து ஒரு கிடாரம் பொன்னுக்கு ஆசைப்பட்டு தானே கொட்டாரக்கரை பகவதி அம்மன் கோயிலுக்கு வந்தே நான் உனக்கு பத்து கிடாரம் பொன் இருக்கிற இடத்தைக் காட்டுதேன் உன்னால நான் சொல்கிற படி ஊட்டு(மாமிசப்படையல்)கொடுக்க முடியுமான்னு கேட்டார்.
பேராசை பிடிச்ச காளிப்புலையன் நீர் சொல்கிறபடி ஊட்டுக்கொடுக்கேன் எனக்குப் பத்துக் கிடாரம் பொன் இருக்க இடத்தைக் காட்டும்னான்.
சுடலை பூதங்களை கால்களாக நட்டு ஏழு பரண்போடணும் அதுல வரிசையா ஆறு பரண்கள்ல சூல் ஆட்டையும் சூல் மாட்டையும் சூல் பன்றியையும் சூல் குதிரையும் சூல் முதலையும் சூல் யானையையும் ஏழாம் பரண்ல கலயாணம் முடியாமல் கருக்கொண்ட கன்னிப் பெண் ஒருத்தியோட நெஞ்சைக் கீறி ஊட்டாக் கொடுக்கணும்னு கேட்டார்.
காளிப்புலையன் ஒப்புக்கொண்டான்
மறுவாரம் வெள்ளிக்கிழமை கால்களாக நடு ராத்திரி நேரத்துல ஆறு பரண்களை அமைச்ச பிறகுதான் தெரிஞ்சது ஏழாவது பரணுக்கு ஆள் இல்லைன்னு தன் மகள் சூரி பத்தி சிந்தித்தான்.
நம் இடத்துக்கே எவனோ ஒரு வில்ல வந்து நம்ம பிள்ளையே கர்பபமாக்கியிருக்கானே அவன் யாரா இருக்கம்னு ஒரு கணம் யோசிச்சாலும் பத்து கிடாரம் பொண்ணுக்கு ஆசை பட்ட பேராசை பிடிச்ச காளிப்புலையன் தான் பெத்த பிள்ளையையே கூட்டிட்டு வந்து ஏழாவது பரண்ல ஏத்தி அவள் நெஞ்சைக் கீறி சுடலைக்கு ஊட்டாகக் கொடுத்தான்.
பார்த்தார் சுடலை இனியும் இந்த படுபாவி பயலை இந்தப் பூலோகத்தில் வச்சிருக்கப்படாதுன்னு நினைச்சி அவன் சிரசைக் கிள்ளி எறிஞ்சார் இப்படியாக காளிப்புலையனோட மகளும் செத்தாள் காளிப்புலையனும் செத்தான் அதன் பிறகு பொன் உள்ள கிடாரத்து காவல் இருக்கும் பூதங்களை ஆரக்கட்டிட்டு சுடலை ஒரு கிடாரம் பொன்னையும் ஒரே பொதியாக கட்டி மாயக்குதிரை மேலே ஏத்தி கொட்டாரக்கரை பகவதி அம்மன் கோயில்ல கிடாரம் இருந்த இடத்துலேயே திரும்பவும் ஒரு கிடாரம் பொன்னையும் கொண்டாந்து வச்சார்.
.சுடலையின் திறமையைப் பாராட்டிய பகவதி அம்மன் திரும்பவும் சுடலையையே அந்தக் கிடாரத்துக்கு காவலரா நியமிச்சா இன்னைக்கும் பகவதி அம்மன் கோட்டைக்கு சுடலை காவலா இருக்காரு இதுதான் கொட்டாரக்கரை கடலையோட வரலாறுன்னு சுடலையின் கதையைச் சொன்னார் பூவாங்குளம் என்ற ஊரைச் சேர்ந்த கோயில் பூசாரி பரமசிவன்

No comments: