கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, July 22, 2013

தாத்தா சொல்லும் கதைகள் 1

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கழுநீர்குளம் என்ற சிற்றூரில் வசித்து வருகிறார். �கதை சொல்லி� என்ற காலாண்டிதழின் பொறுப்பாசிரியர். நாட்டுப்புறவியல் சார்ந்து இதுவரை 20 நூல்களை எழுதியிருக்கிறார்.

கி.ராஜநாராயணன் கரிசல் காட்டு கதை சொல்லி என்றால், கழனியூரன் செவக்காட்டு கதை சொல்லி. சிறந்த களப்பணியாளர். இவரின் படைப்புகள் பலவும் களப்பணியின் மூலம் திரட்டிய தரவுகளால் உருவானவையே. கி.ரா.வின் சீடர் என்றும், கி.ரா.வின் வாரிசு என்றும் இலக்கிய உலகம் இவரை அழைக்கிறது.


பொங்கல் பண்டிகை பிறந்த கதை

- கழனியூரன்

பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒவ்வொரு பண்டிகைக்குப் பின்னாலும் ஒரு செய்தி அல்லது கதை நிச்சயமாக இருக்கும். ஆனால், நாளா வட்டத்தில் பண்டிகைகளின் முகம் மாறும்.

ஒரு குழந்தையின் முகத் தோற்றம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே இருப்பதைப் போல, பண்பாடு, கலாசாரம் சார்ந்த பண்டிகைகளின் முகமும் மாறிக்கொண்டே இருக்கும்.

பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களின் முதன்மையான பண்டிகை. ஆதி தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் பண்டிகை வேறு, இன்றை தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகை வேறு.

�மாற்றம் ஒன்றுதான் மாறாதது� என்று சொல்வார்கள். மாற்றம் என்பது உண்மையானது. ஆனால், அந்த மாற்றம் இயல்பாக நடைபெற வேண்டும்.

ஒரு சிற்பத்தின் மேல் தடவப்படும் வண்ணங்களால் ஏற்படும் மாற்றம் என்பது வேறு. சிற்பத்தின் உருவ அமைப்பையே மாற்றுவது என்பது வேறு.

இன்று நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் பொங்கல் பண்டிகையில் உண்மையான தத்துவார்த்தத்தை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

நாம் உண்ணும் உணவில், உடுத்தும் உடையில், அணியும் ஆபரணங்களில், இன்று பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதைப் போலவே, நமது கலாசாரம், பண்பாடு சார்ந்த பண்டிகைகளிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களின் முதன்மையான பண்டிகையாகும். இயற்கையை மிக இயல்பாக வழிபடும் பண்டிகையாகும்.

சூரிய சக்திதான் உலகில் முதன்மையான சக்தியாகும். எனவேதான் இளங்கோ அடிகள், தன் இயற்கை வழிபாட்டில், �ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்...� என்று பாடினார்.

சூரிய ஒளியில் இருந்தான், தாவரங்கள் சக்தி பெறுகின்றன. உழவனுக்கு சூரிய சக்தி மூலமே உணவு கிடைக்கிறது என்பது தெரிந்திருக்கிறது. எனவே தமிழர்கள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்க விரும்பி பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினார்கள்.

பூமி, தண்ணீர், காற்று, சூரிய சக்தி, மனித உழைப்பு & இவைகள் மூலமே உழவனுக்கு வருவாய் கிடைக்கிறது.

தன் பூமியில் விளைந்த நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசியை பொங்கலாகச் சமைத்து உழவர்கள்  பொங்கல் அன்று சூரியன் உதிக்கும் போது படையலாகப் படைத்து இயற்கையின் மூல சக்தியான சூரியனை வழிபட்டார்கள்.

தன் வயலில் விளைந்த கரும்பு, மஞ்சள் மற்றும் காய்கறிகளையும், பூக்களையும், கிழங்குகளையும், கனிகளையும் இயற்கையின் முன் படைத்து இயற்கையை வழிபட்ட தமிழர்களின் பண்டிகைதான் பொங்கல்.

யாகம் வளர்ப்பது அதில் தாணியங்களை அள்ளிப் போடுவது, அக்னியில் நெய் வார்ப்பது போன்ற வழிபாட்டு முறைகள் பொங்கல் அன்று நடைபெறுவது இல்லை.

பொங்கலையும், காய்கறிகளையும் ஒருவருக்கு ஒருவர் கொடுத்துக் கொண்டும், உறவுகளை மேம்படுத்திக்கொள்ளும் அன்புப் பண்டிகையாகும் பொங்கல்.

வீர விளையாட்டுக்களில் ஈடுபடுவதன் மூலம் தமிழர்களின் வீரத்தை வெளிக்காட்டும் பண்டிகையாகவும் பொங்கல் திகழ்கின்றது.

இன்று பொங்கல் பண்டிகை மிகவும் செயற்கையாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழ் புத்தாண்டின் துவக்கம் �தை� மாதத்தில் இருந்தே துவங்கியது. �தை பிறந்தால் வழி பிறக்கும்� என்பது பழமொழி.

பொங்கல் பண்டிகைக்குப் பின்னாலும் ஒரு சொல் கதை உள்ளது.

�சொல் கதைகளுக்கு கண்ணும் கிடையாது. காதும் கிடையாது� என்று கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்கள் சொல்வார்கள். சொல் கதைகளை அறிவுபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் அணுகவேண்டும்.

பிறந்த நாள் கொண்டாடும் வழக்கம், வெள்ளைக்காரர்களிடம் இருந்துதான் வந்தது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதி தமிழர்களிடமும் பிறந்த நாள் கொண்டாடும் பழக்கம் இருந்தது என்பதை இந்தச் சொல் கதை உறுதி செய்கிறது.

அந்தக் காலத்தில் தமிழர்களின் வருசப் பிறப்பு �தை� மாதத்தில் இருந்தே துவங்கி இருக்கிறது.

தை, மாசி, பங்குனி, சித்திரை முதலிய பன்னிரண்டு மாதங்களுக்குள்ளும் ஒரு நாள் சண்டை வந்தது. ஒவ்வொரு மாதமும் �நான்தான் தமிழ் வருசத்தின் முதல் மாதமாக இருப்பேன்� என்று கூறியதாம்.

யார், யாரெல்லாமோ வந்து மாதங்களின் சண்டையைத் தீர்த்து வைக்க முயற்சி செய்தார்களாம். ஒவ்வொரு மாதமும் என்னில் இருந்துதான் தமிழ் வருசப் பிறப்பு தோன்ற வேண்டும் என்பதற்கு ஆளுக்கு ஒரு காரணத்தைக் கூறியதாம்.

பூமியில் யாராலும், மாதங்களுக்குள் நடைபெற்ற சண்டையைத் தீர்த்துவைக்க முடியவில்லை.

கடைசியில் மாதங்கள் அனைத்தும் அணிவகுத்து கடவுளிடம் சென்று தங்கள் வழக்கைக் கூறின.

கடவுள் ஒவ்வொரு மாதங்களின் தனிச் சிறப்பையும் கேட்டு, �வருடத்தின் முதல் மாதமாக இருக்கும் தகுதி தை மாதத்திற்கே இருக்கிறது� என்று தீர்ப்புக் கூறினார்.

கடவுளே சொன்னதால் மற்ற மாதங்கள் எல்லாம், தை மாதத்தையே, வருசத்தின் முதல் மாதமாக ஏற்றுக்கொண்டன.

கடவுள் தை மாதத்தைப் பார்த்து �� உனக்கு ஏதாவது ஆசை இருந்தால் சொல் அதை நிறைவேற்றி வைக்கிறேன்�� என்றார்.

தை மகள், கடவுளிடம் �என் (தை மாதத்தின்) முதல் நாளை (தமிழ் வருசப் பிறப்பு நாளை) அதாவது தமிழ் வருடத்தின் பிறந்தநாளை மக்கள் எல்லாம் ஒரு விழாவாகக் கொண்டாட வேண்டும்�� என்ற வேண்டுகோளை வைத்தாள்.

கடவுளும் தை மகளின் வேண்டுகோளை ஏற்று �தை முதல் நாளை (தமிழ் வருசப் பிறப்பு நாளை) இனி மேல் தமிழர்கள் யாவரும் பொங்கல் விழாவாகக் கொண்டாடுவார்கள்� என்று சொன்னார்.

வருசம் தன் பிறந்தநாளைக் கொண்டாட ஆரம்பத்தில் இருந்துதான், மனிதர்களும் தன் பிறந்த நாளைக் கொண்டாட ஆரம்பித்தார்கள் என்று பொங்கல் பண்டிகை பற்றிய சொல் கதையைக் கூறினார், கதை சொல்லி ஒருவர்.

பொங்கல் பண்டிகை, உழவர்களின் திருநாளாகக் கொண்டாடப் படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழைய துணி, மணிகளையும், கழிவான பொருட்களையும் அழித்து சுற்றுச்சூழலை மேம்படுத்துகிறது போகிப் பண்டிகை.

�சுற்றுச்சூழல் சார்ந்த இதுபோன்ற பண்டிகையை உலகத்தில் மக்கள் வேறு எங்காவது கொண்டாடுகிறார்களா?� என்று தெரியவில்லை. �போகி� என்பது பொங்கலோடு தொடர்புடைய சூழல் அறிவியல் சார்ந்த பண்டிகையாகும்.

பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தன் உழவுத் தொழிலுக்கு உதவிய வாயில்லாத ஜீவன்களுக்கும் ஒரு பண்டிகையை தமிழர்கள் கொண்டாடுகிறார்கள்.

�மாடுகளுக்கு என்று ஒரு தனிப் பண்டிகையை வேறு எந்த மாநிலத்தவர்களாவது கொண்டாடுகிறார்களா?� என்று எனக்குத் தெரியவில்லை.

உழவுதான் தமிழர்களின் முக்கியமான தொழில். எனவேதான் உழவர்களின் பண்டிகையாகவும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. �அறுவடைத் திருநாள்� என்ற பெயரும் பொங்கல் பண்டிகைக்கு உள்ளது.

�அறுவடை நாளை� திருநாளாகக் கொண்டாடும் மரபு உலகில் பல நாடுகளில் இன்றும் நடைமுறையில் உள்ளது.

தமிழர்களின் கலாச்சாரம் சார்ந்த பண்பாடு சார்ந்த பண்டிகைகளின் வரலாற்றை இன்றைய தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இன்று தமிழகம் பல இனக்குழு மக்களின் கலவைக்கூடமாகத் திகழ்கின்றது. அறிவியல் வளர்ச்சியில் பன்னாட்டு வணிக வரவால் தமிழகத்தின் முகம் மாறிவிட்டது. எனவே, பொங்கல் போன்ற ஆதி பண்டிகைகளின் வடிவமும் சிதைந்துவிட்டது. பொங்கல் பண்டிகைக்குள்ளும் செயற்கைத் தன்மைகள் புகுந்து விட்டது. இனி அதை யாரும் மீட்டுருவாக்கம் செய்ய முடியாது. என்றாலும் எஞ்சிய வடிவத்தையாவது மேலும் சிதையாமல் காத்திட நாம் முயல வேண்டும்.

நகரங்களில் குக்கரில் பொங்கல் வைத்து, பக்கத்துக்கடையில் ஒரு கொலை மஞ்சளும், ஒரு துண்டு கரும்பும், வழக்கத்துக்கு மாறாக கூடுதலாக கொஞ்சம் அதிகமாக காய்களும், கிழங்குகளும் வாங்கி பொங்கல் பொங்கியாச்சு என்று உறவினர்களிடம் செல் பேசியில் பேசி மகிழ்ந்துவிட்டு, பொங்கல் என்ற விடுமுறை நாளை தொலைக்காட்சியின் முன் அமர்ந்து பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்து பொங்கல் பண்டிகையை கொண்டாடி முடித்துவிடுகிறார்கள்

No comments: