கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-22 கொட்டைச்சாமி கதை

கல்கி வார இதழின் ஆசிரியர் குறுஞ்சாமிகளின் கதைகளை மையமாகக் கொண்டு ஒரு தொடரை எழுதச் சொன்னதால், குறுஞ்சாமிகளின் கதைகளைத்தேடி ஊர், ஊராய் அலைந்தேன். அப்படி அலைந்து திரிந்து சேகரித்த கதைகளில் பல அத்தொடரில் பிரசுரமாகியது. சில கதைகளை கல்கி வார இதழ் ‘பிரசுரிக்க முடியாது’ என்று நிராகரித்துவிட்டது.

கல்கி வார இதழ் பிரசுரிக்காமல் நிராகரித்த கதைகளில் ஒன்றை இப்போது உயிரோசை வார இதழின் வாசகர்களுக்கு வழங்குகிறேன். இக்கதையைப் படித்து முடித்ததும் கல்கி வார இதழின் ஆசிரியர் ஏன் இக்கதையைப் பிரசுரிக்கவில்லை என்பதற்கான காரணத்தை நீங்களே யூகித்துக் கொள்வீர்கள்.

தரையில் மாடு சாணி போட்டால் அதில் மண் ஒட்டாமல் இருக்குமா? அதுபோலத்தான் இந்த நாட்டார் மரபுகள். இவைகளில் சில தரவுகள் அறக்கழிவான செய்தியாகவோ, அல்லது பாலியல் பதிவுகளாகவோ அமைந்துவிடுகின்றன.

கவுச்சி வாடையுள்ள ஒரு குறுஞ்சாமிக் கதை இது. இக்கதையின் தலைப்பே ‘கொட்டைச்சாமி கதை’ என்பதுதான். இத்தலைப்பில் வரும் ‘கொட்டை’ என்ற சொல் ஆண்குறியுடன் இணைந்த ‘விதைக்கொட்டை’யைத்தான் குறிக்கிறது.

ஆண்குறியுடன் தொடர்புடைய ஒரு உறுப்பின் பெயரையே தான் வணங்கும் சாமிக்குச் சூட்டி மகிழ்ந்த மக்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை!

நாட்டார் தரவுகளில் பாலியல் பதிவுகள் மிக இயல்பாக எளிமையாக அமைந்துவிடுகின்றன. ‘கஷ்டப்பட்டு உழைக்காமல் வெற்றி பெற முடியாது’ என்ற கருத்தைக் கூற விரும்பும் தாத்தா, ‘புடுக்குப் படாமல் நொட்ட முடியுமா?’ என்று மிக இயல்பாக ஒரு உவமையைச் சொல்லிவிடுகிறார். (‘நொட்ட’-என்ற வட்டார வழக்குச் சொல்லுக்கு ‘உடலுறவு கொள்ள’ என்று பொருள்.)

பனையின் உச்சிவரை ஏறி நொங்கை வெட்ட முடியாமல் இறங்கி விடுகிறவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே தாத்தா ‘தொடைக்கு அது தூரமாலே! ’ என்று கேட்டு விடுகிறார்.

இப்படிப்பட்ட பாலியல்சார் பதிவுகளும் சேர்ந்ததுதான் நாட்டார் தரவுகள். இந்த அலைவரிசையுடன் இன்று நான் சொல்லப்போகும் குறுஞ்சாமியின் கதையையும் வாசகர்கள் உள் வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதால்தான் இத்தனை பீடிகை.

சரி, இனி கதைக்குள் செல்வோமா?

ஒரு ஊர்ல ‘சங்கன்’ என்று ஒருத்தன் இருந்தான். அவன் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவன். ஆள் பார்க்க லெட்சணமாக இருந்தான். ஓங்கல் தாங்கலான உடம்பு அவனுக்கு. உத்திரக் கட்டை மாதிரி கைகால்கள் இருந்தன. சிலம்பு விளையாட்டில் மகா கெட்டிக்காரன். வீரதீரச் செயல்களை விரும்பிச் செய்வான்.

அந்த நாட்டின் ஜமீன்தார் சங்கனின் திறமைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு அவனைக் கூப்பிட்டு, அவனது திறமைகளைச் சோதித்துப் பார்த்து அவனுக்குத் தன் ஜமீனில் காவல்காரன் வேலை கொடுத்தார்.

சங்கனுக்கு வினோதமான ஒரு குணம் இருந்தது. ஆட்டுக் கிடாயை யார் அறுத்தாலும், அவர்களிடம் சென்று ஆட்டுக்கிடாயின் கொட்டையை மட்டும் கூசாமல் கேட்டு வாங்கி வந்து அதைக் குழம்பு வைத்து அல்லது அதில் மசாலா தடவி அதைச் சுட்டுச் சாப்பிட்டு விடுவான்.

இப்படிப்பட்ட வினோதமான உணவுப்பழக்கம் இருந்ததால் அந்தப் பகுதி மக்கள் சங்கனை, ‘கொட்டைச்சங்கன்’ என்று பட்டப் பெயர் சொல்லி அழைத்தார்கள்.

அந்தக் காலத்தில், ‘ஒரு நாட்டில் இருந்து இன்னோர் நாட்டிற்கு வியாபாரம் செய்ய வந்தாலோ, அல்லது ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி வந்தாலோ, அந்த நாட்டு ராஜாவிடம் அல்லது அப்பகுதியை ஆளும் ஜமீன்தாரிடம் அனுமதி பெற வேண்டும்’ என்ற வழக்கம் இருந்தது.

ஒருநாள், சங்கன் காட்டு வழியே செல்லும்போது அங்கே புதிதாகச் சில கீதாரிகள் (அடுத்த நாட்டைச் சேர்ந்தவர்கள்) கூட்டங் கூட்டமாகத் தன் ஆட்டு மந்தைகளை மேய்ச்சல் நிலத்தில் விட்டு மேய்த்துக் கொண்டிருந்தார்கள்.

வெளிநாட்டின் ஆட்டுமந்தைகளை மேய்க்கும் கீதாரிகளைப் பார்த்து சங்கன், "நீங்கள் இன்று மாலைக்குள் எங்கள் ஜமீன்தாரைச் சந்தித்து ஆடுகளை இங்குள்ள மேய்ச்சல் நிலத்தில் மேய்க்க அனுமதி பெற வேண்டும். இல்லை என்றால் ஆட்டு மந்தைகளை இங்கிருந்து ஓட்டிச் சென்றுவிட வேண்டும்" என்று கறாராகச் சொல்லிவிட்டான்.

அன்று மாலையே கீதாரிகள் ஜமீன்தாரை வந்து சந்தித்தார்கள். ஜமீன்தார், கீதாரிகளைப் பார்த்து "நீங்கள் என் ஆட்சிக்குட்பட்ட மேய்ச்சல் நிலத்தில் ஆட்டு மந்தைகளை மேய்த்துக் கொள்வதற்குக் கூலியாக வாரம் தோறும் ஒரு கிடாயை அரண்மனைக்குக் காணிக்கையாகக் கொடுத்து விடவேண்டும்" என்றார்.

கீதாரிகள் எல்லாம் ஒரே குரலில் "மகராசா, எங்கள் ஆட்டு மந்தைகளில் ஆசைக்கு ஒரு கிடாய் கூடக் கிடையாது. எல்லாம் பொட்டை ஆடுகள்தான்" என்று பொய் சொன்னார்கள்.

மகாராசா, கீதாரிகளைப் பார்த்து, "அப்ப சரி, உங்க நாட்டில் மழை பெய்து "புல், புளிச்சி" முளைக்கும் வரை எங்க காட்டில் ஆடுகளை மேய்த்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டார்.

கீதாரிகளும் மகாராசாவிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்கள்.

சங்கன் வந்ததும் மகாராசா அவனிடம், "கீதாரிகள் தன் ஆட்டு மந்தைகளில் ஆசைக்கு ஒரு கிடாய் கூட இல்லை என்று சொல்கிறார்களே!" என்றார்.

சங்கன் மகாராசாவைப் பார்த்து, "அது எப்படி மகாராசா, ஆட்டு மந்தையில் ஒரு கிடாய் கூட இல்லாமல் இருக்கும்? கிடாய்கள் இல்லாமல் பொட்டை ஆடுகள் எப்படிப் பலப்படும்? (செனையாகும்). பொட்டை ஆடுகள் பலப்படாமல் எப்படி குட்டி போடும்? ஆட்டு மந்தை பெருகும்?" என்று கேட்டுவிட்டு, "சரி மகாராசா, நீங்கள் உத்தரவு கொடுத்தால் அந்தக் கீதாரிகளுக்கு நான் பாடம் புகட்டுகிறேன்." என்றான்.

"சங்கா, உன் இஷ்டம்போல் செய்துகொள்!" என்று மகாராசாவும் சங்கனுக்கு அனுமதி கொடுத்துவிட்டார்.

சங்கனுக்கு நாக்குத் துடித்தது. ஆட்டுக் கொட்டைகளை அவிச்சித் தின்று, சுட்டுத்தின்று வெகு நாளாயிற்றே, என்று நினைத்து அன்று இரவே நடுச்சாமம்போல, ஆட்டுக் கிடைகள் கிடந்த காட்டிற்குச் சென்றான் சங்கன்.

இரவோடு இரவாக, இருட்டுக்குள், கறுப்புப்போர்வை ஒன்றைப் போர்த்திக் கொண்டு, பையப்பைய, நரி மாதிரி தந்திரமாக, கீதாரிகள் கண் அசந்த நேரம் பார்த்து ஆட்டு மந்தைக்குள் புகுந்தான்.

மெல்ல, தடவித் தடவிப் பார்த்து மூணுதிருக்குப் போட்ட கொம்புள்ள ஒரு கிடாயின் வாயைப் பிடித்துப் பொத்தினான். பிறகு கிடாயின் வாயை ஒரு நார்க் கயிற்றால் இறுகக் கட்டினான். பின்னர், கிடாயின் ‘விதைக் கொட்டை’களை மட்டும் ஒரு பாளை அருவாளால் ‘கிரிச்’ சென்று அறுத்தான். வாயைக் கட்டி இருந்ததால் விதைக் கொட்டை அறுபட்டாலும் கிடாயால் சத்தம் போட முடியவில்லை. ஆட்டுக் கிடாயின் விதைக் கொட்டைகளை எடுத்துக் கொண்டு சந்தோசமாக சங்கன் இருட்டோடு இருட்டாக நழுவிவிட்டான்.

மறுநாள் காலையில் விதைக் கொட்டைகள் மட்டும் அறுபட்ட நிலையில் செத்துக்கிடக்கும் ஆட்டுக்கிடாயைப் பார்த்துக் கீதாரிகள் அசந்துவிட்டார்கள்.

தன் மந்தையில் கிடாய்களே இல்லை என்று மகாராசா விடமே சொல்லிவிட்டதால், கிடாய் ஒன்று செத்துக்கிடந்த ஆவலாதியை அரண்மனைக்கும் கீதாரிகளால் கொண்டு செல்ல முடியவில்லை. செத்த கிடாயை சமைத்துச் சாப்பிட்டார்கள் ஆடுமேய்ப்பவர்கள்.

சங்கன் நாக்குத்துடிக்கும்போதெல்லாம் ஆட்டு மந்தைக்குள் ராவோடு, ராவாகப் புகுந்து, கிடாயின் கொட்டைகளை அறுத்துக் கொண்டு வந்து சமைத்து ருசித்துச் சாப்பிட்டான்.

கீதாரிகள் கிடாயின் கொட்டைகளைக் களவாடும் கள்ளனைப் பிடிக்க ‘கங்கணம்’ கட்ட ஆரம்பித்தார்கள். ‘ஒரே மாதிரியான யுக்தியைப் பயன்படுத்தும் திருடர்கள் ஒருநாள் இல்லை என்றால் மறுநாள் மாட்டிக் கொள்வார்கள்.’ என்பதற்கு ஏற்ப ஒருநாள் கிடாய்க் கொட்டை களவாங்கப் போன சங்கனனைப் பிடித்துக் கொண்டார்கள் கீதாரிகள்.

ஆட்டு மந்தைகளின் இனவிருத்திக்குப் பயன்படும் ஆட்டுக்கிடாய்களின் கொட்டைகளை மட்டும் களவாடிய சங்கனின் விதைக் கொட்டைகளை பழிக்குப் பழியாக அறுத்துவிட்டார்கள் கீதாரிகள்.

உயிர்த்தலத்தில் உதிரம் பெரும் போக்காகப் போனதால் சங்கன் அந்த இடத்திலேயே செத்துவிழுந்தான். கீதாரிகள் சங்கனை அந்த இடத்திலேயே ஒரு குழி தோண்டிப் புதைத்தார்கள். சங்கனைப் புதைத்த இடத்தில் ஒரு நடுகல்லையும் நட்டு வைத்தார்கள்.

அடுத்த நாள் முதல் ஆட்டுமந்தையில் உள்ள ஆடுகள் கொத்துக் கொத்தாகக் கொள்ளை நோய் வந்ததுபோல் செத்துமடிந்தன. கீதாரிகளில் ஒருத்தன் மறுநாள் அருள் வந்து ஆடி, "நீங்கள் கொடூரமாகக் கொலை செய்த சங்கனுக்கு கோயில் கட்டிக் கும்பிட வேண்டும், இல்லை என்றால் ஆட்டு மந்தையே அழிந்து விடும்" என்றார்.

கீதாரிகள் சேர்ந்து சங்கனை அடக்கம் செய்த இடத்தில் ஒரு பூடம் கட்டிச் சங்கனை ‘கொட்டைச் சாமி’ என்று கும்பிட்டார்கள். அதன் பின் ஆட்டுமந்தை கொள்ளை நோயில் இருந்து மீண்டது.

கொட்டைச் சாமிக்கு இன்றும் ஆட்டுக் கிடாயின் விதைக் கொட்டையையே பிரசாதமாகப் படைத்துக் கீதாரிகள் கொட்டைச் சாமியைக் கும்பிடுகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கலங்காப் பேரி என்ற இடத்தில் இக் குறுஞ்சாமியின் கோயில் உள்ளது. கொட்டைச் சாமியை இன்று கோனார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் கூட்டாகக் கும்பிடுகிறார்கள்.

குறுஞ்சாமிகளில்தான் எத்தனை ரகம்? எனது ‘குறுஞ்சாமிகளின் கதைகள்’ என்ற நூலை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது

No comments: