கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள் -30 முஸ்லீம் நாட்டாரியல் - தாலாட்டு

இலக்கியம் ஒருபுறம் நவீனப்பட்டுக் கொண்டே வந்தாலும், மறுபுறம் தன் ஆதி வடிவத்தை வெவ்வேறு விதங்களில் புதுப்பித்துக் கொண்டே வருகிறது. தாலாட்டு என்ற வாய்மொழிப்பாட்டு, மறைந்து வழக்கொழிந்து கொண்டு வரும்போது, அதே தாலாட்டு எழுத்து மொழியில் அம்மானை, தாலாட்டு என்று மாற்றுருவம் பெற்று படைப்பிலக்கியமாக மக்கள் மத்தியில் வலம் வருகிறது.

அம்மானை என்ற சிற்றிலக்கியத்தின் ஆணிவேர் பெண்கள் பாடிய தாலாட்டுப் பாடல்களே. தாலாட்டுப் பாடல்களின் சாயலில் பிற்காலத்தில் கவியரசர் கண்ணதாசனால் இயற்றப்பட்ட திரையிசைப் பாடல்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இஸ்லாமியப் பெண்கள் பாடிய தாலாட்டுப் பாடல்களைப் போலவே பிற்காலத்தில், இஸ்லாமியப் புலவர்கள் சிலரால், இலக்கியத் தாலாட்டுப் பாடல்கள் பல இயற்றப்பட்டன. இவைகளையும் இஸ்லாமிய நாட்டார் செல்வங்கள் என்று வரிசைப்படுத்தலாம். இனி, பிற்கால இஸ்லாமியப் புலவர்களும், மகான்களும் இயற்றிய சில இலக்கியத் தாலாட்டுப் பாடல்களைப் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.

தாலாட்டுப் பாடல்களின் இசையும், சந்த லயமும், மக்கள் அப்பாடல்களை எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள உதவுகின்றன. எளிமையான, இனிமையான பாடல்வரிகள் அனைவரையும் கவர்கின்றன. எனவே, ‘தாலாட்டு’ என்ற நாட்டார் கலை வடிவம் இலக்கியமாகப் படைக்கப்படும்போது அவை அனைவராலும் கவனிக்கப்படுகின்றன.

திருநெல்வேலி நகருக்கு அருகில் உள்ள பேட்டை என்ற ஊரில் வாழ்ந்த முத்தமிழ் மதியமிர்தப் புலவர் அவர்கள் இயற்றிய இஸ்லாமியத் தாலாட்டு என்ற நூல் ஐம்பது கண்ணிகளைக் கொண்டது. அக்கண்ணிகளில் ஒன்றை மட்டும் மாதிரிக்காக வாசகர்கள் முன் வைக்கிறேன்.

மார்க்க சட்ட திட்டங்களுக்கு எதிரான அனாச்சாரங்களை விலக்கி விடுவதில், குறிப்பாக மூட நம்பிக்கைகள், சகுனம், சாஸ்திரம், சம்பிரதாயம் பார்ப்பது, பில்லி, சூனியம், ஏவல் செய்வது போன்ற இணை வைக்கும் விசயங்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை,

சகுனம் குறிகள் பக்ஷி
சாஸ்திரமும் ஜோதிடமும்
தகுதியெனக் கேட்டலையும்
தவறை விடு கண்மணியே!

சொல்லும் பலாய் முஸீபத்
சூனியங்கள் ஏவல் பில்லி
எல்லாம் அகற்ற நிதம்
இறைவனைக் கேள் கண்மணியே!
என்ற தாலாட்டுப் பாடல் மூலம் கவிஞர் விளக்குகின்றார்.

நாகப்பட்டணம் வட்டத்தில் உள்ள இரட்டமத கடி என்ற ஊரில் வசித்து வரும் கவிஞர் ஆதம் குமார் (எ) எம்.ஏ.அப்துல் ஹாதி, உம்தத்துல் இக்வான் (பி) நஸாயிஹீல் லுக்மான் என்னும் நூலைத் தழுவி, தமிழில் உபதேசத் தாலாட்டு என்ற நூலை இயற்றியுள்ளார். அதில் உள்ள சில பாடல் வரிகளை மட்டும் இங்கு தருகிறேன்.

“வருவாய்க்குத் தகுந்தாற் போல் செலவீந்திடு
வரும் நாளை மனம் வைத்தே செயலாற்றிடு
வருகின்ற விருந்தாளர்க்கு உணவீந்திடு
வகையற்ற ஏழைக்குத் தனமீந்திடு
பெறுகின்ற வேலையிலே பொறுப்பாயிரு
போம் வீட்டில் கண், நாவின் தடுப்பாயிறு!”

இப்பாடல் பெயருக்கு ஏற்றாற்போல் நல்ல உபதேசங்களை வாழ்கின்ற மக்களுக்கு வாரி வழங்குகிறது. இந்த நூல் இன்னும் அச்சேரவில்லை என்பது பெரும் சோகமாகும்.



 இலங்கையைச் சேர்ந்த ஜனாபா சாரணா கையூம் அவர்கள் ‘இஸ்லாமிய தாலாட்டு மாலை’ என்ற நூலை வெளியிட்டுள்ளார்கள். அதில் சில பாடல்களை வாசகர்கள் முன் வைக்கிறேன்.

நோய் பிணி துன்பம் வந்தால்
நேர்ச்சை வைத்துக் கொண்டாடும்
பேயோட்டி கூத்தெல்லாம்
பித்அத்தாகும் கண்மணியே!

பால் பார்த்து பக்குவமாய்
பெயர் வைத்து குறி சொல்லும்
மாய்மாயப் பேர்வழியை
மதியாதே கண்மணியே!

இப்பாடல் வரிகள் மௌடீகப் பழக்க வழக்கங்களைக் கண்டிக்கின்றன. இப்பாடல்களைப் படைத்த கவிஞர் பெண் என்பதால், பெண்களுக்கு ஆதரவாகவும், ஒரு தாலாட்டுப் பாடலை,

‘பெண்குலத்தை இழிவு செய்து
பகடையாய் ஆட்டி வைக்கும்
கண்கெட்ட பாவிகளைக்
காறியுமிழ் கண்மணியே!’
என்று பாடியுள்ளார்.





இத்தொகுப்பில் கடைசியாக வரும் பாடல் சிறந்த இலக்கியப் பிரதியாகக் கலையழகுடன் திகழ்கிறது. இதோ அப்பாடல்,

கண்ணுறங்கு கண்ணுறங்கு
விண்ணுறங்கிப் பொழுதாச்சு
மண்ணுறங்கி விழிக்கு முன்னே
மன்னவனே நீ உறங்கு!

‘வானம் பகலெல்லாம் உறங்குகிறதாம் அதனால் ‘அந்தி’ என்ற பொழுது வந்ததாம். மண் இரவெல்லாம் உறங்குகிறதாம். அதனால் ‘விடியல்’ பொழுது வந்ததாம்’ என்ற கற்பனை மிகவும் ரசிக்கும் படியாக உள்ளது.

கவிஞர் சாரண பாஸ்கரனார் (எ) டி.எம்.அஹ்மத் அவர்கள் தன் மகனுக்கு எழுதிய தாலாட்டுப் பாடல்கள் சுவையாக உள்ளது. அதிலிருந்து ஒரு பாடலைப் பார்ப்போம்.

தள்ளாடிக் காலூன்றித்
தகிங்கனத்தோம் தாளமிட்டு
சொல்லாட வந்தவனே
சோர்வகற்றத் தூங்கி விழி! என்ற பாடலில் குழந்தையின் தளர் நடை பற்றிய வர்ணனை மிக அழகாகப் பதிவாகியுள்ளது.
கவிஞர் காயல் பிறைக் கொடியான் இயற்றியுள்ள தாலாட்டுப் பாடலில், எதுகையும் மோனையும் பின்னிப் பிணைந்துள்ளன.


பொன்னே! பெருநிதியே!
பேரன்புப் பெட்டகமே...!
கண்ணே! கனிரசமே!
கண்மணியே கண்ணுறங்கு..!
தேனே! திரவியமே!
தெவிட்டாத தீங்கனியே!
மானே! மரிக்கொழுந்தே!
மனமுவந்து கண்ணுறங்கு!
இந்தத் தாலாட்டில் செந்தமிழ் வார்த்தைகள் இசையோடு இயைந்து வந்து அடுக்கடுக்காய் நிற்பதால், இப்பாடல் படிப்பவர்க்கு ஒருவித ஓசை இன்பத்தைக் கொடுக்கின்றன.
அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் சந்ததியரான கீழக்கரையைச் சேர்ந்த ஜனாபா செய்யது ஆமினா சுஐபு ஆலிம் என்ற பெண்பால் கவிஞர் பாடியுள்ள ஒரு தாலாட்டுப் பாடலில் எத்தனை கனிகள் அணிவகுத்து நிற்கின்றன பாருங்கள்.

அத்திப் பழமே! சிவந்த
அருங்கதழி, மாதுளையே!
முத்திப் பலா மாங்கனியே!
உயர்வான மலைப் பழமே!
சுத்தம் தரும் தேன் கரும்பே!
துய்ய பேரீத்தங்க குலையே!
நித்தம் தெவிட்டாத கனி
முஹம்மது பின் காதிருவே!
எத்தனை முறை பாடினாலும் சலிக்காத சுவையுடன் இப்பாடல் இனிக்கிறது.
நபிகள் நாயகம் மேல் ஒரு கவிஞர் ‘நபி மேல் தாலாட்டு’ என்று பாடியுள்ளார். நாயகத்தின் வரலாற்றை உள்ளடக்கிய இந்தத் தாலாட்டுப் பாடல்கள் இலக்கியப் பிரதியாகவும், நாட்டார் பதிவாகவும் திகழ்கின்றன. அந்தப் பாடலில் இருந்து ஒருசில வரிகளை வாசகர்களுக்குத் தருகிறேன்.

வெண்மதியை அழைத்த நபி
விரல் நதியால் தாகம் தீர்த்த நபி
ஹக்கன் அருள் பெற்ற நபி
மஹ்ஷரினில் காக்கும் நபி

வள்ளல் நபி ஆதாமுக்கு
வரும் துயரம் தீர்த்த நபி
வெள்ளம் தனில் நூஹுதனை
வெளிவரச் செய்த நபி... என்று நீள்கிறது ‘நபி மேல் தாலாட்டு’ ‘விரல் நதியால் தாகம் தீர்த்த நபி’ என்ற வரியில் உள்ள உவமை பாராட்டும் படியாக அமைந்துள்ளது.

தத்துவக் கவிஞர் இ.பதுருத்தீன் அவர்கள் இயற்றியுள்ள ‘கண்மணிக்குத் தாலாட்டு’ என்ற பாடல் சிறந்த இலக்கியத் தரத்துடன் உள்ளது.

தேனுக்குள் தேனெடுத்து
தென்றலிலே சாறெடுத்து
மானுக்குள் விழியெடுத்த
பூங்கொழுந்தே!
மாணிக்கக் கண்வளராய்
தீன் கொழுந்தே!
 இப்பாடலில் உள்ள ‘தேனுக்குள் தேன் எடுத்து’, ‘தென்றலிலே சாறெடுத்து’ என்ற வரிகளில் உள்ள இலக்கிய நயம் போற்றிப் பாராட்டப்படத்தக்கதாக உள்ளது.

இலக்கியத் தாலாட்டுகளில் ஞானவழித் தாலாட்டு என்று ஒரு பிரிவும் உள்ளது.

கீழக்கரை மற்றும் காயல்பட்டிணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் வாழும் இஸ்லாமியப் பெண்களிடையே பிரசித்தமானது. அரபுத் தமிழில் எழுதப்பட்ட ‘மஃரிபத் ஆராட்டு’ என்ற பாடல்கள். இப்பாடல்கள் யாவும் மெய்ஞானப் படித்தரங்களின் சூட்சுமங்களைத் தன் மகளுக்குப் புரிய வைப்பதுபோல் எழுதப்பட்டுள்ளது.

அல்லாமா மாப்பிளை லெப்பை ஆலீம் என்ற சையிது முஹம்மது அவர்கள் இயற்றியுள்ள ஞானவழித் தாலாட்டுப் பாடலின் முதல் கண்ணிக்கு மட்டும் விளக்கம் எழுதுவது என்றால் அதுவே தனித்த ஒரு தத்துவார்த்தமான கட்டுரையாகிவிடும். அந்த அளவிற்கு அடர்த்தியான கருத்துக் கருவூலமாக அப்பாடல் வரிகள் திகழ்கின்றன. இனி அந்த ஞானத் தாலாட்டின் முதல் கண்ணியை மட்டும் வாசகர்கள் முன் வைக்கிறேன். வாசகர்கள் சிந்தனை முத்துகளை எடுக்க முயற்சி செய்யுங்கள்.

ஆராரோ ஆராரோ
ஆராரோ வேறாரோ
ஆரென்பதாரோ நீ
ஆராய்ந்து அறிந்திடு புத்திரியே!

ஆடும் சரம் தனிலே அசையாமல்
ஆறைந்தையும் இது
ஓடும் குதிரையென்றே உழாத்தி
சுழாற்றிக் கொள் புத்திரியே!

இக்கட்டுரையில் உள்ள இலக்கியத் தாலாட்டுப் பாடல்கள் யாவும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நம் தாய்மார்கள் பாடிய அல்லது பாடிக் கொண்டிருக்கிற தாலாட்டுப் பாடல்களின் தாக்கத்தால் எழுந்தவைகளே. எனவே இலக்கியத் தாலாட்டுப் பாடல்களையும் நம் இஸ்லாமிய நாட்டார் மரபுகளில் சேர்த்துக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன்.

இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள இலக்கியத் தாலாட்டுப் பாடல்கள் யாவும் சகோதரியார், எழுத்தாளர்கள் ஜனாபா, பாத்திமுத்து சித்திக் அவர்கள் சமீபத்தில் பாமு பதிப்பகம் வாயிலாக வெளியிட்டுள்ள ‘கண்மணியே கண்ணுறங்கு - இன்பத் தமிழில் இஸ்லாமியர் தாலாட்டு’ என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரும்பாடுபட்டு இஸ்லாமியத் தாலாட்டுப் பாடல்களைத் திரட்டி நூலாக வெளியிட்டுள்ள சகோதரியார் - பாத்தி முத்து சித்திக் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பின்குறிப்பு

முஸ்லீம்கள் தங்களுக்குள் புழங்கிக் கொள்ளும் சில கலைச் சொற்களுக்கான பொருளை கீழேத் தருகிறேன் (கட்டுரையில் உள்ளது)

பலாய், மூஸீபத் - துன்பம், கேடு

பித்அத்தாகும் - தவிர்க்க வேண்டியதாகும்

பால் பார்த்து - பால் கித்தாப் பார்த்து (பால் கித்தாப் பார்த்து மௌலவிகள் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டுவது)

ஹக்கன் - இறைவன்

மஹ்ஷரில் - மறுமையில்

படித்தரங்களின் - தத்துவங்களின்

No comments: