கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-21 பல்லுக்கு மெதுவான கல்

வாசகர்களே, இந்த வாரம் ஒரு செவிவழிக்கதை சொல்கிறேன் கேளுங்க. ஒரு ஊர்ல ஒரு யாவாரி (வியாபாரி) இருந்தான். அவன் வியாபாரம் செய்து நிறைய காசு பணம் சேர்த்து வச்சிருந்தான்.

அவன் கொஞ்சம் சுபாபமான ஆள். அவனுக்கு ஒருத்தியைக் கட்டி வச்சாங்க. அவளும் சுபாபமானவள்தான். ரெண்டுபேரும் சந்தோசமா வாழ்ந்துக்கிட்டு இருந்தாங்க.

கல்யாணமாயி பத்து வருசமாயிட்டு. பொண்டாட்டிக்காரி வயித்துல ஒரு புழு, பூச்சிகூட தருவலை. ஊர்க்காரர்கள் அவளை ‘மலடி’ன்னு ஏசினாங்க. என்றாலும் பொண்டாட்டியும் புருசனும் ரொம்பச் சந்தோசமாகத்தான் வாழ்ந்துக்கிட்டு இருந்தாங்க.

இப்படியாக இருக்கும்போது யார் கண்ணு பட்டிச்சோ ஒரு நாள் அவளை ஒரு பாம்பு கடிச்சிருச்சி. அந்த இடத்துலயே வியாபாரி பொண்டாட்டி நுரை தள்ளிச் செத்துட்டா.

வியாபாரிக்கு ஆயி, அப்பன் எல்லாம் ஏற்கனவே செத்துப் போயிருந்தாங்க. கூடப்பிறந்த பிறப்புகளும் அவனுக்குக் கிடையாது.

பொண்டாட்டி செத்துப்போனதால, வியாபாரி, தானே கையால காச்சிக்குடிச்சிக்கிட்டு இருந்தான். அவன் சும்மா இருந்தாலும் ஊர் உலகம் சும்மா இருக்கவிடுமா? "எப்பா, உனக்குத்தான் ஏகப்பட்ட வசதி வாய்ப்பு இருக்கே! உனக்கென்ன வயசா போயிட்டு. .? நீயேன் கையால காச்சிக் குடிச்சிக்கிட்டுக் கஸ்டப்படுதே. ரெண்டாந்தாரமா ஒருத்தியைக் கட்டிக்கிட வேண்டியதுதானே! மூத்தாள் வயித்துலதான் ஒரு புழுப்பூச்சிகூட தங்கலை. உன் கண்ணுக்குப் பிறகு உன் சொத்து சுகங்களை ஆண்டு அனுபவிக்க உனக்குன்னு ஒரு வாரிசு வேண்டாமா. . ? " என்று பலவாறு சொல்லி அவனைக் கிளப்பிவிட்டார்கள்.

அவனுக்குத் தூரத்து உறவில் ஒரு சித்திக்காரி இருந்தாள். அவள் ஊர், ஊராப் போயி வியாபாரிக்குப் பெண் பார்க்க ஆரம்பித்தாள். கடைசியில் ஒரு அழகான பெண்ணைப் பார்த்துப் பேசியும் முடித்துவிட்டாள்.

சொந்த பந்தங்களும் சொக்காரர்களும் சேர்ந்து வியாபாரிக்கு அந்தப் பெண்ணை ரெண்டாம்தாரமாகக் கட்டி வைத்தார்கள்.

அந்தப் பெண் செக்கச் செவேல் என்று செப்புச்சிலைமாதிரி இருந்தாள். படு சூட்டிகையானவளாகவும் இருந்தாள். ரொம்பச் சின்னப் பெண்ணாகவும் இருந்தாள்.

வியாபாரியோ அரைக்கிழவனாக இருந்தான். ரெண்டாந்தாரத்து பெண்ணோ, துள்ளித் துடித்துக் கொண்டிருந்தாள். அவனால், அவளை அமைக்க முடியலை. அவள் மீறித் திமிரிக் கொண்டு நின்றாள். என்றாலும், புருசங்காரன் இளம்பொண்டாட்டியின் மீது பாசமழை பொழிந்தான். அவள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தான். ஆனால் அவளோ அரைக் கிழவனான வியாபாரியுடன் சேர்ந்து வாழ மனசில்லாமல் அரைகுறை மனசுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். புருசக்காரனுக்கும் தன் இயலாமை புரிந்தது. என்றாலும் கெத்தாக அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருந்தான். ஆனால் இளம் பொண்டாட்டிக்காரி "போயும், போயும் ஏண்டா இந்தக் கிழவனுக்கு வாக்கப்பட்டோம்" என்று நினைத்து தொட்டுத்தாலி கட்டிய முறைமைக்காகவும், வியாபாரியிடம் உள்ள காசு பணத்திற்காகவும் அவனோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தாள்.

அவள் மனம், "ஒரு இளவட்டப் பையனைக் கட்டி இருந்தால் எப்படி அவன் நமக்குச் சுகம் கொடுப்பான்!" என்ற கனவுடனும், கற்பனையுடனும் வாழ்ந்து கொண்டிருந்தாள்.

கிளிபோலத் தனக்கு வாய்த்த இளம் மனைவியைக் குட்டி போட்ட பூனை போல சுத்திச் சுத்தி வந்தான் புருசக்காரன். அடிக்கடி வியாபாரத்திற்கு வெளியூர் செல்வதையும் தவிர்த்தான்.

இப்படியாக இருக்கும்போது வியாபாரியின் இளம் மனைவியான அப்பெண்ணின் மனதில் இருந்த காதல் இடைவெளியை இட்டு நிரப்புவதுபோல ஒரு இளந்தாரி, அவளின் வாழ்க்கையில் குறுக்கிட்டான்.

குறைகுடமாகக் கூத்தாடிக் கொண்டிருந்த அப்பெண்ணின் மனதிற்குள் அந்த இளந்தாரி நுழைந்தான். கண்ணும் கண்ணும் பேசியதுபோக, சாடைமாடையாகவும் பேசித் தீர்த்தார்கள்.

வாய்ப்பேச்சில் அசகாய சூரனான அந்த இளந்தாரி வியாபாரியின் இளம் மனைவியை எளிதாக விழத் தட்டினான். அவர்களுக்கு வாய்ப்பாக அந்த ஊரில் திருவிழா வந்தது.

வியாபாரியின் மனைவி, சீவிச் சிங்காரித்துக்கொண்டு, "கூத்துப் பார்க்கப் போகிறேன்" என்று புருசக்காரனிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

வியாபாரிக்கு கூத்துப் பார்ப்பதில் எல்லாம் விருப்பம் இல்லை. எனவே அவன் வீட்டில் அடைந்து கிடந்தான். கூத்துப் பார்க்க கிளம்பியவளைப் பின் தொடர்ந்து சென்ற அந்த இளவட்டப் பெயல், ஆத்தோரமாய் உள்ள தோப்பிற்குக் கூட்டிச் சென்றான். அவளின் திமிரும், தினவும் ஆத்தோரமுள்ள தோப்பில் அடங்கியது.

அன்றிலிருந்து அவளும் அந்த இளந்தாரியிடம் தன் மனதைப் பறி கொடுத்தாள். அடுத்து எப்படா அவனை அனுபவிப்போம் என்று அவளின் உடம்பும் மனமும் ஏங்கத் தொடங்கியது.

புருசங்காரனை ஊரைவிட்டு அனுப்பிவிட்டுக் கள்ளக் காதலனுடன் காமசுகத்தை அனுபவிக்க நினைத்தாள். எனவே, "எனக்குத் தீராத தலைவலி" என்று சொல்லி கள்ளச்சாலம் போட்டு (ஏமாற்றியபடி) படுத்த பாயைவிட்டு எந்திரிக்காமல் படுத்துக் கொண்டாள்.

புருசக்காரன் "என்னம்மா செய்யிது, ஏதம்மா செய்யிது?" என்று தாங்கித் தடுக்கிக் கேட்டான். இளம் மனைவியை ஊரில் உள்ள வைத்தியர்களை எல்லாம் ஒருத்தரை மாற்றி ஒருத்தராகக் கூட்டிக் கொண்டு வந்து காட்டினான்.

வைத்தியர்களும் வந்து பார்த்துவிட்டுத் தன் பங்கிற்கு ஆளுக்கு ஒரு மருந்தைக் கொடுத்துவிட்டு வியாபாரியிடம் காசு, பணத்தைப் பிடுங்கிக் கொண்டு சென்றார்கள்.

அவள் காம நோய் கொண்டு கள்ளச் சாலம் போட்டுப் படுத்துக் கிடக்கிறாள் என்பதை எந்த வைத்தியனும் கண்டு பிடிக்கவில்லை. வைத்தியர்கள் கொடுத்த மருந்து, மாயங்களை எல்லாம் புழக்கடையில் வீசி எறிந்துவிட்டு, அவள் "ஐயோ எனக்கு தலைவலி தாங்க முடியவில்லையே" என்று நடித்தாள்.

புருசக்காரன் ‘என்ன செய்வது ஏது செய்வது’ என்று திகைத்தபடி கைபிசைந்து நிற்கும்போது அவள், "காலையில் நீங்கள் கடைத் தெருவிற்குச் சென்றபோது ஒரு வைத்தியர் வந்தார். அவர் என் கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு, ‘இது ஒரு புது மாதிரியான தலைவலி. இந்த நோய் போகணும் என்றால் ‘பல்லுக்கு மெதுவான கல்லைக் கொண்டு வந்து அதைச் சூடாக்கி ஒத்தடம் கொடுக்கணும்’ என்று சொன்னார். எனவே, நீங்கள் எங்கு சென்று தேடியாவது, எப்பாடுபட்டாவது எனக்கு பல்லுக்கு மெதுவான கல்லைக் கொண்டு வாருங்கள்’ என்றாள்.

அழகான இளம் மனைவியின் நோயைப் போக்குவதற்காக, அந்த வியாபாரி உடனே ‘கல்லுக்கு மெதுவான கல்லை‘த் தேடிப் புறப்பட்டான். புருசக்காரன் ஊரைவிட்டுப் போய்விட்டான் என்பதை உறுதி செய்துகொண்டு, தன் கள்ளக் காதலனை ‘இன்றிரவே வீட்டுக்கு வரவும்‘ என்று ஒரு கிழவி மூலம் தூதனுப்பினாள்.

இருட்டுக் கவியவும் இளந்தாரிப் பெயல், வியாபாரியின் வீட்டிற்குள் புகுந்து கொண்டான். கட்டுன புருசன் ஊரை விட்டுப் போகும்வரை கள்ளச் சாலம் போட்டுப் படுத்துக் கிடந்தவள், கருக்கலானதும், சீவிச் சிங்காரிச்சி கள்ளக் காதலனை வரவேற்கக் காத்திருந்தாள்.

‘காட்டுக்குச் சொந்தக்காரனும் கள்ளாளியும் கூட்டுச் சேர்ந்தால், வேண்டியமட்டும் களவாங்கலாம்‘ என்பது பழமொழி. இப்ப காஞ்சமாடு கம்மங்கொலையில புகுந்த கதையா, அவங்க ரெண்டு பேரும் புகுந்து விளையாடி ஆசை தீரு மட்டும் அனுபவிச்சாங்க.



பாவம், கட்டுன புருசன் ஊர், ஊராப் போய், ‘பல்லுக்கு மெதுவான கல்‘ கிடைக்குமா? என்று விசாரித்துக் கொண்டே அலைந்தான். ‘பல்லுக்கு மெதுவான கல்‘ என்பது பற்றி யாருக்கும் எந்த விபரமும் புரியவில்லை.

ஒரு வாரம், பத்து நாள் என்று அலைந்து திரிந்தபின் ஒரு நாள் மாலையில் அவந்திபுரம் என்ற ஊரில் ஒரு வயதான பெரியவரிடம் சென்று ‘ஐயா உங்களுக்கு ‘பல்லுக்கு மெதுவான கல்‘ எங்கு கிடைக்கும் என்று தெரியுமா?‘ என்று கேட்டான்.

பெரியவர் ஒரு குறுஞ்சிரிப்பாணி சிரித்துக் கொண்டு, ‘கல்லிலேயே, மிக மென்மையான கல் உப்புக்கல்தான். அதைத்தான் பல்லுக்கு மெதுவான கல்‘ என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள்‘ என்றார்.

பெரியவர் சொன்னதைக் கேட்டு ரொம்பச் சந்தோசப்பட்ட வியாபாரி ஒருபடி உப்பை வாங்கி மடியில் கட்டிக் கொண்டு, இரவோடு இரவாகத் தன் ஊரைப்பார்த்து நடையைக் கட்டினான். எப்படியோ, ஓட்டமும் நடையுமாக நடந்து நடுச்சாம வேளையில் தன் வீட்டை அடைந்தான்.

வீட்டிற்குள் வித்தியாசமான சத்தம் கேட்பதைக் கேட்டுச் சுதாரித்துக்கொண்ட வியாபாரி, வீட்டுக் கூரையின் மேல் ஏறி, ஒரு ஓட்டை பையப் பிரித்து, வீட்டிற்குள் எட்டிப் பார்த்தான். அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை.

அப்போது அவனை அறியாமலேயே அவன் மடி அவிழ்ந்தது. அதில் அவன் கட்டி வைத்திருந்த உப்பு வீட்டினுள் சிந்தியது.

நிர்வாணமாகக் கிடந்த அவர்களின் உடம்பில், மேலேஇருந்து சிந்திய உப்பு விழுந்தது. தன் மேல் உப்பு விழுவதைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட கள்ளக் காதலர்கள் தங்கள் ஆடைகளைத் தேடி எடுத்துச் சரி செய்து உடுத்திக் கொண்டு ‘யாரது‘ என்று சத்தம் கொடுக்கும்முன் வியாபாரி வீட்டின் மோட்டில் இருந்து வேகமாக கீழே இறங்கி, தான் வந்த வழியைப் பார்த்து நடக்கத் துவங்கிவிட்டான்.

‘பல்லுக்கு மெதுவான கல்‘ உப்புக்கல்தான் என்பதைப்புரிந்து கொண்டு தன் கணவன்தான் வீட்டின் மோட்டு வளையில் ஏறி ஓட்டைப் பிரித்து உள்ளே நடப்பதைப் பார்த்துவிட்டான் என்பதை அவளும் புரிந்து கொண்டாள்.



தன்னிடம் தாம்பத்தியத்தில் அவள் நிறைவு பெறாமல்தான் அடுத்தவனுக்கு அவளும் முந்தானை விரித்து இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட வியாபாரி திரும்பிப் பாராமல் நடந்து, நடந்து ஒரு சன்னியாசியின் மடத்தை அடைந்தான்.

இனி, இல்லறமே தனக்கு வேண்டாம் என்று முடிவு செய்த வியாபாரி, மறுநாள், துறவு மேற்கொண்டான்.

இந்தக் கதை¬யில் ‘பல்லுக்கு மெதுவான கல்’ என்ற புதிரும், அதற்கான விடையும், குறியீடாக நின்று பல சேதிகளைச் சொல்லாமல் சொல்கின்றன. ஒவ்வொரு துறவிக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கும் போலும். இதே கதைக்கு மாற்று வடிவம் ஒன்றை ஏற்கனவே நான் ‘மண்ணின் கதைகள்; மக்களின் கதைகள்’ (உயிர்மை வெளியீடு) என்ற நூலில் பதிவு செய்துள்ளேன்.

No comments: