கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, July 22, 2013

செவக்காட்டுச் சேதிகள்-5 இப்படியாகத்தான் இருக்கிறது எதார்த்தம்

‘‘அபார்சன் பண்ணிடு’’ முடிவாகச் சொன்னான் கார்த்திகேயன். சந்திரலேகாவும் முடிவாகச் சொன்னாள், ‘‘அபார்சன் பண்ண முடியாது’’

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இந்தப் பிரச்சினை விரிசலை ஏற்படுத்தியது.

வாக்குவாதம் முற்றியதில் கார்த்திகேயன் டைவர்ஸ் பண்ணப் போவதாக மிரட்டினான். தன் கருப்பையில் வாழும் அந்த ஜீவனைக் கொன்றுவிட அந்தத் தாயின் மனம் துணியவில்லை!

கணவனா, கருவில் வளரும் குழந்தையா? என்ற நிலை வந்தபோது அந்தத் தாயின் மனம், கருவில் வளரும் அந்தப் பிஞ்சுப் பூவின் பக்கமே சாய்ந்தது.

டைவர்ஸ் நோட்டீசைக் கையில் வாங்கிப் பிரித்துப் படித்துவிட்டு பெட்டியில் சாய்ந்தாள் சந்திரலேகா. அவளின் அடி வயிற்றில் ஏதோ ஒன்று ஊர்வதைப் போல உணர்ந்தாள். கண்களில் அவளை அறியாமல் கண்ணீர் வெள்ளமாகப் பெருகியது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அவள் படித்த பள்ளியிலேயே முதல் மாணவியாகத் தேறினாள். நன்றாகப் படிக்கிற பிள்ளையை மேற்கொண்டு படிக்க வைக்காமல் நிறுத்திவிட அவள் தந்தை பரமேஸ்வரனுக்கு மனம் இல்லை!

பிளஸ்டூ தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேறினாள். கல்லூரிக்கு அனுப்பும் போதோ, சந்திரலேகாவின் தந்தை யோசித்தார். நம் தகுதிக்குச் சரிப்பட்டு வருமா-? என்று.

சந்திரலேகா நான் கல்லூரிக்குச் சென்று படிக்கப் போகிறேன் என்று பிடிவாதம் பிடித்தாள். நாலைந்து கிலோ மீட்டருக்குள் பெண்கள் கல்லூரி இருந்தது. தினம் வீட்டில் இருந்தேபோய் வந்துவிடலாம். என்றாலும் மேற்கொண்டு ஆகும் செலவுக்கு என்ன பண்ணுவது? என்று யோசித்தார்.

குடும்பத்தின் வறுமை கருதித் தயங்கினாலும், மகளின் ஆசையை நிறைவேற்றி வைப்பது என்று முடிவெடுத்தார். ஒரு கமிசன் கடையில் கணக்கு எழுதி அதில் வரும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார் பரமேஸ்வரன்.

சந்திரலேகாதான் அவருக்குத் தலைப்பிள்ளை, அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள் வேறு இருந்தார்கள். நன்றாகப் படிக்கின்ற பிள்ளையைப் படிக்க விடாமல் தடுப்பதும் ஒரு வகையில் குற்றம்தான் என்பதை உணர்ந்த பரமேஸ்வரன் பிள்ளை மேலும் நாலைந்து கடைகளுக்கு வருமான வரிக்கணக்குகளை வீட்டில் இருக்கும் நேரத்தில் முடித்துக் கொடுத்து அதில் வரும் உபரி வருமானத்தில் சந்திரலேகாவின் கல்லூரிக் கல்விக்கு ஆகும் செலவைச் சரிக்கட்டிவிடலாம் என்று நினைத்தார்.

சந்திரலேகா கல்லூரியிலும் நன்றாகப் படித்தாள். அவர் தாயார் வீட்டு வாசலிலேயே சிறியதாகப் பெட்டிக்கடை ஒன்றை வைத்து நடத்தினாள். அதிலிருந்து சிறிய வருமானம் வந்தது.

பி.ஏ. முடித்து தொடர்ந்து எம்.ஏ. படிக்க விரும்பினாள் சந்திரலேகா. அவள் அப்பா மிகுந்த தயக்கத்தோடுதான் மகளை மேற்படிப்பிற்கு அனுப்பினார். சந்திரலேகாவுக்குத் தன் வீட்டின் நிலை புரிந்திருந்தாலும் தான் தொடர்ந்து நன்றாகப் படித்து முன்னுக்கு வந்து தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தாள்.

சந்திரலேகா நினைத்தபடியே எம்.ஏ.வும் முடித்தாள். நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றாள். அவள் நினைத்தபடி படித்து முடித்ததும் வேலை கிடைத்துவிடவில்லை! சந்திரலேகா தொடர்ந்து படித்ததால் அவளின் தங்கச்சிமார்கள் இருவரையும் எம்.ஏ.வுக்கு மேல் பரமேஸ்வரனால் படிக்க வைக்க முடியவில்லை. அத்தோடு அவர்கள் இருவருக்கும் படிப்பும் சுமாராகத்தான் வந்தது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெற்று தேர்ச்சி பெற்றனர். அதனால் இளைய பிள்ளைகள் இவருவரையும் ரெடிமேடு டிரஸ் தயாரிக்கும் ஒரு கம்பெனிக்கு வேலைக்கு அனுப்பினார் பரமேஸ்வரன்.

சந்திரலேகா மேலும் பி.எட். படித்தால்தான் வேலை கிடைக்கும் என்று பலரும் யோசனை கூறினார்கள். வேறு வழியின்றி பி.எட். படிக்க வைத்தார் பரமேஸ்வரன். சந்திரலேகா பி.எட். படித்து முடிப்பதற்குள் பரமேஸ்வரனுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. பி.எட். படித்து முடித்ததும் வேலை கிடைக்கும் என்பதும் கனவாகத்தான் போனது. தனியார் பள்ளிகளில் பெருந்தொகையைக் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும் என்ற எதார்த்தம் பரமேஸ் வரனைத் தாக்கியது.

ஒருவருஷம், இரண்டு வருசம் அரசுப் பள்ளியில் வேலை கிடைக்கும் என்று காத்திருந்த சந்திரலேகா ஏமாற்றம் அடைந்தாள். வீட்டிற்கு அருகில் இருந்த ஆங்கிலப்பள்ளி ஒன்றில் வேலை காலியாக இருக்கிறது என்ற தகவல் வந்தது. மனுப் போட்டால் மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறினார்கள். குடும்பத்தின் நிலை கருதியும், தன் மன உளைச்சல் கருதியும், ஆங்கிலப் பள்ளியின் அந்த ஆசிரியர் பணியை ஏற்றுக் கொண்டாள். மாலையில் டியூஷன் எடுத்தாள். அதில் ஓரளவிற்கு வருமானம் வந்தது. மாணவிகளுடன் பழகுவதும் கற்பித்துக் கொடுப்பதும் அவளின் மனதிற்கு ஆறுதலாக இருந்தது.

சந்திரலேகாவின் வயதுடைய சக பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் முடிந்திருந்தது. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பெண் பிள்ளையைக் கட்டிக் கொடுக்காமல் வீட்டிலேயே வைத்திருப்பது சரியல்ல என்று நினைத்து பரமேஸ்வரன் தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்.

பல இடங்களுக்கும் சென்று பல தரகர்களிடமும் சொல்லி வைத்தார். வருகிற வரன்கள் எல்லாம் வரதட்சணை சீர் செனத்தி என்று கண்களை மூடிக்கொண்டு கேட்டனர்.

சந்திரலேகா ‘‘அப்பா எனக்குத் திருமணமே வேண்டாம். நிரந்தரமாக வேலை கிடைத்த பின்பு கல்யாணம் கட்டிக் கொள்கிறேன்’’ என்றாள். காலம் தன் கடமையை ஒழுங்காய்ச் செய்தது. சந்திரலேகா வின் நடுத் தலையைச் சுற்றிலும் சில முடிகள் வெள்ளையாய் மினுமினுக்கத் துவங்கின.

‘பட்டம் தப்பினால் நட்டம்’ என்று நினைத்த பரமேஸ்வரன் எப்படியாவது மகளைக் கட்டிக் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் கார்த்திகேய னின் ஜாதகத்தை ஒரு தரகன் கொண்டு வந்து கொடுத்தார்.

கார்த்திகேயன் பி.ஏ.படித்துவிட்டு வேலை கிடைக்காமல் சொந்தமாக ஒரு பலசரக்குக் கடை வைத்து நடத்திக் கொண்டிருந்தான். மகளுக்கு இணை யான கல்வித்தகுதியோடு ஆசிரியர் வேலை பார்க்கிற மாப்பிள்ளையைப் பார்த்துக் கட்டிக் கொடுப்பது என்பது நடக்கக்கூடிய காரியம் இல்லை என்ற உண்மையை உணர்ந்துகொண்ட பரமேஸ்வரன் இந்த மாப்பிள்ளை தொழில் செய்கிறார். படித்திருக்கிறார். எனவே இவருக்கே தன் மகள் சந்திர லேகாவைக் கட்டிக் கொடுத்துவிடலாம் என்று நினைத்தார்.

சந்திரலேகா எவ்வளவோ மறுத்துப் பார்த்தும் பரமேஸ்வரன் கேட்கவில்லை. வயது ஏறிக் கொண்டே போகிறது. இனியும் உன்னை வீட்டில் வைத்துப் பார்ப்பது முறையல்ல. அத்தோடு உனக்கு அடுத்தபடியாக இரண்டு பெண்கள் வளர்ந்து நிற்கிறார்கள். உன்னை முதலில் கட்டிக் கொடுத் தால்தான் அடுத்தடுத்து இரண்டு மூன்று வருடங்களில் மற்றப் பிள்ளைகளைக் கட்டிக் கொடுக்க முடியும் என்று விபரம் கூறி சந்திரலேகாவைத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்து விட்டார்.

கடனை உடனை வாங்கித் தத்திப்புத்தி எப்படியோ சந்திரலேகாவைக் கரை சேர்த்தார் பரமேஸ்வரன். கல்யாணம் முடிந்த பின்புதான் கார்த்திகேயன் சுயரூபம் சந்திரலேகாவுக்குத் தெரியவந்தது. சீட்டு விளையாடுவது, குடிப்பது என்று ஊதாரியாக இருந்தான் கார்த்திகேயன். கடை என்பது பேருக்குத்தான் இருந்தது. கடையைச் சுற்றிக் கடன்கள் விழுது போலப் பின்னிக் கிடந்தது-.

ஏண்டா இவ்வளவு தூரம் படித்தோம் என்றிருந்தது சந்திரலேகாவுக்கு. கல்யாணத்திற்கு, பிறகு, கணவன் ஊரில் உள்ள ஒரு ஆங்கிலப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தாள். அந்த வருமானம்தான் அவள் உயிரைக் காப்பாற்றியது.

மீண்டும் டியூஷன் எடுக்க ஆரம்பித்தாள். ஒரே வருசத்தில் கடன் தொல்லை தாங்க முடியாமல் கடையை அடைத்துவிட்டான் கார்த்திகேயன்.

கார்த்திகேயன் அவளைவிட நாலுவயது குறைந்தவன். கல்யாணத்திற்கு முன்பே அந்த விவரம் அவனுக்கும் தெரிந்து இருந்தது. ஆனால் கல்யாணம் முடிந்த பிறகு, அடிக்கடி அவளின் நரைத்திருந்த முடியைச் சுட்டிக் காட்டிப் பேசினான். அவளின் வயதை நினைவு படுத்தினான். வார்த்தைகளால் அடிக்கடி வதைத்தான். அப்போது சந்திரலேகா அழுவதைப் பார்த்து ரசித்தான். அவனின் அந்தக் கொடூரமான ரசனையை அவளும் உணர்ந்துதான் இருந்தாள்.

என்றாலும் தன் குடும்பத்தின் நிலை கருதி, தனக்குப் பின்னால், கல்யாணத்திற்குக் காத்திருக்கும் தன் தங்கை மார்களின் நலன் கருதி, அவனோடு வாழ்ந்து கொண்டிருந்தாள். இப்படிப்பட்ட சூழலில் தான் சந்திரலேகா கர்ப்பமுற்றாள். அந்தச் சந்தோஷச் செய்தி, அவளை ஏனோ வதைத்தது.

‘‘நாம் இருக்கும் நிலையில் இப்போதைக்கு நமக்குக் குழந்தை வேண்டாம். உனக்கு நிரந்தர வேலை கிடைத்த பின்பு நாம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். இப்போதைக்கு இந்தக் கருவைக் கலைத்துவிடு’’ என்றான்.

முப்பத்தைந்து வயதைக் கடந்துவிட்ட இந்த நிலையிலாவது தலைப்பிள்ளையைப் பெற்றுக் கொள்ளும் வரம் கிடைத்ததே என்று மகிழ்ந்திருந்த சந்திரலேகாவால் கர்ப்பத்தைக் கலைப்பது என்பதையே நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை!

தாய்வீட்டிற்கு வாழாவெட்டியாய்ப் போய்த் தன் தங்கைமார்களுக்குச் சிரமம் கொடுக்க விரும்பாத சந்திரலேகா தனியே ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்தி அதில் குடியேறினாள். பிறக்கப் போகும் தன் மகனையோ, மகளையோ நினைத்து நினைத்து அந்தக் கனவிலேயே வாழ்ந்தாள் சந்திரலேகா. பிரசவத்திற்கான நாளும் வந்தது. பரமேஸ்வரன் தான் அவளை மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தார்.

சந்திரலேகாவுக்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது

No comments: