கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Friday, July 26, 2013

கடித இலக்கியம் -11 கி.ராஜநாராயணன் தி.க.சி .க்கு

அருமை நண்பர் தி.க.சி அவர்களுக்கு.,

நலம். இந்தக் கடிதத்தை அன்பர் கழனியூரனுக்குத்தான் எழுத ஆரம்பித்தேன். பேனா உங்கள் பக்கம் திரும்பி விட்டது !





“ நிச்சயதார்த்த அழைப்பிதழ்” க்கு ஒரு பதில் போடுவோமே என்று உட்கார்ந்தேன் (எழுத்து சரியாக இருக்காது; சாய்ந்து கொண்டே எழுதுகிறதுனால்; காரணம் பிறகு சொல்கிறேன்)

நிச்சயதார்த்தம் உங்கள் தலைமையின் கீழ் பொருத்தமாக அமைந்திருக்கிறது. இப்பொ நான் உங்கள் தலைமையின் கீழ் நின்று பேசுகிறேன். மானசீகமாக கலந்து கொண்டு.

நிச்சயதார்த்தம் நடக்கும் போது சொந்த பந்தங்கள் மட்டுமே இருக்கும். திருமணத்துக்குத் தலைமை என்று வரும் போதுதான் மற்றவர்கள் வருவார்கள்.

இப்பொ இது ஒரு படி மேல்.

பேரா.பஞ்சு (பஞ்சாங்கம்) வீட்டில் இரண்டு கலியாணங்கள் நடந்தன. ரெண்டும் காதல்கலியாணங்கள். தமிழ் முறைப்படி, பெற்றவர்களுக்குத் தெரியாமல் உடன்போக்கு போய் மணமக்கள் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் பஞ்சு வீட்டுக் கலியாணங்கள் அப்படி அல்ல ! காதல்கலியாணங்கள் . சாதி விட்டுச் சாதியில். அதுவும் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் சேர்ந்து மகிழ்ச்சியுடன் ஊர் அறிய மேளம் கொட்டி நடந்தன அந்தத் திருமணங்கள் . மாப்பிள்ளைகள் பொண்ணுகள் நால்வரும் ஒரே தொழில் செய்யும் மருத்துவர்கள். அவர்களே தங்களுக்குள் ஒரு ஈக்குஞ்சுயைக் கூட கூப்பிடாமல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள். கல்யாணம் மட்டும் தடபுடல். ரெண்டுக்கும் நான்தான் முன்னிலை வகித்தேன். காலநிலைக்கு ஏற்ப பிள்ளைகளும் மாறுகிறார்கள்; நாமும் மாறுகிறோம்.

கழனியூரன் வீட்டு முதல் கலியாணத்திலும் இப்பொ நடக்கும் திருமண விசேடத்திலும் என்னால் வந்து கலந்து கொள்ள முடியாமல் ஆனது எனது துரதிர்ஷ்டம்தான்.

என் மேல் முதுகில் தோன்றிய சிறிய கட்டி ( பிளவை ) ஒரு மாதமாகப் படுத்தியது. ரெத்தமும் நீரும் வடிந்து கொண்டிருந்தது ( சீழ் இல்லை ) . வலியும் கூட அவ்ளவாக இல்லை.

என்ன செய்யப் போகிறதோ என்றுயிருந்தோம். படுக்க முடியாது; ஒரு பக்கமாகவே இருந்து தூங்க வேண்டும். சிகிச்சை தொடர்ந்தது. நீர் வடிதல் நின்றால் அறுத்து விடலாம் என்று காத்திருந்தோம். மேல் கீழ் ஆகாமல் புண் அப்படியே முழித்துக் கொண்டு இருந்தது . தித்திப்பு நீர் (டயாபடீஸ்) கட்டுக்குள் இருந்ததால், தூக்கி விடலாம் என்று டாக்டர்கள் தீர்மானித்து, தியேட்டருக்குப் போய் புண்ணைச் சுத்தம் செய்து கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன், மூன்று தையல்களுடன்.

உடம்பில் மற்றப் பகுதிகள் என்றால் அய்ந்தாம் நாள் தையல் பிரிக்கலாம் ; இது முதுகு; தோல் தடித்திருக்கும் என்பதால் பத்தாம் நாள் தையல் பிரித்தோம். எனது உடம்பு ரொம்ப நல்லதனமானது. வைத்தியத்துக்கு மிகவும் ஒத்துழைக்கும்!

மருந்து கண்டுபிடிக்கப்படாத காலங்களிலெல்லாம் கூட என்னோடு ஒத்துழைத்ததே.

இதுக்காகவே என் உடம்புக்கு ஒரு மருத்துவப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் தரலாமே ! –

வீட்டுக்கு வந்து டாக்டர் தையல் பிரித்து எனது உடம்பை பாராட்டினார் . பிறகுதான் சொன்னார்; இதை ‘ ராஜபிளவை’ என்று சொல்வார்களாம்! கிராமத்தில் சொல்வார்கள்: முகத்தில் வந்தால் பரு; உடம்பில் வந்தால் சிலந்தி; முதுகில் வந்தால் ராஜபிளவை.

இப்பொ பூரண குணமாகி விட்டேன். நண்பர்கள், அன்பர்களின் பிரியங்கள் இருக்கும் போது எதுக்காகத் தயங்க வேண்டும். ரணம் வந்து குணமானாலும் உள்ப்புண் குணமாக நாள் எடுத்துக் கொள்ளும் என்பார்கள். அதனால் கவனமாக பத்தியமாக இருக்கணும் என்று பார்க்க வருகிறவர்கள் போகும் போது உபதேசித்துப் போவார்கள். நாமும் அப்படியே என்று சொல்ல வேண்டும். “ மேலே” போகும் போது இந்த ஈஸிச் சேரை ஒருக்காலும் அனுமதிக்க மாட்டார்கள். அதில் பக்கவாட்டில் தலையணை போட்டுச் சாய்ந்த வாக்கில்தான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன் . அதனால்தான் எழுத்துக்கள் இந்த அழகில் இருக்கிறது.

தினமணியின் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலர் எனக்கு முந்தா நாள் (05.07.10ல்) தான் வந்து சேர்ந்தது. இதில் எனது ஒரு பக்க கட்டுரை ஒன்று இருப்பதால் (பக்கம் 49ல்) மலரின் கடேசியில் வந்திருக்கும் “ தமிழ் வளர்த்த சான்றோர்கள் “ மற்றும் “ தமிழ்ப்படைப்பாளிகள் “ இந்தப் பட்டியலைத் தவிர்த்திருக்கலாம். எப்போதுமே பட்டியல் என்றாலே சில முக்கிய நபர்கள் விடுபட்டுப் போவார்கள். வருத்தத்துக்கு ஆளாக நேரிடும்.

பாஸ்கரத் தொண்டமான் படம் சரி; ரசிகமணியின் படம் இல்லை! மாதவையா படம் இருக்கு ; மாயூரம் வேதநாயகம் பிள்ளை இல்லை . வாலி படம் உண்டு. வல்லிக்கண்ணன் படம் இல்லை . தி.க.சி.யும் கிடையாது . அப்புறம் “வேதபுரத்தில் வாழ்ந்தது பற்றி “ எழுதச் சொன்னீர்கள் என்னை . குறிப்புகள் எல்லாம் தயார் பண்ணியாச்சி. எழுத உக்காரணும். பேனாவும் நோட்டும் டயரியும் ரெடி . ஒன் ... டூ ... திரி ... தான் சொல்லணும் .

கழனியூரனிடம் எனது வாழ்த்துக்களைச் சொல்லுங்கள் . மணமக்கள் வாழ்க . நீங்கள் வாழ்க.

என்றும்

கி.ரா

07.07.2010

புதுவை

No comments: