கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, July 22, 2013

தாத்தா சொல்லும் கதைகள் 5

கர்வம் தவிர்

மலை முகடுகளில் மேகம் தவழ்ந்து விளையாடியது. மாலையில் இதமான குளிர்ந்த காற்று வீசியது. குழந்தைகள் கதை கேட்பதற்காக காத்திருந்தார்கள். குழந்தைகளைப் பார்த்து கைகளை அசைத்தபடியே வந்த கண்ணாடித் தாத்தா வழக்கமாக அமரும் பளபளப்பான கல்லின் மேல் உட்கார்ந்தார். தாத்தாவின் முன்னால் உட்கார்ந்த குழந்தைகள், ``கதை சொல்லுங்க தாத்தா`` என்று ஒரே குரலில் கூறினார்கள். தாத்தா தொண்டையைச் செருமி தன் குரலைச் சரி செய்துக் கொண்டு கதை சொல்ல ஆரம்பித்தார்.

`` ஒரு காட்டில் எல்லாவிதமான மிருகங்களும் வாழ்ந்தன. சிங்கம், புலி, கரடி போன்ற வலிமை மிக்க மிருகங்கள் மான், முயல், நரி போன்ற மிருகங்களை வேட்டையாடி அவற்றைக் கொன்று தின்று வாழ்ந்து வந்தன. ஒரே காட்டில் வாழ்ந்ததால், மாமிசம் உண்ணும் மிருகங்களுக்கு பயந்து தாவரங்களை உண்ணும் மிருகங்கள் வாழ்ந்தன.

வேட்டையாடும் மிருகங்களிடம் இருந்து மற்ற மிருகங்கள் தப்பித்து உயிர் வாழ படாத பாடுபட்டன. எனவே நரி மற்ற மிருகங்களைப் பார்த்து, ``சிங்கம், புலி போன்ற மிருகங்களிடமிருந்து தப்பிக்க நாமெல்லாம் ஒன்று கூடி சிந்தித்து ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்`` என்று கூறியது. நரியின் யோசனையை முயல், ஆமை போன்ற மிருகங்கள் வரவேற்றன. ``நாம் அனைவரும் இந்தக் காட்டில் உள்ள மழைக்காத்தான் என்ற பாறையின் அடியிலுள்ள குகையில் வரும் வெள்ளிக்கிழமை காலையில் ஒன்று கூடி பேசி ஒரு முடிவெடுப்போம்`` என்று நரி கூறியது.

நரியின் யோசனையை மற்ற மிருகங்களிடம் சென்று தகவலாகச் சொல்லும் பொறுப்பை ஆமை கேட்டது. நரி ஆமையைப் பார்த்து ``நீ மெதுவாக நடந்து சென்று ஒவ்வொரு மிருகத்தையும் பார்த்து தகவல் சொல்வதற்கு ஒரு மாத காலம் ஆகும் எனவே அந்தப் பொறுப்பை முயலிடம் ஒப்படைப்போம்`` என்றது நரி. முயலும் மகிழ்ச்சியுடன் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. முயல் ஒவ்வொரு மிருகத்தையும் தனித்தனியே சந்தித்து செய்தியைக் கூறும் போது ஒவ்வொரு மிருகமும் கூட்டத்திற்கு நான்தான் தலைமை வகிப்பேன் என்று முயலிடம் கூறின. முயல், ``முதலில் நாம் ஒரு இடத்தில் ஒன்று கூடுவோம். அதன்பிறகு நம்மில் யார் தலைவராக இருப்பது என்பது பற்றி தீர்மானிப்போம்`` என்று சாமர்த்தியமாக மற்ற மிருகங்களிடம் கூறியது.

யானை முதல் எலி வரை உள்ள மிருகங்கள் அனைத்திற்கும் முயல் தவறாமல் அழைப்பு விடுத்தது. குறிப்பிட்ட நாளில், மழைக்காத்தான் பாறையின் அடியில் உள்ள குகையில் சிங்கம், புலி தவிர்த்த மிருகங்கள் எல்லாம் ஒன்று கூடின. ஆனால் அந்தக் கூட்டத்திற்கு மான் மட்டும் வரவில்லை. யானை நரியைப் பார்த்து, ``நாம் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடி இருக்கிறோம் மான் மட்டும் ஏன் வரவில்லை`` என்று கேட்டது. நரி, மான் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. நம்மில் யாராவது ஒருவர் போய் மானை அழைத்து வருவோம் என்றது.

யானை, பூனையைப் பார்த்து நீதான் பார்க்க புலி மாதிரி இருக்கிறாய், நீ வேகமாகச் சென்று மானை அழைத்து வா என்றது. உருவத்தில் மிகப் பெரிய மிருகமான யானை சொன்னதைக் கேட்ட பூனையும் மறு பேச்சு பேசாமல் மானைத் தேடி ஓடியது. காட்டில் பல இடங்களில் தேடியும் மானைக் கண்டு பிடிக்க முடியவில்லை. கடைசியில் ஒரு குளத்தில் நீர் அருந்திக் கொண்டு இருந்த மானைப் பார்த்து, ``மிருகங்களின் கூட்டத்திற்கு நீ மட்டும் ஏன் வரவில்லை? யானை அண்ணா உன்னைக் கூட்டிக் கொண்டு வரும்படி என்னை அனுப்பி வைத்தார் என்று பவ்வியமாகக் கூறியது.

மான் கர்வத்துடன், இந்தக் காட்டில் வாழும் மிருகங்களிலேயே நான்தான் மிகவும் அழகாக இருக்கிறேன். நான் துள்ளி துள்ளி ஓடும் அழகை நீ பார்த்திருக்கிறாயா? என் கொம்புகளைப் பார் எவ்வளவு அழகாக இருக்கின்றன. இந்தக் காட்டில் வாழும் எந்த மிருகமும் என்னைப் போல் அழகாக இல்லை. எனக்கு துன்பம் வரும்போது என்னை நான் காப்பாற்றிக் கொள்வேன். எனக்கு யாருடைய உதவியும் ஆலோசனையும் வேண்டாம். நரி கூட்டி இருக்கும் அந்தக் கூட்டத்திற்கு நான் வரமாட்டேன். நரி தந்திரமான மிருகம். அது நம்மை எல்லாம் ஒரே இடத்தில் கூட்டி ஒரே நேரத்தில் கொன்றுவிட ஏதோ சதித் திட்டம் தீட்டி இந்தக் கூட்டத்தைக் கூட்டுகிறது. நரி இருக்கும் இடத்திற்கு நான் வரமாட்டேன். யானை உருவத்தில்தான் பெரிய மிருகமாக இருக்கிறது. அதற்கு மூளை மிகச் சிறியது. நரியின் தந்திரம் தெரியாமல் யானையும் அங்கு சென்றிருக்கிறது. நான் நரியின் முகத்தில் என்றும் விழிக்கவே மாட்டேன். எனவே உங்கள் கூட்டத்திற்கு வர எனக்கு இஷ்டம் இல்லை. யானையிடம் சென்று என் முடிவைக் கூறிவிடு என்று பூனையைப் பார்த்து மான் கர்வத்துடன் கூறியது.

பூனை மிருகங்களின் சபைக்கு சென்று மான் கூறியதை அப்படியே சொன்னது. அதைக் கேட்ட யானை, ``மானிற்கு தான் அழகாக இருக்கிறோம் என்ற ஆணவம் இருக்கிறது. அழகால் ஆபத்து வரும் என்ற உண்மையை ஒருநாள் மான் உணர்ந்து கொள்ளும் அதன்பின் அது நம்மைத் தேடி வரும். அதுவரை நாம் மானை விட்டுவிடுவோம்`` என்று கூறியது. யானையின் கூற்றை மற்ற மிருகங்களும் ஏற்றுக் கொண்டன. திட்டமிட்டபடி மிருகங்கள் கூடிப் பேசின. அன்றைய கூட்டத்தில் யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து பேசப்பட்டது.

உருவத்தில் பெரியதாக உள்ள யானையே தலைவராக இருக்கவேண்டும் என்று மற்ற மிருகங்கள் ஏகோபித்த குரலில் கூறின. யானையும் தலைவராக இருக்க சம்மதித்தது. நரியை செயலராக இருக்க யானை பரிந்துரை செய்தது. மற்ற மிருகங்களும் யானையின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டன. அப்போது தூரத்தில் சிங்கம் ஒன்று உருமியது. சிங்கத்தின் உருமல் சத்தம் கேட்டு, கூடியிருந்த அனைத்து மிருகங்களும், ஆளுக்கு ஒரு திசையில் ஓடி காட்டில் ஒளிந்து கொண்டன.

சிங்கத்தின் உருமல் சத்தம் கேட்டு மானும் ஒரு புதருக்குள் ஓடியது. மான் வேகமாக ஓடியபோது, மானின் அழகிய கொம்பு ஒரு முட்புதருக்குள் சிக்கிக் கொண்டது. எனவே, மானால் அங்கிருந்து நகர முடியவில்லை. மானின் கொம்பு முட்புதருக்குள் சிக்கி இருப்பதைப் பார்த்த நரி, யானையிடம் சென்று கூறியது. உடனே யானை வேகமாக அங்கு சென்று, முட்செடியை வேரோடு தன் துதிக்கையால் வளைத்துப் பிடித்து தூக்கியது. நரி, முட்செடியின் கிளைகளில் இருந்து மானின் கொம்பை விடுவித்தது. எனவே, மான் முட்புதரின் பிடியில் இருந்து விடுபட்டது.

அழகான கொம்பு இருப்பதால், துள்ளி துள்ளி ஓடுவதால் கர்வம் கொண்டு இருந்த மான் அன்று தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டது. தக்க நேரத்தில் வந்து தன்னை காப்பாற்றிய யானைக்கும், நரிக்கும் மான் நன்றி கூறியது. `இனிமேல் நான் அழகாக இருக்கிறேன் என்று கர்வம் கொள்ள மாட்டேன் என்று கர்வம் கொள்ள மாட்டேன் நானும் உங்களில் ஒருவனாக அடுத்து நடக்க இருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்கிறேன்` என்று மான் கூறியது. என்று கதையைக் கூறி முடித்த தாத்தா, நாம் பெற்றிருக்கிற தனித்திறமையால், தனிச்சிறப்பால், நமக்கு தன்னம்பிக்கை வர வேண்டுமே தவிர, `தான்` என்ற ஆணவமோ, கர்வமோ வந்துவிடக்கூடாது என்ற நல்ல கருத்தை இந்தக் கதை நமக்கு உணர்த்துகிறது`` என்றார்

No comments: