கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Sunday, July 21, 2013

செவக்காட்டுச் சேதிகள்-18அன்னபூரணத்தின் அவலக் கதை-I

அன்னபூரணத்தின் அவலக் கதை-I


தமிழகத்தைச் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து அப்பகுதிகளை ஜமீன்தார்கள் ஆண்டு வந்தார்கள். எங்கள் பகுதி ஊத்துமலை ஜமீனைச் சேர்ந்தது. சில ஜமீன்களின் வரலாறுகள் ஆதாரபூர்வமாக (தக்க சான்றாதாரங்களுடன்)எழுதப்பட்டுள்ளது.

ஊத்துமலை என்ற ஊரைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்த ஊத்துமலை ஜமீனின் வரலாற்றை இதுவரை யாரும் முழுமையாகத் தொகுத்துத் தரவில்லை. ஊத்துமலை ஜமீனைப் பற்றி வாய்மொழி வாயிலாக உலவி வந்த பல்வேறு சொல் கதைகளை நான் பல்வேறு இதழ்களில் அவ்வப்போது எழுத்தில் பதிவு செய்துள்ளேன்.

சமீபத்தில் ஊத்துமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு.த. மருது பாண்டியன் அவர்கள், ஊத்துமலை ஜமீனின் வரலாற்றை முறையாகத் தொகுத்து, "ஊத்துமலை ஜமீன் தமிழ் வளர்த்த பூமி" என்ற நூலை வெளியிட்டுள்ளார்.இந்நூலை எழுதுவதற்கான வரலாற்று ஆவணங்களை எல்லாம் அவர், ஆங்கிலேயர்கள் எழுதி வைத்துச் சென்றுள்ள (பதிவு செய்துள்ள) ஆவணங்களில் இருந்தே பெற்றுள்ளார். தமிழர்களுக்கு குறிப்பாகத் தமிழ் அறிஞர்களுக்கு சமகால வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்பு அக்காலத்தில் இருந்ததில்லை என்பதை நாம் மறுக்க முடியாது.

அந்நூலில் ஊத்துமலை ஜமீனை ஆண்ட ஜமீன்தார்களில் மிகவும் புகழ்பெற்றவரும், மக்களால் போற்றப்பட்டவரும் தமிழ்ப்புலவர்களை ஆதரித்தவருமான இருதாலய மருதப்ப பாண்டியரின் வரலாற்றை மிகச் சிறப்பாகத் தொகுத்துத் தந்துள்ளார்.

இருதாலய மருதப்ப பாண்டியரின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்து காணப்படும் அன்ன பூரணம் என்ற பெண்ணின் கதை உள்ளபடியே அந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்களின் ஆதிக்க வெறிக்கும், அதிகார மோகத்திற்கும், இடையே அன்ன பூரணம் என்ற சிறுமி அகப்பட்டு அவள் அனுபவித்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. எல்லாம் விதியின் செயல் என்று ஒரே வார்த்தையில் விடை சொன்னாலும், அன்னபூரணம் வடித்த கண்ணீரின், அனுபவித்த துன்பத்தின் சுமை மிகவும் அதிகம்.

அன்ன பூரணத்தம்மாளின் கதையை மிகச் சுருக்கமாக வாசகர்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன்.

ஊத்துமலை ஜமீனின் புதியதலை நகரமாக வீர கேரளம் புதூரை அறிவித்து அங்கு ஒரு அழகிய அரண்மனையைக் கட்டி, அதில் குடி பெயர்ந்து ஆட்சி செய்கிறார் இருதாலய மருதப்ப பாண்டியன்.

ஊத்துமலைக்கு அருகில் உள்ளது குருக்கள்பட்டி என்ற ஊர். குருக்கள் பட்டியில் அழகப்பத்தேவர் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் வேட்டையாடுவதில் வல்லவர். எனவே, அவருடன் மருதப்பர் அடிக்கடி, ஊத்துமலைக் காட்டிற்கு வேட்டைக்குச் சென்றார்.

ஒரு நாள் வேட்டையின் போது மருதப்பரை கருநாகப்பாம்பு ஒன்று தீண்ட வருகிறது. தக்க சமயத்தில் அழகப்பத் தேவர் கருநாகப் பாம்பை வெட்டி ரெண்டு தூண்டாக்கிக் கொன்று மருதப்பரின் உயிரைக் காக்கின்றார்.

தன் உயிரைக்காத்த அழகப்பத் தேவருக்கு அன்று மாலையே வீரகேரளம் புதூரில் உள்ள தன் அரண்மனையில் தடபுடலாக விருந்து கொடுத்து,அவருக்குத் தேவையான பொன் பொருள்களையும், தனக்குப் பிரியமான, குதிரை ஒன்றையும் தானமாகக் கொடுத்து அழகப்பத்தேவரை கௌரவித்த மருதப்பர், "உமக்கு வாரிசாக இருக்கும் ஒத்த ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கைக்கும் நானே பொறுப்பேற்கிறேன்" என்று சொல்கிறார்.

பொன், பொருளைப் பெற்ற போதையில் அழகப்பத் தேவர், மருதப்பர் சொன்ன வார்த்தைகளின் பொருளை தனக்குச் சாதகமாக (வேறு விதமாக)புரிந்துகொள்கிறார். விதி இங்குதான் விளையாட ஆரம்பிக்கிறது.

மருதப்பர், குருக்கள்பட்டி அழகப்ப தேவரின் மகளின் நல் வாழ்விற்காக, அப்பெண்ணிற்குத் திருமணம் நடைபெறும் போது, நகை நட்டுகளைச் செய்து கொடுத்து உதவ வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அழகப்பத் தேவரிடம் "உம் மகளின் வாழ்க்கைக்கும் நான் பொறுப்பு" என்று கூறினார்.ஆனால் அழகப்பத் தேவரோ, மருதப்பரே தன் வாயில் சொன்னதால், ‘உன் மகளுக்கு நானே வாழ்க்கை கொடுக்கிறேன்’ (அவளைத் திருமணம் செய்து கொண்டு) என்று வேறுவிதமாகப் பொருள் புரிந்து கொள்கிறார்.

குறுந்தன் மொழி என்ற ஊரைச் சேர்ந்த மீனாட்சி சுந்தர நாச்சியார் என்ற பெண்ணைப் பார்த்ததில் இருந்து அவளின் அழகில் மயங்கி, அவளையே ஒரு தலையாகக் காதலிக்கின்றார் மருதப்பர்.

சாதாரண குடிமக்களில் இருந்து தனக்கான வாழ்க்கைத் துணையை ஜமீன்தார்கள் தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால் மருதப்பர் குறுந்தன் மொழியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரி என்ற பெண்ணைப் பல எதிர்ப்புகளுக்கு இடையே 1864-ஆம் ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி, வீரகேரளம் புதூரில் உள்ள தனது அரண்மனையில் வைத்து மணமுடித்துக் கொள்கிறார்.

மணவிழாவில் குருக்கள் பட்டி அழகப்பத் தேவர் மட்டும் கலந்து கொள்ளவில்லை. "தன் உயிர் காத்த நண்பர் தன் திருமணவிழாவில் கலந்துகொள்ள வில்லையே" என்று நினைத்து மருதப்பர் மனவருத்தம் கொள்கிறார். அழகப்பத் தேவரை அழைத்து வர ஆள் அனுப்புகிறார்.அப்போதும் அழகப்பத் தேவர் வரவில்லை. எனவே மணக்கோலத்தில் இருந்த மருதப்பரே தன் நண்பரைத் தேடி குருக்கள் பட்டிக்குச் செல்கிறார்.

மணக்கோலத்தோடு, தன் வீடு தேடி வந்த மன்னர் மருதப்பரை, முகம்வாடிய நிலையில் அழகப்பத் தேவர் வரவேற்கிறார். மருதப்பர்,அழகப்பரிடம், நான் முறைப்படி என் திருமணத்திற்கு ஓலை அனுப்பினேன். நீர் என் திருமணத்திற்கு வரவில்லை. பிறகு ஆள் அனுப்பி உங்களை அழைத்து வரச் சொன்னேன் அப்போதும் தாங்கள் தக்க பதிலும் சொல்லி அனுப்பவில்லை. நேரிலும் வரவில்லை. "என் மேல் தாங்களுக்கு அப்படி என்ன கோபம்? என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் நேரில் வந்தேன்" என்றார்.

அழகப்பத் தேவர், "தாங்களின் உயிரை நாகப்பாம்பிடம் இருந்து காத்த அன்று தாங்கள் ’உன் மகளின் வாழ்க்கைக்கு நான் பொறுப்பு’ என்று சொன்னீர்கள். எனவே, தாங்கள் என் மகளைத்தான் திருமணம் செய்து கொள்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால் இன்று வேறு ஒரு பெண்ணுக்கு மாலையிட்டு, தாங்கள் ‘வாக்கு’ மீறி விட்டீர்கள். எனவேதான் நான் உங்கள் திருமணத்திற்கு வரவில்லை" என்றார்.


"தான் சொன்னதைத் தன் நண்பன் தவறான அர்த்தத்தில் புரிந்து கொண்டுள்ளானே." என்று மன வருத்தப்பட்ட மருதப்பர், கொடுத்த வாக்கை மீறக்கூடாது என்ற காரணத்திற்காக, அப்போதே அவ்வூர் மக்களின் முன்னிலையில், ஒரு மாலையை வாங்கி, அன்ன பூரணம் என்ற சிறுமிக்குச் சூட்டி, "இவளும் இனி என் மனைவிதான் நான் என் நண்பனுக்குக் கொடுத்த வாக்கை அவரின் விருப்பப்படி நிறைவேற்றி விட்டேன்" என்று அறிவித்தார். அப்போது அழகப்பத் தேவரின் மகளான அன்ன பூரணிக்கு சுமார் பத்து வயதுதான் இருக்கும்.

சிறுமி அன்ன பூரணிக்கு எல்லாமே விளையாட்டாகத் தெரிந்தது. குருக்கள் பட்டி அழகப்பத்தேவர் ஜமீன் சொத்துக்களுக்கு வாரிசாக வேண்டும் என்ற உள் நோக்கத்திற்காகத்தான் தன்மகளையே பகடைக் காயாக வைத்து விளையாடுகிறார் என்ற விபரம் யாருக்கும் தெரியவில்லை.

அன்னபூரணி என்ற சிறுமிக்கு ரெண்டாந்தாரமாக மாலையிட்டுள்ளார் மன்னர் மருதப்பர் என்ற சேதி(செய்தி) காற்றில் பரவியதும், மருதப்பரின் தாயார் பெரிய நாயகி அம்மாள், தன் மகனான மருதப்பரை அழைத்துக் கண்டித்தார்.


"கொடுத்தவாக்கைக் காப்பாற்றத்தான் அச்சிறுமிக்கு மாலை சூடினேன்" என்று விளக்கம் சொல்லியும், மருதப்பரின் தாயார் அச்சமாதானத்தை ஏற்றுக் கொள்ளாமல், தான் பிறந்த ஊரான சொக்கம்பட்டிக்குச் (சொக்கம்பட்டி ஜமீன்தாரின் அரண்மனைக்கு) சென்று விட்டார்.

மீனாட்சி சுந்தரி அம்மாளின் வீட்டாரும், மருதப்பர் மறுமணம் செய்து கொண்டதை விரும்பவில்லை. எனவே குருக்கள்பட்டி அழகப்பத்தேவருக்கும் அவரின் மகளான அன்னபூரணிக்கும் சொக்கம்பட்டி ஜமீன்தாரின் வகையறாக்காரர்களும், குறுந்தன் மொழியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தர நாச்சியாரின் வகையறாக்காரர்களும் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தார்கள்.

அன்னபூரணம் என்ற சிறுமியின் உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை வந்தது. எனவே, அழகப்பத் தேவர் தன் மகளை அழைத்துக்கொண்டு வீர கேரளம் புதூர் அரண்மனைக்கு வந்து, மன்னர் மருதப்பரிடம், "உமது மனைவியும், என் மகளுமான அன்னபூரணத்திற்கு,உமது மூத்தமனைவியின் குடும்பத்தினராலும், உமது தாய்மாமனா சொக்கம்பட்டி ஜமீன்தாராலும் எந்த நேரமும் தீங்கு நேரலாம். எனவே, நீர் உமது ரெண்டாவது மனைவியான அன்னபூரணத்திற்கு அரண்மனைக்கு அருகிலேயே ஒரு வீட்டை ஏற்பாடுசெய்து கொடுத்து, அவளுக்குத் தேவையான வசதி வாய்ப்புகளையும் செய்து கொடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, மருதப்பரும், வீரகேரளம் புதூரில் உள்ள தன் அரண்மனைக்கு அருகிலுள்ள லட்சுமி விலாஸ் என்ற மாளிகை ஒன்றை ஒதுக்கிக் கொடுத்து. அங்கு அழகப்பத் தேவரையும் அவரின் மகளான அன்னபூரணத்தையும் தங்கச் சொன்னார்.

பருவ வயதை அடையாத, உலக நடப்புத் தெரியாத அன்னபூரணி என்ற சிறுமிக்குத் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது கூடப் புரியவில்லை.அவள் விளையாட்டுப் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாட்டுப் பராக்கில் அலைந்தாள்.

லட்சுமி விலாசுக்கு அன்னபூரணி குடி வந்ததால், மீனாட்சி சுந்தர நாச்சியார் கோபம் கொண்டார். ஏற்கனவே மருதப்பரின் தாயார் பெரிய நாயாகி அம்மாள் கோபித்துக் கொண்டு சொக்கம்பட்டி சென்றவர் திரும்பி வரவேயில்லை.

மருதப்பர் "வாக்கு’க் கொடுத்து இப்படி ஒரு வேண்டாத சிக்கலில் மாட்டிக் கொண்டோமே" என்று நினைத்து மனம் வருந்தினார்.

கலை, இலக்கிய ஈடுபாடு, வேட்டைக்குச் செல்வது, அரச பரிபாலனம் என்று நீரோட்டமாகப் போய்க் கொண்டிருந்த மருதப்ப பாண்டியரின் வாழ்வை அழகப்பத் தேவரின் பணத்தாசையும், பதவி மோகமும் நிலைகுலையச் செய்தது.

நாளாக, நாளாக அழகப்பத் தேவர் அரண்மனையில் தன் செல்வாக்கை நிலைநாட்ட முயன்றார். தம் மகளுக்கும் ஜமீனில் சகல உரிமையும் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனால் மருதப்பருக்கும் அழகப்பத் தேவருக்கும் இடையே மனத் தாங்கல் ஏற்பட்டது.

அழகப்பத்தேவரின் சூழ்ச்சியால்தான், மனைவியையும், தாயையும் பிரிந்து வாழ்கிறோம் என்பதை உணர்ந்து கொண்ட மருதப்பர், அழகப்பரின் உறவை எப்படியாவது முறிக்க வேண்டும் என்று யோசித்து, தன் இரண்டாவது மனைவியான சிறுமி அன்னபூரணத்தை விவாகரத்து செய்து ஓலை அனுப்பினார். அப்போதும் அன்னபூரணி என்ற சிறுமி வயசுக்கு வரவே இல்லை.

No comments: