கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-6 நாட்டார் நம்பிக்கைகள்

கிராமியப் பண்பாடுகளின் பதிவு என்று பார்க்கிற போது நம்பிக்கைகளும் நம் நினைவுக்கு வருகிறது. நாட்டுப்புற நம்பிக்கைகள் என்றதும் மூட நம்பிக்கைகள்தான் முதலில் நம் நினைவுக்கு வரும். ஆனால் நாட்டார் நம்பிக்கைகளுள் சில உளவியல் பூர்வமானதாகவும், அறிவியல் பூர்வமானதாகவும், வேளாண்மை மற்றும் கலாச்சாரம் சார்ந்ததாகவும் திகழ்கின்றன. சில நம்பிக்கைகள் அறிவுபூர்வமாக உள்ளன.

பெரும்பான்மையான நாட்டார் நம்பிக்கைகள் அறிவுநிலைக்கு அப்பாற்பட்டு உணர்வு நிலையின் பாற்பட்டு நிற்கின்றன. நாட்டார் நம்பிக்கைகளை, "கிராமிய வளர்ச்சியின் படிக்கட்டுகள்” என்று முனைவர் மா.மீனாட்சி சுந்தரம் கூறுகின்றார்.
மனிதனின் தன்னல உணர்வும், சமுதாய உணர்வுமே இத்தகைய நம்பிக்கைகளைத்தோற்றுவித்து வளர்க்கின்றன. நாட்டார் நம்பிக்கைகள் பெரும்பாலும் அச்ச உணர்வின் அடிப்படையாகத் தோன்றியவையாகக் காட்சியளித்தாலும், இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களை உணராத பொழுதும் மனித வாழ்வில் ஏற்படும் சில நிகழ்ச்சிகளுக்குக் காரணம் கற்பிக்க இயலாத பொழுதும், மனித மனமானது சிலவற்றைப் படைத்துக் காரணம் கற்பித்துக் கொள்கிறது. அவையே நம்பிக்கைகளாக உருவாகின்றன. இப்படி உருவாக்கப்பட்ட நம்பிக்கைகள் தலைமுறை தலைமுறையாக கிராமத்து மக்களால் கடைப்பிடிக்கப்படுகின்றன.
உலகெங்கும உள்ள எல்லாவிதமான சமூக அமைப்புகளிலும் சில நம்பிக்கைகள் பிறப்பு முதல் இறப்பு வரை மனித சமூகத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. இத்தகைய நம்பிக்கைகள் என்று தோன்றின என அறுதியிட்டுத் திட்ட வட்டமாகக் கூற முடியவில்லை. இத்தகைய நம்பிக்கைகளை சமுதாயப் பண்பாட்டு உணர்ச்சிக்கூறுகளின் தொகுதி என்றும் கூறலாம்.
காரண காரியத் தொடர்புகளுக்கு உட்பட்டுச் சான்றுகளின் வாயிலாக நிறுவ முடிவதை நன்னம்பிக்கை என்றும், சான்றுகளின் அடிப்படையிலோ, காரண காரியத் தொடர்பின் வாயிலாகவோ விளக்க முடியாதவற்றை மூடநம்பிக்கை என்றும் நாட்டுப்புறவியல் துறைசார்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
மனித வாழ்வில் காணப்படுகின்ற, பின்பற்றப்படுகின்ற நம்பிக்கைகளுக்குக் காரண காரியம் அறிய முடியவில்லை என்றாலும், மனித சமுதாயம் நம்பிக்கை வயப்பட்டுச் செயல்படுவதைக் காண்கிறோம். ஒரு சமுதாயத்தில் நிலவுகிற நம்பிக்கைகளைச் சேகரித்து ஆய்வு செய்வதன் மூலம் அச்சமுதாயத்தைப் பற்றிய பண்பாடு சார்ந்த செய்திகளை அறிய முடியும்.
தனிமனிதர்கள்தான் புதிய, புதிய நம்பிக்கைகளைப் படைக்கின்றார்கள். காலப் போக்கில் அவை சமுதாய நம்பிக்கைகளாக மாற்றம் பெற்றுவிடுகின்றன. நான் மேலே கூறிய கருத்தை விளக்க சின்னஞ்சிறு கதையை இந்த இடத்தில் கூறலாம் என்று நினைக்கிறேன்.
ஒரு ஊரில் ஒரு மடம் இருந்தது. அந்த மடத்தை ஒரு துறவி நிர்வகித்து வந்தார். அந்தத் தலைமைத்துறவியுடன் சில சீடர்களும் அம்மடத்தில் வாழ்ந்து வந்தார்கள்.
ஒருநாள் தலைமைத்துறவி மடத்தில் ஒரு யாகம் செய்ய வேண்டும் என்று நினைத்தார். சீடர்களுடன் சேர்ந்து யாகம் நடத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார். ஆயிற்று எல்லா ஏற்பாடுகளும். கனகச்சிதமாகச் செய்தாயிற்று. இனி யாகம் ஆரம்பிக்க வேண்டியதுதான் பாக்கி.
அப்போது யாக சாலையின் குறுக்கே ஒரு பூனை சென்றது. யாகசாலையின் குறுக்கே சென்றது தலைமைத்துறவி அன்போடு வளர்த்து வரும் பூனைதான். தலைமைத் துறவியின் மேல் அன்பு கொண்ட அப்பூனை, அடிக்கடி யாக சாலைக்கு வந்து இடையூறு செய்யக்கூடாது என்று நினைத்து தன் சீடன் ஒருவனைப் பார்த்து “ அந்தப் பூனையைப் பிடித்து யாகசாலைக்கு என்று போடப்பட்ட பந்தக்கால் ஒன்றில் கட்டிப் போடு!” என்று உத்தரவிட்டார். சீடனும் ஓடிப்போய் அப்பூனையைப் பிடித்து வந்து யாகசாலையின் பந்தக்கால் ஒன்றில் கட்டிப்போட்டான்.
இப்படியே காலங்காலமாக அந்த மடத்தில் ஒவ்வொரு முறையும் யாகம் நடக்கிறபோது குறுக்கும் நெடுக்குமாகச் சென்று கொண்டிருக்கும் அப்பூனையைப் பிடித்துச் சீடன் ஒருவன் பந்தக்காலில் (பந்தல் போட உதவும் தூணில்) கயிற்றால் கட்டிப் போட்டான்.
காலங்கள் சென்றன. ஒரு நாள் தலைமைத்துறவி சமாதியானார். அவர் வளர்த்த பூனையும் இறந்து விட்டது. சீடர்களில் முதன்மையாகத் திகழ்ந்தவன் தலைமைத்துறவி என்று பட்டம் சூட்டிக்கொண்டான். புதிய தலைமைத்துறவி பட்டம் சூட்டிக் கொண்ட பின்பு யாகம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்தனர்.
ஆயிற்று, யாகம் நடத்த எல்லா ஏற்பாடுகளும் செய்தாயிற்று. யாகம் துவங்கும் முன் தலைமைத்துறவி, “எல்லாம் முறையாக உள்ளனவா?” என்று தன் சீடர்களைப் பார்த்துக் கேட்டார். சீடர்களில் ஒருவன், “குருவே எல்லாம் முறையாக உள்ளது. ஆனால் ஒரே ஒரு குறை உள்ளது” என்றான்.
தலைமைத் துறவி “அது என்ன குறை என்று சொல். அதையும் நிவர்த்தி செய்து விடுவோம்” என்றார்.
சீடன் “குருவே, நம் பழைய குருநாதர் யாகம் செய்யும் முன் ஒரு பூனையைப் பிடித்து வந்து யாகசாலை பந்தக்காலில் கட்டிப்போடச் சொல்வார். இப்போது நம் யாகசாலையில் அது ஒன்றுதான் குறை” என்று மிக பௌவியமாகச் சொன்னான்.
புதிய தலைமைத் துறவிக்கு சீடன் சொல்வதும் சரிதான் என்று பட்டது. எனவே தன் சீடர்களைப் பார்த்து, “உடனே எங்கிருந்தாவது ஒரு பூனையைப் பிடித்து வந்து யாகசாலை பந்தக்காலில் கட்டிப்போடுங்கள்” என்று உத்தரவிட்டார். குருநாதர் சொல்லை மீறமுடியுமா? உடனே சீடர்கள் அனைவரும் ஆளாளுக்கு ஒரு திசை நோக்கி ஓடி எப்படியோ ஒரு பூனையை விரட்டிப் பிடித்துக் கொண்டு வந்து யாகசாலை பந்தக்காலில் கட்டினார்கள். அதன்பின்தான் அன்று யாகம் ஆரம்பித்தது.
அதன்பிறகு ஒவ்வொரு முறையும் அந்த மடத்தில் யாகம் ஆரம்பிக்கும் முன்பு, யாகசாலையின் பந்தக்கால் ஒன்றில் ஒரு பூனையைப் பிடித்துக் கட்டிப்போட வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகி சம்பிரதாயமாகி விட்டது என்பதுதான் அந்தக்கதை.
இக்கதை தவறான சில பழக்கங்கள் எப்படி நம்பிக்கை வழக்கங்களாக உருவாகிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. சமுதாயத்தில் இன்று உலவி வருகிற பல நம்பிக்கைகள் நான் மேலே கூறிய கதைபோல உருவாகியவைதான் என்றாலும் அவை சமுதாயத்தின் மீது ஆழமாகப் படர்ந்துள்ளன.
இறைவனைப் பற்றிய நம்பிக்கைகளையும், நாம் இந்த இடத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும். எல்லா மதங்களின் ஆன்மீக வேர்களும் நம்பிக்கை என்ற பூமியைப் பற்றியே நிற்கின்றன. நம்பிக்கைகள் அற்ற சமயத்தை பக்தி நெறியை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.
பெரும் முதலீட்டில் தயாரிக்கப்படுகின்ற திரைப்படங்களை உருவாக்கும் முன்பு, சினிமாத்துறை சந்திக்கும் ‘சென்ட்டிமெண்ட்’` என்ற நம்பிக்கைகள் பற்றி தனி ஒரு கட்டுரையே எழுதலாம்.
இனி கிராமப்புறங்களில் உலவும் நம்பிக்கைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
தலை ஈத்துப் பசுங்கிடாரியின் சாணியை மின்னல் ஒளி தாக்கினால் அது தங்கமாக மாறிவிடும் (தலையீத்துக் கிடாரியின் சாணியும் மின்னல் ஒளியும் என்று ஒன்றுசேர...?)
புணர்ந்துகொண்டிருக்கும் நல்ல பாம்புகளின் மீது கோடி(புதிய) துணியைப் போட்டு அதில்பாம்புகளின் புணர்ச்சியின் போது வெளிப்படும் திரவம்(விந்து) பட்ட துணியை எடுத்துக் கொண்டு போனால் நினைத்த காரியம் வெற்றி பெறும் (யார் புணரும் பாம்பின் மேல் புதுத்துணியைப் போட...?) அதை யாப்பு என்ற நோய் வந்தவன் கழுதையைப் புணர்ந்தால் அந்நோய் நீங்கும்.(தன்னைப் புணர்கிறவனை உதைக்காமல் இருக்க வேண்டுமே கழுதை!) கழுதையின் உதையைக் கழுதையால்தான் தாங்க இயலும். மனிதனால் கழுதை உதையைத் தாங்க முடியுமா? அதிலும் கழுதை எந்த இடத்தில் மனிதனை உதைக்கும் என்று திட்டமாகச் சொல்ல முடியாதே!)
அந்திவேளையில் நம் வீட்டிற்கு வருகிற சம்மந்தக்காரர்கள் விளக்குப் பொருத்திய பிறகே நம் வீட்டை விட்டுச் செல்ல அனுமதிக்க வேண்டும். (இல்லை என்றால் நம் வீட்டு லெட்சுமி(செல்வம்) அவர்களோடு சென்றுவிடும்)
இரவுவேளைகளிலும், வெள்ளிக்கிழமைகளிலும் ஒரு பொருளைக் கொடுக்க மாட்டார்கள்.(இரவுகளைப் பற்றிய நாட்டார் நம்பிக்கைகள் சார்ந்த பிம்பங்களும், வெள்ளிக்கிழமை பற்றிய நம்பிக்கைக் கருத்தாக்கங்களும் ஏராளமாக பாமர மக்களிடம் உள்ளன).
புதன் கிழமை ஈன்ற மாட்டை (கன்றோடு) சம்பந்தக்காரர்களுக்குத் தானமாகக் கொடுத்துவிட வேண்டும்.(எப்படா சம்மந்தக்காரரின் மாடு புதன்கிழமை கன்றுபோடும் என்று காத்திருப்பான்) வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் காத்துக்கறுப்பு(பேய், பிசாசு) லாந்தும்(நடமாடும்) (பேய்,பிசாசுகளைப் பற்றி நாட்டுப்புறங்களில் வண்டிவண்டியாய் நம்பிக்கைகள் உலவுகின்றன. அவைகளைத் தொகுத்து தனிக் கட்டுரையே எழுதலாம்)
இழவுக்கு(துஷ்டி வீட்டிற்கு) வந்தவர்களை ‘வா’ என்று கேக்கக் கூடாது. இழவு வீட்டிற்கு வந்தவர்கள் போகும்போது ‘போயிட்டு வாரேன்’` என்று சொல்லிக் கொள்ளாமல் இழவு வீட்டை விட்டுக் கிளம்ப வேண்டும். (நல்ல பிள்ளைக்கு அடையாளம் சொல்லாமல் பிரயாமல் போகிறது, என்ற பழமொழி இதன் அடியாகப் பிறந்ததுதான்) இது உளவியல் சார்ந்த நம்பிக்கையாகும்.
இளங்கொடியை (மாடு, கன்றை ஈன்றவுடன் போடும் நஞ்சுக்கொடியை) நாய் தின்றுவிட்டால் மாட்டில் பால் சுரக்காது. இந்த இளங்கொடியை ஆலமரம் முதலிய பால் மரங்களில் கட்டி வைத்தால் மாட்டில் பால் நிறைய ஊறும். பால் மரத்தில் இளங்கொடியைக் காட்டினால் மாட்டின் மடியில் பால் ஊறும் என்பது பாவனை சார்ந்த நம்பிக்கையாகும்)
தலைச்சான் ஆம்பளைப் பிள்ளை இறந்துவிட்டால், வீட்டிற்குள்ளேயே ஒரு இடத்தில் புதைக்க வேண்டும். வெளியில் இடுகாட்டில் புதைத்தால், புதைகுழிக்கு 1 மாத காலத்திற்கு நம்பிக்கையான நபரைக் காவலுக்கு வைக்க வேண்டும். சுடுகாட்டில் எரிக்கும்போதும் நம்பிக்கையான ஆட்களைக் கூட வைத்துக் கொண்டு அப்பிணத்தை எரிக்க வேண்டும். (தலைப்பிள்ளை(ஆண்பிள்ளை)யின் மண்டை ஓடு முதலியவற்றால் மாந்திரிகர்கள் தொழில் செய்வது, ‘மாரண மை’ தயாரிப்பது போன்ற காரியங்களைச் செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையால் இக்கருத்தாக்கம் எழுந்துள்ளது. பச்சைப்பாம்பின் உடம்பைப் பெண்கள் பிடித்து உருவி விட்டுவிட்டு குழம்பு வைத்தால் குழம்பு ருசியாக இருக்கும்.( பச்சைப் பாம்பை யார் பிடித்து வர...?)
கைராசியான ஆளைக்கூப்பிட்டுக் கோழியை அடை வைக்கச் சொன்னால், முட்டையிலிருந்து அதிகமான குஞ்சுகள் வெளிவரும். அவை ஆரோக்கியமாக வளரும்.( பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து மண் எடுத்து வந்து அதைத் தாய்க்கோழி அடைகாக்கும் இடத்தில் (பானையில்) போட்டு வைத்தால் வீரமுள்ள சேவல்கள் பிறக்கும். இத்தகைய சேவல்களை கோழிப்போருக்குப் பயன்படுத்தலாம்.
முயல் நட்டிய வேலியைத் தாண்டாது, வெட்டிய குளத்தில் தண்ணீர் குடிக்காது (வேட்டைக்காரர்களின் நம்பிக்கை இது)
கோழி அடைகாக்கும் போது அதை மிதித்த (உடல் உறவு கொண்ட) சேவலை அடித்து (கொன்று) கறி சமைக்கக் கூடாது (அப்படிச் சமைத்தால், தாய்க்கோழி பொறித்தி குஞ்சுகள் தங்காது. ஒவ்வொற்றாய்ச் சாகும்)
கர்ப்பிணிகள் மசக்கையாக இருக்கும்போது அவர்கள் விரும்பும் தின்பண்டங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அவர் வயிற்றில் பிறக்கும் குழந்தையின் காதில் இருந்து சீழ் வடியும்.
(ஆண்கள், அப்படியாவது பெண்கள் விரும்பும் பண்டங்களை அவர்களுக்கு வாங்கிக் கொடுக்கட்டும் என்று தான் இப்படிப்பட்ட நம்பிக்கைகளை உருவாக்கி இருக்கிறார்கள் போலும்!)
உபயோகிக்கும் சமயத்தில் பச்சிலைகளின் பெயர்களை நேரடியாகச் சொல்லக் கூடாது. சொன்னால் நோய் குணமாகாது. (நாயுருவி என்ற பச்சிலையை 'நாய் விட்டை' என்ற மாற்றுப் பெயரில் சொல்வார்கள்)
இப்படி நூற்றுக்கணக்கான நம்பிக்கைகள் கிராமத்து மக்களிடம் உலவுகின்றன. அவைகளை எல்லாம் திரட்டி,
உளவியல் சார் நம்பிக்கைகள்
அறிவியல் சார் நம்பிக்கைகள்
ஆன்மீகம் சார் நம்பிக்கைகள்
வணிகம் சார் நம்பிக்கைகள்
சோதிடம் சார் நம்பிக்கைகள்
வேளாண்மை சார் நம்பிக்கைகள்
இயற்கை சார் நம்பிக்கைகள்
களவு சார் நம்பிக்கைகள்
சகுனம் சார் நம்பிக்கைகள்
கர்ப்பகால நம்பிக்கைகள்
வாழ்வியல் சார் நம்பிக்கைகள்
பேய் பிசாசு சார் நம்பிக்கைகள்
என்று பல்வேறு வகைகளாகப் பிரித்துப் பகுப்பாய்வு செய்யலாம்.
நம்பிக்கை என்றால் நல்ல நம்பிக்கை, மூட நம்பிக்கை என்று இரண்டும் சேர்ந்து தான்.
நம்பிக்கைகளில் பல மனித மனம் சார்ந்து இயங்குகின்றன. சில நம்பிக்கைள் மனதிற்கு ஆறுதலைக் கொடுக்கின்றன. நம்பிக்கைகளை 'மூட நம்பிக்கை' என்ற கோணத்தில் மட்டும் அணுகாமல் அது ஒரு சமூகச் செயல்பாடு என்ற விதத்தில் அணுக வேண்டும்.
நாம் அற்பமாக நினைக்கின்ற பல விசயங்களுக்குள் அபூர்வங்கள் புதைந்திருக்கின்றன. நாம் அபத்தம் என்று ஒதுக்குகிற சில விசயங்களுக்குள் அறிவியலும், உளவியலும் மறைந்துள்ளன.

No comments: