கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Sunday, July 21, 2013

சொலவடைகளும் பழமொழிகளும் 4



அகப்பைச் சிலம்பு ஆடிய குரு போல’ என்கிறது ஒரு சொலவம். முதல் வாசிப்பிலும் முதல் யோசிப்பிலும் இச்சொலவத்திற்கான பொருள் அனேக வாசகர்களுக்குப் புரியாது.


இச்சொலவத்தில் உள்ள சொற்கள் மிக எளிமையானவை. ஆனாலும் இச்சொலவத்திற்கு என்னைப் போன்ற ஒருவன் விளக்கம் சொல்ல வேண்டியதிருக்கிறது.

ஒரு கதை சொல்லியின் சுவாரஸ்யத்துடன் சொன்னால்தான் இச்சொலவத்தின் பொருள் புரியும்.

ஒரு ஊர்ல ஒரு சிலம்பாட்ட அண்ணாவி இருந்தார். சிலம்பாட்டக் கலையை முறையாகக் கற்றுத்தேர்ந்து அக்கலையைப் புதிய மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் ‘ஆசானை’, அண்ணாவி என்று அழைப்பார்கள்.

அண்ணாவிக்கு கல்யாணம் ஆகிப் பிள்ளை குட்டிகளெல்லாம் இருந்தன. அண்ணாவியின் மனைவி ‘மகா கெட்டிக்காரி’ ரொம்ப புத்திசாலி.

அண்ணாவி தன்னிடம் சிலம்பாட்டக் கலையைக் கற்றுக்கொள்ள சேர்ந்த புதிய மாணவர்களுக்கு சிரத்தையுடன் சிலம்பாட்டக்கலையின் நுட்பங்களைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு நாளும் மாணவர்கள் அண்ணாவியிடம் இருந்து சிலம்பு விளையாட்டின் ஒவ்வொரு அடி முறைகள் பற்றிக் கற்றுத் தேறிக்கொண்டிருந்தார்கள்.

சிலம்பு விளையாட்டைப் பயிலும் மாணவர்களில் ஒருத்தன் ரொம்ப வசதி வாய்ப்பு உள்ளவன். பெரிய இடத்துப்பிள்ளை. அந்த வட்டாரத்தில் இந்த அண்ணாவியை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. அவ்வளவு பெரிய ‘தொள்ளாளி’ அவர்.

இந்த அண்ணாவியின் பெயரைக் கேட்டாலே மற்ற அண்ணாவிமார்கள் எல்லாம் எழுந்து நின்று மரியாதை செய்வார்கள் அந்த அளவுக்குப் பேரும் புகழும் பெற்று விளங்கினார் இந்த அண்ணாவி.

இந்த அண்ணாவியிடம் சிலம்பாட்டக் கலையைப் படித்த மாணவர்களுக்கும் அந்த வட்டாரத்தில் தனி மரியாதை இருந்தது.

எந்த அண்ணாவியும் தான் கற்ற வித்தைகள் அனைத்தையும் தன் சிஷ்யப் பிள்ளைகளுக்கு சீடர்களுக்கு முழுமையாகச் சொல்லிக் கொடுக்க மாட்டார். முக்கியமான சில அடிமுறைகளைக் கையிருப்பாக மறைத்து வைப்பார்கள்.

பண்ணையாரின் மகனான அந்தச் சிஷ்யப்பிள்ளை தன் அண்ணாவியான குருநாதருக்கு குருதட்சணை என்ற பெயரில் நிறைய காசு பணத்தைக் கொடுத்தான். எனவே குருநாதரும் ‘கரவில்லாமல்’ அந்தச் சீடனுக்கு மட்டும் தனக்குத் தெரிந்த எல்லா அடிமுறைகளையும் கற்றுக்கொடுத்துவிட்டார்.

குருநாதரிடம் இருந்து அவருக்குத் தெரிந்த விளையாட்டு முறைகள் அனைத்தையும் கற்றுக்கொண்டதால் அந்தப் பணக்காரச் சீடனுக்குத் ‘தான்’ என்ற அகந்தை தலைக்கேறிவிட்டது.

அந்த அண்ணாவி இதுவரை வேறு எந்த அண்ணாவியிடமும் சிலம்பம் விளையாடித் தோற்றதில்லை. அவரின் பெயரைக் கேட்டாலேயே அஞ்சி நடுங்குவார்கள். அவரிடம் எத்தனை விதமான அடிமுறைகள் இருக்கு என்று அந்த வட்டாரத்தில் உள்ள எந்த அண்ணாவிக்கும் தெரியாது.

தன் குருநாதரிடம் இருந்து எல்லாவிதமான விளையாட்டு முறைகளையும் கற்றுக்கொண்டதால், அந்தப் பணக்கார சீடன் ஒருத்தன் குருநாதரின் வீட்டுக்கே வந்து ‘என்னோடு சிலம்பம் விளையாடி உம்மால் ஜெயிக்க முடியுமாய்?’ என்று சவால் விட்டான்.

‘பணக்கார சீடன் தன் புத்தியைக் காட்டி விட்டான்’ என்று தன் மனதிற்குள் நினைத்து நொந்துகொண்டார்.


பணக்கார சீடன் குருவையே எதிர்விளையாட்டுக்கு அழைத்த சேதி ஊர் முழுவதும் பரவிவிட்டது. ‘அவன் குருவை மிஞ்சிய சீடனாகி விட்டான்’ என்று சிலர் பேசிக்கொண்டார்கள். குருநாதர் கூனிக் குறுகிப் போக, சீடன் தலைநிமிர்ந்து ஆணவத்தோடு ஊருக்குள் அலைந்தான்.

பணக்கார சீடன் சவால் விட்ட சேதி அண்ணாவியின் மனைவி காதுவரைப் போயிற்று. தன் கணவன் முகம் வாடி இருப்பதைக் கவனித்த அண்ணாவியின் மனைவி, தன் புருசனைப் பார்த்து, ‘நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? உங்கள் முகம் ஏன் வாடிப்போய் இருக்கிறது’ என்று கேட்டாள்.

அண்ணாவி, ‘அந்தப் பணக்கார சீடன் எனக்கு நிறைய பணம் கொடுத்து. என்னிடம் இருந்த அடிமுறைகள் அனைத்தையும் கற்றுக்கொண்டான். நானும் எந்த வித்தையையும் கையிருப்பாக வைத்துக் கொள்ளாமல் அவனுக்கு கற்றுக்கொடுத்துவிட்டேன். இப்போது அந்த நன்றி கெட்ட பையல் குருவான என்னையே எதிர்விளையாட்டுக்கு அழைக்கிறான். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை’ என்று மன வருத்தத்துடன் கூறினார்.

புருசன் சொன்னதைக் கேட்ட பெண்டாட்டிக்காரி, ‘அட, இதற்கா போய் இவ்வளவு தூரம் கவலைப்படுகிறீர்கள். ‘குரு’ என்றைக்கும் குருதான். சீடன் என்றைக்கும் சீடன். எந்த குருவையும் உலகத்தில் எந்த சீடனும் ஆழம் பார்க்க முடியாது. முதலில் இந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். மன தைரியத்தை விடாதீர்கள். நான் அந்தச் சீடனை வெல்லும் வழியைச் சொல்லித் தருகிறேன். நாளையே அவனை எதிர்விளையாட்டுக்குக் கூப்பிட்டு நீங்களும் சவால் விடுங்கள். பிறகு நடப்பதை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று புருசனுக்குத் தைரியம் கூறினாள்.

அண்ணாவிக்குத் தன் மனைவி மதிநுட்பமானவள். ‘ஏதேனும் ஒரு ‘அசைவு’ இல்லாமல் அவள் இவ்வளவு தைரியமாக அவனை எதிர்விளையாட்டுக்கு வாருங்கள்’ என்று அழைக்கச் சொல்ல மாட்டாள்’ என்று நம்பினார். எனவே தன் மற்ற சீடர்களை அழைத்து ‘நாளை மாலை அஞ்சு (ஐந்து) மணி வாக்கில் ஊர் நடுவில் உள்ள பொதுத்திடலில் போட்டியை வைத்துக்கொள்வோம். நான் தயார்’ என்று அந்த பணக்கார சீடனுக்குச் சொல்லி அனுப்பினார்.

‘பெரியவரான அண்ணாவி தனக்குத் தெரிந்த வித்தைகளை எல்லாம் சொல்லித் தந்தேன்’ என்று பொய்தான் சொல்லி இருப்பார் போலவும். இல்லை என்றால் எப்படி இவ்வளவு தைரியமாக, நம்மைப் போட்டிக்கு அழைக்கிறார் என்று நினைத்ததும் அவனை அறியாமலேயே அவனுக்குள் ஒருவித பயமும் நடுக்கமும் வந்துவிட்டது.


என்றாலும் போட்ட சபதத்தை ஏற்றுக்கொள்ளாமல் பின்வாங்கக்கூடாது என்பதற்காக அந்தப் பணக்கார சீடனும் ‘களம்’ இறங்கத் தயாராகினான்.

‘தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல வித்தை கற்றுக்கொடுத்த பெரியவரையே எதிர்விளையாட்டுக்கு அழைக்கிறானே, இந்த குருவை மிஞ்சிய சீடன் என்று ஊர்ப் பெரியவர்களில் சிலர் அந்தச் சீடனைத் திட்டினார்கள். ‘பெரிய அண்ணாவியை உன்னால் ஜெயிக்க முடியாது’ அவர் அனுபவத்தின் முன் நீயெல்லாம் ஒரு தூசு’ என்றும் சிலர் அவனை அதைரியப்படுத்தினார்கள்.


ஆக, ஆரம்பத்தில் அந்த பணக்கார சீடனுக்கு இருந்த சூரத்தனம் நேரமாக, நேரமாக குறைந்தது. தவறான ஒரு முடிவெடுத்து விட்டோமோ என்று மனம் குழம்பினான். ‘புலி வாலைப் பிடித்தால் விட முடியாது’ என்ற கதையாக போட்ட சவாலுக்காக அந்தப் பணக்கார சீடன் களமிறங்கினான்.

நேரமாக ஆக குருவுக்கு தன்னம்பிக்கை துளிர்த்தது. ‘அவன் வயதும் நம் அனுபவமும் சரி நாம் ஏன் அவனுக்குப் பயப்பட வேண்டும்?’ என்று மனத்தெளிவு கொண்டார்.

குருநாதர் வீட்டை விட்டுக் கிளம்பும்போது, வழக்கமாகத் தன் கையில் எடுத்துக் கொள்ளும் சிலம்பக் கம்பை எடுத்துக் கொண்டார். அப்போது அவர் எதிரே வந்த அவர் மனைவி. அடுக்களையில் இருந்து எடுத்து வந்த நீளமான காம்புடைய ஒரு மர அகப்பையைக் கொடுத்து, இதையும் ஒரு ஆயுதமாக, இடது கையில் வைத்துக் கொள்ளுங்கள் என்றாள்.

புத்திசாலியின் மனைவி சொல்வதில் ஏதேனும் ஒரு சூட்சுமம் இருக்கும் என்று நினைத்த ஆசான். பொண்டாட்டிக்காரி கொடுத்த அந்த மர அகப்பையையும் இடது கையால் வாங்கிக்கொண்டு ஊரின் நடுவில் இருக்கும் மைதானத்திற்குச் சென்றார்.

ஏற்கனவே களத்தில் அதைரியத்துடன் அரைகுறை மனதுடன் நின்ற சீடன், குருநாதர் என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு புதியதொரு ஆயுதத்தைக் கையில் கொண்டு வருவதைப் பார்த்து, ‘எல்லா வித்தைகளையும் சொல்லிக் கொடுத்துவிட்டேன்’ என்று சொன்ன குரு. இப்போ புதியதொரு அகப்பை ஆயுதத்துடன் வருவதைப் பார்த்துப் பயந்துவிட்டான். பயத்தில் அவனுக்கு வேர்த்து வேர்த்துக் கொட்டியது. ‘இனி குருநாதர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுவிட வேண்டியதுதான்’ என்று நினைத்து அவர் காலில் விழுந்து ‘வித்தை சொல்லிக் கொடுத்த குருவையே சண்டைக்கு அழைத்தது என் தப்புதான். என்னை மன்னித்து விடுங்கள்’ என்கிறான்.

குருநாதர், ‘நம் மானம் கப்பலேறாமல் இருந்ததே’ என்று நினைத்து மகிழ்ந்தார். களத்திற்கு வரும்போது இடது கையில் அகப்பையைக் கொடுத்து அனுப்பிய மனைவியின் புத்திசாலித்தனத்தை மனதிற்குள் பாராட்டிக் கொண்டார் குரு.

குருவும் சீடரும் சிலம்ப விளையாட்டில் மோதிக் கொள்ளும் காட்சியைக் கண்டு ரசிக்கக்கூடி இருந்த ஊர்க்கூட்டம் ‘உப்புச் சப்பில்லாமல்’ போய்விட்டதே என்று நினைத்தது. இப்போது மீண்டும் ‘ஒருமுறை அகப்பைச் சிலம்பு ஆடிய குரு போல’ என்ற சொலவடையைச் சொல்லிப் பாருங்கள். அதன் பொருள் புரியும்.

No comments: