கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, July 22, 2013

தாத்தா சொல்லும் கதைகள் 4

`மூர்த்தியும் கீர்த்தியும்..!

 தாத்தா இன்றைக்கு பறவைகளைப் பற்றிய கதை சொல்லுங்க`` என்று குழந்தைகள் கூறின. கண்ணாடித் தாத்தா தன் கதை நினைவுப் பெட்டகத்தில் இருந்து பறவைகளின் கதையைத் தேர்ந்தெடுத்துச் சொல்ல ஆரம்பித்தார்.

கதை கேட்க கூடி இருந்த குழந்தைகளில் மூர்த்தி என்ற பையன் மிகவும் குள்ளமாக இருந்தான். குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப இருக்க வேண்டிய உயரத்தில் இருந்து மூர்த்தி என்ற பையனின் உயரம் குறைவாக இருந்தது. குள்ளமாக இருக்கும் மூர்த்தி கெட்டிக்காரப் பையனாகவும், படுசுட்டியாகவும் இருந்தான். எனவே, கண்ணாடித் தாத்தா மூர்த்தியைப் பார்க்கும் போதெல்லாம், அவனை உற்சாகப் படுத்துவதற்காக, `மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது` என்று சொல்வார். இன்றைக்கு மூர்த்திக்காகவே இந்தக் கதையைச் சொல்கிறேன் என்று குழந்தைகளைப் பார்த்துக் கூறிய தாத்தா, கதை சொல்ல ஆரம்பித்தார். குழந்தைகளோடு மூர்த்தியும் சேர்ந்து ``ம்... கதை சொல்லுங்க`` என்று குரல் கொடுத்தான்.

``ஒரு பெரிய காடு... அந்தக் காட்டில் உள்ள மரங்களில் எல்லாவிதமான பறவைகளும் கூடுகட்டி வாழ்ந்து கொண்டிருந்தன. ஒருநாள் கழுகு பறவைகளை எல்லாம் ஒரே இடத்தில் கூடும்படி உத்தரவிட்டது. கழுகாரின் ஆணைப்படி எல்லாப் பறவைகளும் காட்டில் உள்ள பெரிய ஆலமரத்தின் அடியில் கூடின. ஆலமரத்தின் பெரிய கிளை ஒன்றின் மேல் அமர்ந்து கொண்டு கழுகு கூட்டத்திற்கு வந்திருக்கும். மற்றப் பறவைகளை நோட்டமிட்டது. குருவி, கிளி, மைனா, காகம், செம்போத்து, மரங்கொத்தி, குயில், கொக்கு, நாரை, பருந்து என்று எல்லாவிதமான பறவைகளும் கூட்டத்திற்கு வந்திருந்தன.
மற்ற பறவைகளைப் பார்த்து கழுகு, ``பறவைகளா... இன்றைக்கு உங்களுக்கு நான் ஒரு போட்டி வைக்கப் போகிறேன். அந்தப் போட்டியில் ஜெயிக்கிறவர்களுக்கு நான் ஒரு பரிசு தருவேன். அதோடு `பறவை வீரன்` என்ற பட்டமும் தருவேன்`` என்றது.

``போட்டி நடத்துவது சரி கழுகாரே நீங்களும் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறீரா?`` என்று கேட்டது கிளி. கழுகு, ``நான் தானே போட்டியை நடத்துகிறேன். எனவே போட்டியில் நான் கலந்து கொள்ளப் போவதில்லை. ஆனால் நான்தான் நடுவராக இருந்து போட்டியின் முடிவை அறிவிக்கப் போகிறேன்...`` என்றது.

``சரி போட்டியை எப்போது எங்கு நடத்துவீர்கள்?`` என்று கேட்டது மைனா. நாளை காலை பத்து மணிக்கு போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பறவைகள் எல்லாம் இதே இடத்திற்கு வந்து விடவேண்டும் என்று கூறியது கழுகு.

மரங்கொத்தி, ``பருந்துதான் மிக உயரமாக வானத்தில் பறந்து பரிசைத் தட்டிச் செல்லப் போகிறது இதற்கு போட்டி வேறு தேவையா?`` என்று மனத்திற்குள் சொல்லிக் கொண்டது. பறவைகளின் தலைவனான கழுகு, ``சரி கூட்டம் கலையலாம், நாளை காலையில் அனைவரும் மறக்காமல் போட்டியில் கலந்துகொள்ள அல்லது நடக்க இருக்கும் போட்டியை வேடிக்கை பார்க்க மறக்காமல் இதே இடத்திற்கு வந்துவிடுங்கள்`` என்று மீண்டும் கூறிவிட்டு கழுகு தன் நீளமான சிறகுகளை விரித்து வானத்தில் `கிவ்`வென்று பறக்கத் தொடங்கியது.
அன்று இரவெல்லாம் பறவைகள் ``நாளை நடக்க இருக்கும் போட்டியில் யார் ஜெயிக்கப் போகிறார்களோ?`` என்று சிந்தித்தபடியே தூங்கின. மறுநாள் காலையில் வழக்கத்தைவிட சற்று நேரத்திற்கு முன்பாகவே தூங்கி எழுந்த பறவைகள் அவசர அவசரமாக காலையில் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்து முடித்துவிட்டு காலை ஒன்பது மணிமுதலே அந்த ஆலமரத்தின் அடியில் வந்து அமரத் தொடங்கின. எல்லாப் பறவைகளும் ஓரே இடத்தில் கூடி குரல் எழுப்பியதால் ஆலமரத்தின் அடியில் இருந்து வினோதமான குரலோசை காற்றில் மிதந்து சென்றது.

சரியாக பத்துமணி ஆவதற்கு பத்து நிமிடம் இருக்கும்போது, போட்டியை நடத்தும் கழுகு வந்து பெரிய மரக்கிளையில் அமர்ந்தது. கழுகார் போட்டியின் நிபந்தனைகளை மற்ற பறவைகளுக்கு அறிவித்தார். சரியாக பத்துமணிக்கு நான் வானத்தில் பறந்து வட்டமிட்டபடி, ஒன்று, இரண்டு, மூன்று என்று சொல்வேன். `மூன்று` என்று நான் சொன்னதும் போட்டி ஆரம்பமாகும். சரியாக பத்து நிமிட நேரம் மட்டும் ஒரே சமயத்தில் வானத்தில் எல்லாப் பறவைகளும் பறக்க வேண்டும். நான், வானத்தில் உயரே, உயரே பறந்து போட்டியைப் பார்வை இடுவேன். பத்து நிமிட நேரம் ஆனதும், நான் காலில் கவ்விக் கொண்டு செல்லும் ஒரு `பூ` கொடியை கீழே போடுவேன். உடனே எல்லாப் பறவைகளும் வானத்தில் பறப்பதை நிறுத்திவிட்டு இந்த ஆலமரத்தின் கிளையில் வந்து அமரவேண்டும் என்றது.

போட்டியில் கலந்து கொள்ள வந்திருந்த மற்றப் பறவைகள், கழுகாரின் நிபந்தனைகளைக் கேட்டு சரி என்றன. பத்துமணி ஆவதற்கு, பத்திநிமிடம் இருக்கும்போதே, கழுகு தன் கால்களுக்கு இடையில், காட்டில் கிடந்த ஒரு முல்லைக் கொடியை பிடித்துக் கொண்டு வானத்தில் பறந்து வட்டமிட்டது. போட்டியில் கலந்து கொள்ள சிட்டுக்குருவியும் வந்திருந்தது. மயில் சிட்டுக்குருவியைப் பார்த்து, `உயரே, உயரே பறந்தாலும், ஊர்க்குருவி பருந்தாக முடியுமா? சிறிய பறவையான உன்னால் எப்படி இந்தப் போட்டியில் ஜெயிக்கமுடியும்?` என்று கேட்டது.

மயிலைப் பார்த்து சிட்டுக்குருவி இவ்வளவு பெரிய உடம்பை வைத்துக் கொண்டு, உன்னால் எப்படி மிக உயரமாகப் பறக்க முடியும்? பறவைகளுக்கு இடையில் அழகான பறவை எது? என்று ஒரு போட்டி வைத்தால் நீ உன் நீளமான தோகையை வைத்துக் கொண்டு அதை விரித்து ஆடி, போட்டியில் ஜெயிக்கலாம். இது உயரமாகப் பறக்கும் போட்டி நீயே போட்டியில் கலந்து கொள்ளும்போது, நான் ஏன் மிகச் சிறிய உடம்பை வைத்துக் கொண்டு இந்த போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது? என்று எதிர்க் கேள்வி கேட்டது.

வானத்தில் வட்டமிட்டபடி பறந்து கொண்டு இருந்த கழுகார், தன் கால்களில் பிடித்திருந்த பூங்கொடியை அசைத்து, `ஒன்று, இரண்டு, மூன்று` என்று உரக்கக் கூறியது. உடனே பறவை இனங்கள் எல்லாம் வானத்தில் பறக்கத் தொடங்கின. ஒரே நேரத்தில் பல்வேறு வடிவங்களையும் கொண்ட வித, விதமான பறவைகள் வானத்தில் பறக்கும் அந்த அதிசயக் காட்சியை காட்டில் வாழும் மிருகங்கள் எல்லாம் பார்த்து பரவசப் பட்டன. கழுகார் வானத்தில் மிக உயரமாகப் பறந்து வட்டமிட்டபடி பறவைகளுக்கு இடையே நடைபெறும் அந்தப் போட்டியைக் கண்காணித்தார்.

சரியாக பத்துநிமிடம் ஆனதும் கழுகார் தன் கால்களுக்கு இடையில் கவ்விப் பிடித்திருந்த பூங்கொடியை கீழே நழுவ விட்டார். வானத்தில் உயரமாகப் பறந்து கொண்டிருந்த அனைத்துப் பறவைகளும் தரை இறங்கின. ஆலமரத்தடியில் கூடிய பறவைகளைப் பார்த்து கழுகார், இப்ப நான் போட்டியின் முடிவை அறிவிக்கப் போகிறேன் என்றது. போட்டியின் முடிவைத் தெரிந்து கொள்ள அனைத்துப் பறவைகளும் ஆவலாக இருந்தன.
கழுகார், ஆலமரத்தின் உயரமான கிளை ஒன்றில் அமர்ந்து கொண்டு இன்று நடைபெற்ற போட்டியில் மிக உயரமாக வானத்தில் பறந்த ``பறவை வீரன்`` என்ற பட்டத்தை சிட்டுக் குருவிக்கு அளிக்கிறேன் என்றது. கழுகாரின் தீர்ப்பைக் கேட்டதும் பருந்திற்கு கோவம் வந்துவிட்டது. பருந்து கழுகைப் பார்த்து, கழுகாரே இன்று நடைபெற்ற போட்டியில் நான்தான் வானத்தில் மிக உயரமாகப் பறந்தேன். ஆனால் இன்று நடைபெற்ற போட்டியில் கலந்து கொள்ளாத சிட்டுக்குருவி ஜெயித்ததாக அறிவிப்பது என்ன நியாயம்? என்று கேட்டது.

கழுகார், சிரித்தபடியே! அட முட்டாள் பருந்தே, சிட்டுக்குருவி போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்று உன்னிடம் யார் கூறியது. சிட்டு குருவி உன் முதுகின் மேல் உட்கார்ந்திருந்தது. அதைக்கூட கவனிக்காமல் நீ வானத்தில் சிட்டுக்குருவியைச் சுமந்தபடி வானத்தில் பறந்தாய். என்னுடைய கணக்குப்படி, உன்னைவிட உயரமான உயரத்தில் பறந்தது சிட்டுக் குருவிதான் என்று விளக்கம் கூறினார், நடுவரான கழுகார்.
மயிலைப் பார்த்து அர்த்த புஷ்டியுடன் கண்ணடித்தது சிட்டுக்குருவி. கழுகு போட்டியில் வெற்றி பெற்ற சிட்டுக்குருவிக்கு ஒரு முத்து மாலையை பரிசாக அதன் கழுத்தில் போட்டது. பருந்தைத் தவிர்த்து மற்றப் பறவைகள் எல்லாம் தன் சிறகுகளை அசைத்து , தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தன. இதுதான் பறவைகள் நடத்திய போட்டியில் சிட்டுக்குருவி, வெற்றி பெற்ற கதை என்று கதையைக் கூறிய கண்ணாடித் தாத்தா, ``குழந்தைகளா.. `உருவுகண்டு எள்ளாமை வேண்டும்` என்று வள்ளுவர் கூறியுள்ளார். ``கடுகு சிறுத்தாலும் காரம் போகாது`` என்பதும், சிறிய உளிதான் மலையைத் தகர்க்கும் என்பதும் பழமொழிகள். எனவே, எளியார்களாலும், மெலிந்தவர்களாலும், சிறியவர்களாலும் எதையும் சாதிக்க முடியாது என்று நினைக்கக் கூடாது. அவர்களும் நம்மைப்போல் ஆற்றல் உள்ளவர்கள்தான் என்ற கருத்தை வலியுறுத்தத் தான் சிட்டுக்குருவியின் கதையை உங்களுக்குக் கூறினேன் என்று கதை கூறும் நீதிக் கருத்தையும் கூறிமுடித்தார்`` தாத்தா.

No comments: