கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Thursday, July 25, 2013

தெக்கத்திச் சொலவடைகள்

முன்னுரை

இந்தத் தொடரில் நெல்லை மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ள சொலவடைகள் மட்டும், நெல்லை வட்டார வழக்கு மொழிநடையில் தொகுத்து தர உள்ளேன்.

நமக்கு இதுவரையில் பழமொழிகள் என்ற பெயரில் கிடைத்திருப்பவை எல்லாம் பண்டிதத் தமிழில் தொகுக்கப்பட்டவைகளாகவே உள்ளன.

பழமொழி தொகுப்பு நூல்களில் பழமொழி அல்லாத பல வாக்கியங்களும் பழமொழி என்ற போர்வையில் பதிவாகியுள்ளன. வடமொழிச் சொற்களும், செந்தமிழ்ச் சொற்களும், கொடுந்தமிழ்ச் சொற்களும் விரவிய பல பழமொழிகள் நம்மை அண்ட விடாமல் விரட்டுகின்றன.

பழமொழிகள் என்பதும் சொலவடைகள் என்பதும் ஒன்றல்ல. அவைகளுக்குள் நுட்பமான பல வேறுபாடுகள் உள்ளன. அதுகுறித்து விரிவாக விவாதிக்கவும் சிந்திக்கவும் இடம் உள்ளது.

கிராமத்து மக்கள் பேச்சு வாக்கில் பயன்படுத்துகிற சொலவடைகள், வட்டார வழக்குமொழி நடையிலேயே உலவுகின்றன. அவைகளை மட்டும் தனியே அகர வரிசைப்படி தொகுத்தால், எதிர்கால நம் சந்ததியினர்களுக்கும், இன்றைய நாட்டுப்புறவியல் துறைசார்ந்த ஆய்வாளர்களுக்கும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

கிராமத்துச் சொலவடைகள் சிலவற்றிற்கு ஒரு வாசிப்பில் பொருள் புரியாமல் போகலாம். அத்தகைய-சொலவடைகளுக்கு பின்னாளில் நாம் அவற்றின் அர்த்தத்தைத் தேடிக் கண்டுபிடித்துப் பதிவு செய்யலாம்.

பொதுவாக சொலவடைகளுக்கு அவை சொல்லப்படும் சூழலை வைத்தே பொருள் புரிந்து கொள்ளவேண்டும். சொலவடைகளுக்கு விளக்கம் தேடும்போது அதுகுறித்து நாம் விவாதிக்கலாம். இத்தகைய சொலவடைகளில் ஒரு காலத்திய நம் முன்னோர்களின் பழக்க வழக்கங்களையும், பண்பாட்டுக் கலாச்சார கூறுகளையும் தேடி இனம் கண்டுகொள்ளும் வாய்ப்பு உள்ளது.

புதிய, புதிய கலைச் சொற்களும், மொழி ஆளுமைகளும் இவற்றில் பதிவாகியுள்ளன. சொலவடைகளின் வார்த்தைக்கட்டமைப்பு, வடிவம், ஓசைநயம் போன்றவைகள் குறித்து விரிவாக ஆராய இடம் உள்ளது.

“என்று தோன்றியது? யாரால் தோற்றுவிக்கப்பட்டது?” என்று ஆராய முடியாத அளவுக்கு இவைகள் பழமையானவையாகும். தமிழகம் எங்கும் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள சொலவடைகளை எல்லாம், அந்தந்த வட்டாரத்து வழக்கு மொழி நடையில் தொகுத்தால் நமக்கு ஒரு பெறும் “சம்பத்து” கிடைக்கும்.

பழமொழிகள் உலகம் எங்கும் உள்ளன. அவைகள் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டுள்ள தமிழ்ப் பழமொழிகளோடு உலகப்பழமொழிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்யும் வாய்ப்பும் உள்ளது.

கிராமத்து தரவுகள் என்றால், அவைகளில், சில பிற்போக்கான விசயங்களும், அறக்கழிவான சொல்லாடல்களும் இருக்கத்தான் செய்யும். சொலவடைகளும் அதற்கு விலக்கல்ல.

ஒரு செடியை மண்ணிலிருந்து புடுங்கும்போது, செடியின் வேரோடு மண்ணும் ஒட்டிக்கொண்டுதான் வரும் எனவேதான் பாரதி “வேரும் வேரடி மண்ணும்” என்று பேசினார். நமக்கு வேரடி மண் வேண்டாம் என்றால், தண்ணீரால் செடியின் வேரைக் கழுவத்தான் வேண்டும். மண்வாசனையோடு சில பதிவுகளைச் செய்யும் போது இதுபோன்ற சில அறக்கழிவுகளை நாம் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இத்தொடரில் எனது சேகரிப்பில் இருந்து அகர வரிசைப்படி, சொலவடைகளை மட்டும் பதிவு செய்கிறேன். அதில் சில சொலவடைகள் பதிவு செய்யப்படாமல் விடுபடலாம். இத்தொடரை வாசிக்கும் வாசகர்கள் விடுபட்ட சொலவடைகளை எனது மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பினால் அவைகளையும் பின் இணைப்பாகச் சேர்த்துக் கொள்கிறேன்.

இனி சொலவடைகளுக்குள் செல்வோம்.

1. அகல உழுவதைவிட, ஆழ உழு.

2. அகல் வட்டம் பகல் மழை (அகல் வட்டம்-இரவில் நிலவைச்சுற்றிக் காணப்படும் வட்டக் கோடு,   இதை கோட்டை கட்டியிருக்கு என்றும் சொல்வார்கள்)

3. அகழியிலே விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்.

4. அக்காள் பண்டம் அரிசி, தங்கச்சி பண்டம் தவிடா?

5. அகப்பட்டவனுக்கு அட்டமத்துல சனி(கெட்ட நேரம்). ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில்  வியாழன்

6. அகப்பை (சாப்பாட்டின் அளவு) குறைந்தால் கொழுப்பு குறையும். (ஆப்பை என்பது அகப்பைக்கு இணையான வழக்குச் சொல்).

7. அகம் (ஆணவம்) குறைந்தால், அஞ்சும் குறையும்! (ஐந்து-கோவம், அகம்பாவம், வன்பம், பகை, மூர்க்கம், ஐந்தும் என்பதன் வழக்குச் சொல் அஞ்சும்)

8. அகலப் பழகினால் நெகிழும் உறவு.

9. அகலாது அணுகாது தீக்காய வேண்டும்.

10. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.        

11. அக்கரையில் படர்ந்த பாகற்கொடிக்கு, இக்கரையில் பந்தலிடுவானேன்?

12. அக்கரைக்கு இக்கரை பச்சை.

13. அக்காள் (உயிரோடு) இருக்கிற வரைதான்-மச்சான் உறவு செல்லும்.(செல்லும்-செல்லுபடியாகும்)

14. அக்காளை பழித்த தங்கை அவிசாரி ஆனால் (அவிசாரி-விபச்சாரி)

15. அக்கு தொக்கு(சொந்த பந்தம்) இல்லாதவனுக்கு தூக்கம் ஏது?

16. அங்காடிக்காரியைச் சங்கீதம் பாடச் சொன்னால் வெங்காயம்... ம்... கரிவேப்பிலை..என்பாள்.

17. அங்கும் இருப்பான், இங்கும் இருப்பான், ஆக்கிய சோத்துக்குப் பங்கும் இருப்பான்- வெங்கப்பெயல்.

18. அங்கேண்டி மகளே புருசன் வீட்டிலே, கஞ்சிக்கு அழுகிறாய்? இங்கே வாயேண்டி காற்றாய் பறக்கலாம் என்றானாம் அப்பக்காரன்.

19. அசல் வீட்டுக்காரனுக்கு(பக்கத்து வீட்டுக்காரனுக்கு) ஏண்டுக்கிட்டு(பரிந்து பேசிக்கொண்டு) அப்பக்காரனை அடிக்கலாமா...?

20. அசைந்து தின்கும் யானை; அசையாமல் தின்கும் வீடு (வீடுகட்ட ஆகும் செலவு)

21. அச்சாணி இல்லாத தேர்; முச்சாணும் ஓடாது.(சாண்-கைவிரல்களை நீட்டி அளக்கும் ஒரு வித அளவு)

22. அஞ்சாவது (பிறக்கும்) பெண் கெஞ்சினாலும் கிடைக்காது.

23. அஞ்சாறு பெண்ணாய்ப் பிறந்தால், அரசனும் ஆண்டியாவான்.

24. அஞ்சிலே (ஐந்திலே) வளையாதது, ஐம்பதிலே வளையாது.

25. அஞ்சுகிறவனைக் (அச்சம் உடையவனை) கோழிக்குஞ்சும் விரட்டும்.

26. அஞ்சு காசுக்குக் குதிரையும் வேண்டும்; அது காற்றாய்ப் பறக்கவும் வேண்டும் என்றால் எப்படி?

27. அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை!

28. அஞ்சு பணமும் கொடுத்து கஞ்சித்தண்ணியும் குடிப்பானேன் (பணம்-ரூபாய்)

29. அஞ்சும் மூன்றும் உண்டென்றால், அறியாப் பெண்ணும் சமைத்திடுவாள்(ஐந்து-அடுப்பு, விறகு,நெருப்பு, பாத்திரம், அரிசி; மூன்று-உப்பு, காரம், புளி)

30. அஞ்சு வயதுப் பிள்ளைக்கு ஐம்பது வயசுப் பெண் கால் மடக்க வேண்டும்.(பிள்ளை ஓடியாடி விளையாடும் போது கீழே விழுந்து விடக் கூடாது என்பதால்)

31. அடக்கம் ஆயிரம் பொன் பெரும்!

32. அடி உதவுகிறது போல அண்ணன் தம்பி உதவமாட்டான்.

33. அடியாத மாடு பணியாது.

34. அடி என்று சொல்ல அப்பனும் இல்லை; பிடி என்று சொல்ல ஆயாளும்(தாயும்) இல்லை!

35. அடிச்சட்டி ஓட்டையாய் இருந்தாலும் கொழுக்கட்டை வெந்தால் சரிதான்.

36. அடிக்க அடிக்க பந்து அதிகமாய்த் துள்ளும்.

37. அடிக்கிற காத்து(காற்று) வெயிலுக்குப் பயப்படுமா?

38. அடிக்கிற கைதான் அணைக்கும்.

39. அடிக்கும் பிடிக்கும் சரி; ஆனைக்கும் பானைக்கும் சரி.

40. அடித்து வளர்க்கணும் பிள்ளையை; முறித்து வளர்க்கணும் முருங்கையை; திருக்கி வளர்க்கணும்  மீசையை!

41. அடிநாக்கிலே நஞ்சு, நுனி நாக்கிலே அமுதம்.

42. அடிப்பானேன், பிடிப்பானேன்? அடக்குகிற வழியாய் அடக்கப்பார்!

43. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

44. அடியற்றால் (இத்துப்போனால்) நுனி விழாது இருக்குமா?

45. அடிக்கு (தூர் பகுதிக்கு) உள்ளதுதான் நடுவுக்கும்; நடுவுக்கு உள்ளதுதான் நுனிக்கும்.

46. அடியும் பட்டு புளித்த கூழும் குடிக்கணுமா?

47. அடியே...ன்னு கூப்பிட பெண்டாட்டியே இல்லை. அவன் என்னடாவென்றால், பிள்ளை எத்தனை? என்கிறான்.

48. அடிவானம் கறுத்தால் அப்போதே மழை பெய்யும்.

49. அடுக்குகிற அருமை, உடைக்கிற நாய்க்குத் தெரியுமா?

50. அடுத்த வீட்டு கூரையில் பிடித்த தீ, உன் வீட்டுக்குத் தாவ எத்தனை நாழி(நாழிகை-நேரம்)  ஆகும்?

51. அடுத்தது காட்டும் பளிங்கு(கண்ணாடி).

52. அடுத்த வீட்டுக்காரி ஆம்பளப் புள்ளை பெத்தாள்னு பக்கத்து வீட்டுக்காரி அம்மிக்குழவியை எடுத்து தன் அடி வயிற்றில் குத்திக்கிட்டாளாம்!

53. அடுப்பு அனலில் (வெக்கையில்) வெண்ணையை வைத்த கதை போல.

54. அடுப்புக் கட்டிக்கும் அழகு வேண்டும்.

55. அடுத்த வீட்டுக்காரனுக்கு யோகம் வந்ததால் (பணம் வந்ததால்) அண்டை வீடு குதிரை லாயமாச்சு.

56. அடைமழை விட்டும் செடி மழை(செடியின் இலையில் இருந்து விழும் மழைத்துளிகள்) விடவில்லை.

57. அட்டமத்துச் சனி பிடித்து பிட்டத்து (உடுத்தியிருந்த) துணியையும் பிடுங்கிக் கொண்டது.

58. அட்டமத்துச் சனியை வட்டிக்கு வாங்காதே!

59. அட்டையை (பூச்சி இனத்தைச் சேர்ந்த புழு) பிடித்துக் கட்டிலில் போட்டால் அது அங்கும் கிடக்காது.

60. அணில் ஊணும், ஆமை நடையும் மெல்லத்தான்.

61. அணில் பிள்ளைக்கு நொங்கும் ஆண்டிச்சி (ஆண்டி என்பதன் பெண்பால்) பிள்ளைக்கு சோறும் எளிதில் கிடைத்து விடும்.

62. அணை உடைந்து சென்ற வெள்ளம், அழுதாலும் திரும்ப வராது!

63. அண்டத்திற்கு உள்ளது, பிண்டத்திற்கும் உண்டு.

64. அண்டத்தைக் கையில் வச்சுக்கிட்டு ஆட்டுகிற பிடாரிக்குச் சுண்டைக்காய் எம்மாத்திரம்?

65. அண்டர் (தலைவர்) எப்படியோ... தொண்டரும் அப்படியே!

66. அண்டை வீட்டுக் கடனும், பிட்டத்துச் சிரங்கும் ஆகவே ஆகாது!

67. அண்டை வீட்டுச் சண்டை, ஆஹா பேஷ்.. பேஷ்!

68. அண்ணனிடத்தில் ஆறுமாதம் வாழ்ந்தாலும், அண்ணியிடத்தில் அரை நாழிகை(நேரம்) வாழ முடியுமா?

69. அண்ணணுக்குத் தம்பி இல்லை என்று போகுமா?

70. அண்ணன் சாப்பிடாட்டா, மதினிக்கு லாபம்தான்.

71. அண்ணன் சம்பாதிக்கிறது, தம்பி அண்ணாக்கயித்துக்கு(அரைஞாண் கயிற்றுக்கு) காணாது.

72. அண்ணன் எப்ப சாவான்? திண்ணை எப்ப கிடைக்கும்?

73. அண்ணனுக்குத் தம்பிதான் ஜென்மப் பகையாளி.

74. அண்ணன்தான் கூடப் பிறந்தான், அண்ணியுமா கூடப் பிறந்தாள்?

75. அண்ணன் பெரியவன் என்று சித்தப்பனிடம் தீப்பெட்டி கேட்டானாம்!(பீடி பத்த வைக்க).

76. அண்ணன் மேல் உள்ள கோவத்தை, அண்ணன் வீட்டு நாயிடம் காட்டினானாம்.

77. அண்ணாவிப் பிள்ளைக்கு ஏட்டுக்குப் பஞ்சமா?.. அம்பட்டன் பிள்ளைக்கு மயித்துக்குப் பஞ்சமா?..

78. அதிக ஆசை: அதிக தரித்திரம்.

79. அதிகாரியும், தலையாரியும் கூட்டு சேர்ந்தால் விடியும் மட்டும் திருடலாம். (வேண்டிய மட்டும் திருடலாம்)

80. அதிகாரி வீட்டில் திருடி விட்டு, தலையாரி வீட்டில் ஒழியக்கூடாது.

81. அதிகாரி வீட்டுக் கோழி முட்டை, குடியானவன் வீட்டு அம்மிக்கல்லையும் உடைக்கும்!

82. அக்கிரமமான ஊரில், கொதிக்கிற மீனும் சிரிக்குமாம்!

83. அதிர எரு அடித்தால் உதிர(நெல்) விளையும்.

84. அதிர்ஷ்டம் இருந்தால் ஊரை ஆளலாம். இல்லை என்றால் கழுதை மேய்க்கலாம்.

85. அதிர்ஷ்டம் உள்ளவன் மண்ணைத் தொட்டாலும் பொன் ஆகும்.

86. அதிலே ஒண்ணும் குறைச்சல் இல்லை! ஆட்டடா மணியை என்றாராம் பூசாரி!

87. அததற்கு ஒரு கவலை, ஐயாவுக்கு எட்டுக் கவலை.

88. அதை விட்டாலும் வேறு கதியில்லை! அப்புறம் போனாலும் வேறு விதியில்லை!

89. அத்தனையும் சமைத்தாள், உப்பிட மறந்தாள்.

90. அத்திப் பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அங்கொரு சொத்தை, இங்கொரு சொள்ளை.

91. அத்தி பூத்தாற் போல் இருக்கிறது(அத்திமரம் அடிக்கடி பூக்காது, எப்போதாவது தான் பூக்கும்)

92. அத்திப் பூவை யார் அறிவார்? ஆந்தையின் குஞ்சை யார் பார்த்தார்?

93. அத்தி மரத்திலே தொத்திய கிளி போல..!

94. அத்து மீறிப் போனான், பித்துக்குளி ஆனான்.

95. அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று “முறை” சொல்லலாம்.

96. அத்தோடு நின்றது அலைச்சல், கொட்டோடு நின்றது குலைச்சல்(இரைச்சல்).

97. அந்தப் பருப்பு இங்கே வேகாது!

98. அந்தரத்தில் கல் எறியலாமா அந்தகன்(குருடன்)

99. அந்தலை, சிந்தலை(கால்மாடு, தலைமாடு) ஆகிப்போச்சி கோலம்.

100. அந்தியில் ஈசல் வெடித்தால், அடை மழை நிச்சயம் உண்டு.

101. அந்தி மழை அழுதாலும் விடாது.

102. அப்பச்சி குறும்பையை(விளையாத இளநீரை) உடைக்க, பிள்ளை தேங்காய்ச்சில்லு கேட்டு அழுதானாம்.

103. அப்பச்சி கோவணத்தைக் காக்கா தூக்கிக்கிட்டுப் போயிட்டு. பிள்ளை காஞ்சிபுரம் பட்டுக் கேட்டு அழுதாளாம்!

104. அப்பத்தை எப்படிச் சுடுகிறது? அதற்குள்ளே தித்திப்பை எப்படி அடைக்கிறது?

105. அப்பம் என்று சொன்னால் போதாதா..? பிட்டு வேறு காட்ட வேண்டுமா..?

106. அப்பனோடு போகிறவளுக்கு(உறவு வைத்துக் கொள்கிறவளுக்கு) அண்ணன் ஏது? தம்பி ஏது?

107. அப்பன் அருமையும், உப்பின் அருமையும் இல்லாத போது தெரியும்.

108. அப்பன் ஒட்டுக் கோவணத்துடன் படுத்திருக்கும் போது, பிள்ளை பக்கத்தில் படுத்துக் கொண்டு “`இழுத்து மூடப்பா”` என்றானாம்.

109. அப்பன் சோத்துக்கு அலைகிறான் இங்கே, பிள்ளை அன்னதானம் செய்கிறான் அங்கே!

110. அப்பியாச (நித்திய பயிற்சி) வித்தைக்கு அழிவில்லை ஒருநாளும்!

111. அமாவாசை இருட்டிலே பெருச்சாளிக்கு(பெரிய எலி) போன இடம் எல்லாம் வழிதான்.

112. அமாவாசை பருக்கை(சோறு) எப்போதும் கிடைக்குமா?

113. அம்பட்டன் குப்பையைக் கிண்டக் கிண்ட மயிர்-தான் வரும்!

114. அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.

115. அம்மா குதில்(குலுக்கை) போல, ஐயா கதிர் போல(உருவத்தில்).

116. அம்மியும் குழவியும் ஆடிமாதக் காற்றில் ஆகாயத்தில் பறக்கும் போது, எச்சிலை எம்மாத்திரம்?

117. அம்மையார் நூற்கிற நூல், பேரன் அண்ணாக் கொடிக்கே காணாது!

118. அய்யா, அய்யா..அம்மா குறைக் கேப்பையையும் திரிக்க வரச்சொன்னாள்(இந்தப் பழமொழிக்குப் பின்னால் ஒரு கதை உள்ளது).

119. அய்யாசாமிக்குக் கல்யாணமாம், அவரவர் வீட்டுல சாப்பாடாம்! கொட்டு முழக்கம் கோயிலிலாம், வெற்றிலை பாக்கு கடையிலாம், சுண்ணாம்பு சூளையிலாம்.

120. அரசனில்லாப் படை ஜெயிக்குமா..?

121. அரசனுக்கு என்ன ஒரு வார்த்தையில் சொல்லிவிடுவார், அடிமைக்கல்லவோ தலைச்சுமை(தண்டனை).

122. அரசனைப் பார்த்த கண்ணுக்குப் புருசனைப் பார்த்தா பிடிக்காது.

123. அரசனுடன் பழகுவதும் அரவுடன்(பாம்புடன்) பழகுவதும் ஒன்று!

124. அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல!

125. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்!

126. அரசன் இல்லாத நாடும், அச்சாணி இல்லாத தேரும் ஒன்று.

127. அரசன் எவ்வழி, குடிகள்(மக்கள்) அவ்வழி!

128. அரசன் கல்லின் மேல் கத்தரிக்காய் காய்க்கும் என்றான், கொத்தாயிரம், குலையாயிரமாய்க் காய்க்கும் என்றான் மந்திரி!

129. அரண்டவன் கண்ணுக்கு, இருண்டதெல்லாம் பேய்.

130. அரண்மனை காத்தவனுக்கும், அடுக்களையைக் காத்தவனுக்கும் கைமேல் பலன் கிடைக்கும்.

131. அரண்மனைக்கு ஆயிரம் செலவாகும், அதற்கு குடியானவன் என்ன செய்வான்?

132. அரத்தை அறுக்க அரமே வேண்டும்.

133. அரமும், அரமும் சேர்ந்தால் கிண்ணரம்.

134. அரவத்தைக் கண்டால் விடுமோ கீரி..?

135. அரிசி என்று அள்ளிப் பார்ப்பாரும் இல்லை, உமி என்று ஊதிப் பார்ப்பாரும் இல்லை!

136. அரிசி ஆழாக்கானாலும்(ஒரு பக்காவில் எட்டில் ஒரு பங்கு) அடுப்புக் கட்டி மூன்று வேணும்.

137. அரிசி உண்டானால் சோறும் உண்டு. அக்காள் உண்டானாள்(கருத்தரித்தால்) மச்சானும் உண்டு.

138. அரிசி கொண்டுக்கிட்டுப் போய் அக்கா வீட்டில் உறவா..?

139. அரிசி கொண்டு வா..நீ, உமி கொண்டு வருகிறேன் நான், ரெண்டையும் கலந்து ஊதி, ஊதித் தின்னலாம் நாம்.

140. அரிசி இல்லாத கூழுக்கு, உப்பில்லைன்னா என்ன..?

141. அரிசிக்குத் தக்கதான் அடுப்பு(அளவில்) புருசனுக்குத் தக்கதான் பொல்லாப்பு(சண்டை).

142. அரிசியும் கறியும் உண்டானால் ஆக்கித்திங்க அக்கா வீடு எதுக்கு..?

143. அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரனா நீ?

144. அரிதாரம் கொண்டு போகிற நாய்க்கு அங்கு இரண்டடி; இங்கு இரண்டடி.

145. அரிது அரிது ஐந்தெழுத்து மந்திரத்தை உணர்தல் அரிது. (ஐந்தெழுத்து மந்திரம் - நமச்சிவாய)

146. அரியது செய்து; எளியதற்கு ஏமாந்து திரிகிறான் (மேதைகளும் சாமான்யமானவர்களிடம் ஏமாந்து விடுவதுண்டு)

147. அரியும் சிவனும் ஒண்ணு, இதை அறியாதவன் வாயில மண்ணு. (சைவத்திற்கும், வைணவத்திற்கும் சண்டை நடந்த காலத்தில், இரண்டும் ஒன்றுதான் என்ற உண்மையை உணர்ந்த நாட்டுப் புறந்து மக்கள் உண்டாக்கிய பழமொழி இது)

148. அருகாகப்(அழகாக) பழுத்தாலும் விளாமரத்தில் வௌவால் சேராது. (வௌவால் நாவல் பழத்தையை விரும்பி உண்ணும். விளாம்பழத்தை வௌவால் வெறுத்து ஒதுக்கும்)

149. அருஞ்சுனை நீருண்டால் அப்போதே ரோகம். (நோய்குறை மாகும்).

150. அருண்டவன் (அரண்டவன்) கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்( உளவியல் சார்ந்த பழமொழி)

151. அருமை அறியாதவன் ஆண்டு என்ன...? மாண்டு என்ன...? (எல்லாம் ஒன்றுதான்)

152. அருமை அறியாதவனிடத்தில் போனால், நம் பெருமை குறைந்து போகும்.

153. அருமை அற்ற வீட்டில் எருமையும் (மாடும்) குடியிராது.

154. அருமை மகன் தலை போனாலும் போகட்டும் ஆதிகாலத்து உரல் போய்விடக்கூடாது (இந்தப் பழமொழிக்குப் பின்னால் ஒரு நாட்டுப்புறக்கதை உள்ளது)

155. அரும்பு(பூவின் இதழ்) கோணினால் என்ன...? அதன் மணம் குறையவா செய்யும்?

156. அரைக்காசுக்கு அழிந்த கற்பு; ஆயிரம் பொன் கொடுத்தாலும் திரும்ப வராது.

157. அரைக்காசுக்குத்தான் குதிரை வாங்க வேண்டும், அது காற்றாய்ப் பறக்கவும் வேண்டும் என்றால் எப்படி...?

158. அரைக்கிறவன் (மருந்தை அரைக்கிறவன் வைத்தியன்) ஒன்றை (நோயாளி) வேறொன்றை நினைத்துக் குடிக்கிறான்.

159. அரைக்க, அரைக்க சந்தனத்தின் மணம் குறையாது.

160. அரைக்குடம் ததும்பும்; நிறை குடம் ததும்பாது.

161. அரைச்சீலை (இடுப்பில் சேலை) கட்ட, கைக்கு உபச்சாரமா? (அவனவன் இடுப்பில் அவனவன் துணி கட்டவும் சம்பளம் கொடுக்கவா முடியும்?)

162. அரைச்சொல் (அரை குறையான படிப்பு) கொண்டு அம்பலம் (சபை) ஏறலாமா?

163. அரைச் சொல் கொண்டு அம்பலம் ஏறினால் அரைச் சொல்லும் முழுச் சொல்லாகுமோ..?

164. அரைத்த பயிறு(விதை) முறைக்காது.

165. அரைத் துட்டுலே கல்யாணமாம்; அதுலே கொஞ்சம் வான வேடிக்கையாம். (முழுக்கஞ் சத்தத்தைப் பற்றி இப்பழமொழி பேசுகிறது. ‘துட்டு’ என்ற நாணயம் புழக்கத்தில் இருந்த காலகட்டத்தில் உருவான பழமொழி இது)

166. அரைப்பணம் கொடுக்க (வரிகொடுக்க) சோம்பரைப் பட்டு; ஐம்பது பொன் கொடுத்து வழக்கை முடித்த கதையாக இருக்கிறதே!

167. அரைப்பணம் கொடுத்து அழச்சொல்லி; ஒரு பணம் கொடுத்து ஓயச் சொன்ன கதையாக இருக்கிறதே! (‘பணம்’ என்ற நாணயம் புழக்கத்தில் உள்ள காலத்தில் உருவான பழமொழி இது!)

168. அரைப்பணச் சேவகம் ஆனாலும், அரண்மனைச் சேவகம் போல் ஆகுமா? (வேலைக்குக் கிடைக்கிற ஊதியம் குறைவானாலும், வேலை செய்கிற இடம் உயர்ந்ததாக இருந்தால், அதைக் காட்டி வேறு விதத்தில் சம்பாதித்துக் கொள்ளலாம்.)

169. அரையிலே (இடுப்பிலே) புண்ணும்; அண்டையிலே (பக்கத்து வீட்டிலே) கடனும் ஆகவே ஆகாது!

170. அலுத்துச் சடச்சி (களைத்து) அக்காள் வீட்டிற்குப் போனாளாம் (சட வார ஓய்வெடுக்க) அக்காள் பிடித்து மச்சான் மேலே தள்ளினாளாம் (புலியூருக்குப் பயந்து எலியூருக்குப் போனால், எலியூரும் புலியூர் ஆன கதைதான்)

171. அலை (கடல் அலை) எப்ப ஓய? கால் எப்ப கழுவ...? (கால் கழுவி வந்தான் என்பது மலம் கழுவி வந்தான் என்பதின் இடக் கரடக்கலாக வந்தது போல். இப்பழமொழியில் 'கால்' என்பது மலத்துவாரத்தைக் குறிக்க வந்துள்ளது).

172. அலைவாய்த் துரும்பு போல் அலையாதே!

173. அல்லல் (துரும்பு) அற்ற படுக்கை(நிம்மதியான தூக்கம்) அழகிலும் அழகு.

174. அல்லல் பட்டு (ஏழைகள் துன்பப்பட்டு) அழுகிற கண்ணீர் செல்வத்தைக் (கொடுமைக் காரர்களின் பிழைத்தை) குறைக்கும்!(இதே கருத்தில் திருக்குறள் ஒன்றும் உள்ளது.

175. அவசரக் கோலத்திலே அள்ளித் தெளித்தது போல

176. அவசரத்தில் (ஆத்திரத்தில்) அண்டாவுக்குள்ளும் கை நுழையாது. (மனம் சார்ந்த பழமொழி இது)

177. அவிசாரித்தனமே (தேவடியாத்தனமே) பண்ணினாலும் அதிர்ஸ்டம் வேண்டும்; திருடப் போனாலும் திசை (நல்ல திசை- யோகம்) வேண்டும்.

178. 'அவிசாரி' என்று ஆனைமேலேயும் ஏறி ஊர்வலம் வரலாம்; திருடி என்று தெருவில் வர முடியாது (திருட்டுத்தொழிலின் கீழ்மையைச் சுட்டுகிறது இப்பழமொழி)

179. அவிசாரியாக ஆசையும் இருக்கும் (ஆழ்மனதில்) அடிப்பானோ (புருசன் உதைப்பானே) என்று பயமாகவும் இருக்கிறது. (அடிக்குப் பயந்துதான் பல பெண்கள் பத்தினியாக வாழ்கிறார்கள் என்று சொல்கிறது இப்பழமொழி)

180. அவிசாரிக்கு (விபச்சாரிக்கு) ஆணை இல்லை! கட்டளை இட்டுத் தடுத்தாலும் கேட்க மாட்டாள்) திருடிக்குத் தெய்வம் இல்லை. (கடவுளுக்கும் திருடி பயப்படமாட்டாள்)

182. அவப்பொழுதினும் (வீணாகப் பொழுதைப் போக்குவதினும்) தவப்பொழுது நல்லது.

183. அவரை விதைத்ததில் துவரை முளைக்குமா..?

184. அவலட்சணமான குதிரைக்கு ‘சுழி சுத்தம்’ (மாடுகளுக்கு சுழிசுத்தம் பார்ப்பது போல, குதிரைகளையும் சுழிசுத்தம் பார்த்தே வாங்குவார்கள்) பார்க்கனுமா..?)

185. அவலை நினைச்சி உரலை இடிச்ச கதையா.. இருக்கே..! (தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது).

186. அவலை (தேன்பாகில்) முக்கித்தின்னு; எள்ளை (எள் உருண்டையை) நக்கித்தின்னு. (எதை எதை எப்படித் திங்க வேண்டுமோ, அதை, அதை அப்படித் திங்க வேண்டும். அப்போதுதான் சுவைகிட்டும்)

187. அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள் (இந்தப் பழமொழிக்குப் பின்னால் ஒரு நாட்டுப்புறக் கதை உள்ளது).

188. அவள் எமனைப் பலகாரம் பின்னி; இந்திரனை ‘போண்டா’ (ஒரு பலகாரத்தின் பெயர்) போட்டு விடுவாள் (சாமர்த்தியக்காரி).

189. அவள் பேர் (பெயர்) தங்கமாம்; அவள் காதில் போட்டிருக்கிறதோ பித்தளைக் கம்மலாம்.

190. அவள் பெயர் கூந்தலழகி; அவள்தலையோ மொட்டை.

191. அவனின்றி (இறைவனின்றி) அணுவும் அசையாது.

192. அவனிடம் உன் ‘பருப்பு’ (ஏமாத்து வேலை) வேகாது (நடக்காது).

193. அவன் ஆகாயத்தை வடுப்படாமல் (கோரைபடாமல்) கடிப்பேன் என்கிறான்.

194. அவன் என்ன என் தலைக்கு அறைத்த பத்தா? (மருந்துக் கலவையா.?).

195. அவன் காலால் இட்ட வேலையை, அவள் நிலையால் செய்கிறாள்.

196. அவன் கிடக்கிறான் குடிகாரப்பெயல்; எனக்கு ரெண்டு மொந்தை(கள்) ஊற்று (அங்கதச் சுவையுள்ள பழமொழி இது)

197. அவன் கை விரலைக் கொண்டே, அவன் கண்ணைக் குத்துகிற வேலை.

198. அவன் ‘சுயம்’ (நடிப்பு) வெளுத்துவிட்டது(தெரிந்துவிட்டது).

199. அவன் வைத்ததே சட்டம்; இட்டதே கட்டளை என்று வாழ்கிறான்.

200. அவன் தன்னால் கெட்டால், அண்ணாவி என்ன செய்வார்!
201. அவன் தொட்டுக் கொடுத்தான்; நான் இட்டுக் கொடுத்தேன்.

202. அவன் நா (நாக்கு) அசைந்தால், (பேசினால்) நாடு அசையும்.

203. அவன் பேசுகிறது தில்லு முல்லு; போகிறது திருவாதிரை, திருவோணம்.

204. அவன் பேச்சைத் தண்ணியில்தான் எழுதணும் (நம்பக் கூடாது).
 
205. அழகு (அழகி) இருந்து அழும் (அழுவாள்); அதிர்ஷ்டம் இருந்து உண்ணும்.

206. அழகு (அவளுக்கு) ஒழுகுகிறது; ஓட்டைப் பானையைக் கொண்டுவா. பிடித்து வைக்க. (அங்கதச் சுவை உடைய பழமொழி இது)

207. அழகுப் பெண்ணே காத்தாயி, உன்னை அழைக்கிறாண்டி கூத்தாடி. (அங்கதச் சுவை)
 
208. அழச் சொல்வார் தமர் (உறவினர்) சிரிக்கச் சொல்வார் பிறர்.

209. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் (திருக்குறளின் கருத்தில் அமைந்த பழமொழி இது. ஏழைகளை அழவைத்துச் சேர்த்த பணம் எல்லாம்; சேர்தவனை அழவைத்து விட்டுச் சென்று விடும்)

210. அழித்துக் கழித்துப் போட்டு; ‘வழித்து நக்கி' என்று பெயரிட்டானாம். (அங்கதச்சுவை)

211. அழிந்த கொல்லையிலே, குதிரை மேய்ந்தால் என்ன...? கழுதை மேய்ந்தால் என்ன..? (எந்தப் பயனும் இல்லை என்பது பொருள்)

212. அழிந்தவள் யாரோடு போனால் என்ன..?

213. அழி வழக்குச் (பொய் வழக்கு) சொன்னாலும், பழிபொறுப்பான் மன்னவன்.

214. அழுகிற ஆணையும்; சிரிக்கிற பெண்ணையும் நம்பாதே( எப்போதும் அழுகிற ஆண்; சிரிக்கிற பெண்)

215. அழுகிற பிள்ளையிடம் வாழைப்பழத்தைக் காட்டி ஏமாற்றுவதைப் போல. . . (நகைச்சுவை)

216. அழுகிற வீட்டில் இருந்தாலும், ஒழுகுகிற வீட்டில் குடியிருக்க முடியாது.

217. அழுகை ஆங்காரத்தின் (கோவத்தின்) மேல்; சிரிப்பு கெலிப்பின்(மகிழ்வின்) மேல்.

218. அழுக்கை அழுக்கு கொல்லும் (பழங்காலத்தில் அழுக்கான துணியை வெளுக்க வண்ணான் அழுக்குத் துணியுடன் உவர் மண்ணைச் சேர்த்து அத்துணியை மேலும் அழுக்காக்கிபின் அடித்துத்துவைப்பான். இப்போது துணியில் ஏறிய உவர்மண் என்ற அழுக்குடன் துணியில் ஏற்கனவே இருந்த அழுக்கும் சேர்ந்து ஆற்று நீரோடு போய்விடும். துணி வெள்ளையாய் வெளுத்துவிடும். இங்கு அழுக்கை அழுக்கே கொன்றுவிடுகிறது)

219. அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் எப்போதும் இருக்காதே! (அவலச்சுவை)

220. அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்!
201. அவன் தொட்டுக் கொடுத்தான்; நான் இட்டுக் கொடுத்தேன்.

202. அவன் நா (நாக்கு) அசைந்தால், (பேசினால்) நாடு அசையும்.

203. அவன் பேசுகிறது தில்லு முல்லு; போகிறது திருவாதிரை, திருவோணம்.

204. அவன் பேச்சைத் தண்ணியில்தான் எழுதணும் (நம்பக் கூடாது).
 
205. அழகு (அழகி) இருந்து அழும் (அழுவாள்); அதிர்ஷ்டம் இருந்து உண்ணும்.

206. அழகு (அவளுக்கு) ஒழுகுகிறது; ஓட்டைப் பானையைக் கொண்டுவா. பிடித்து வைக்க. (அங்கதச் சுவை உடைய பழமொழி இது)

207. அழகுப் பெண்ணே காத்தாயி, உன்னை அழைக்கிறாண்டி கூத்தாடி. (அங்கதச் சுவை)
 
208. அழச் சொல்வார் தமர் (உறவினர்) சிரிக்கச் சொல்வார் பிறர்.

209. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் (திருக்குறளின் கருத்தில் அமைந்த பழமொழி இது. ஏழைகளை அழவைத்துச் சேர்த்த பணம் எல்லாம்; சேர்தவனை அழவைத்து விட்டுச் சென்று விடும்)

210. அழித்துக் கழித்துப் போட்டு; ‘வழித்து நக்கி' என்று பெயரிட்டானாம். (அங்கதச்சுவை)

211. அழிந்த கொல்லையிலே, குதிரை மேய்ந்தால் என்ன...? கழுதை மேய்ந்தால் என்ன..? (எந்தப் பயனும் இல்லை என்பது பொருள்)

212. அழிந்தவள் யாரோடு போனால் என்ன..?

213. அழி வழக்குச் (பொய் வழக்கு) சொன்னாலும், பழிபொறுப்பான் மன்னவன்.

214. அழுகிற ஆணையும்; சிரிக்கிற பெண்ணையும் நம்பாதே( எப்போதும் அழுகிற ஆண்; சிரிக்கிற பெண்)

215. அழுகிற பிள்ளையிடம் வாழைப்பழத்தைக் காட்டி ஏமாற்றுவதைப் போல. . . (நகைச்சுவை)

216. அழுகிற வீட்டில் இருந்தாலும், ஒழுகுகிற வீட்டில் குடியிருக்க முடியாது.

217. அழுகை ஆங்காரத்தின் (கோவத்தின்) மேல்; சிரிப்பு கெலிப்பின்(மகிழ்வின்) மேல்.

218. அழுக்கை அழுக்கு கொல்லும் (பழங்காலத்தில் அழுக்கான துணியை வெளுக்க வண்ணான் அழுக்குத் துணியுடன் உவர் மண்ணைச் சேர்த்து அத்துணியை மேலும் அழுக்காக்கிபின் அடித்துத்துவைப்பான். இப்போது துணியில் ஏறிய உவர்மண் என்ற அழுக்குடன் துணியில் ஏற்கனவே இருந்த அழுக்கும் சேர்ந்து ஆற்று நீரோடு போய்விடும். துணி வெள்ளையாய் வெளுத்துவிடும். இங்கு அழுக்கை அழுக்கே கொன்றுவிடுகிறது)

219. அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் எப்போதும் இருக்காதே! (அவலச்சுவை)

220. அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்!

221)அழுதபிள்ளை சிரிச்சிதாம்; கழுதைப் பாலைப் குடிச்சிச்சாம் (இது ஒரு நகைச்சுவையான வழக்குத் தொடர்).

222) அழுதழுது பெற்றாலும், பிள்ளையை அவள்தான் பெற வேண்டும்.

223) அழுவார் (ஒப்பாரி வைத்து அழுவார்) அற்ற பிணமும்; ஆற்றுவார் (தீயை அணைப்பார்) அற்ற சுடலையும் (சுடுகாடும்) வீண்.

224) அழையா வீட்டிற்குள் நுழைய மாட்டார் சம்பந்தி (பெண்ணைக் கட்டிக் கொடுத்தவர்).

225) அழகாரி பட்டணத்திலும் (இந்திரலோகத்தின் தலைநகரிலும்) விறகுத் தலையன் (அசிங்கமான தோற்றம் கொண்டவன்) உண்டு.

226) அளக்கிற நாழி அகவிலையை (விலைவாசி உயர்வை) அறியுமா...? (நாழி என்ற முகத்தல் அளவை புழக்கத்தில் இருந்த கால கட்டத்தில் உருவான பழமொழி இது).

227)அளந்த நாழி கொண்டு அளப்பான் (நாம் செய்த வினைகள் திரும்பவரும் - விதைத்தது தான் விளையும் என்பது போன்ற பொருள் உடைய பழமொழி).

228)அளந்தால் ஒரு சாணுக்கில்லை (ஜான்-உயரம்) அரிந்தால் ஒரு சட்டிக்கு இல்லை(அளவு) அது பண்ணுகிற சேட்டையோ தாங்க முடியவில்லை (சேட்டை செய்கிற பூனை முதலிய வளர்ப்பு மிருகங்களைப் பார்த்து இப்படிச் சொல்வார்கள்).

229) அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்.

230) அள்ளாது குறையாது; சொல்லாது பரவாது (வார்த்தை- வதந்தி).

231) அள்ளிக் குடிக்கத் தண்ணி இல்லை; அவள் பேர் (பெயர்) கங்கா தேவி.

232) அள்ளிக் கொடுத்தால் ‘சும்மா’(ஓசி), அளந்து கொடுத்தால் ‘கடன்’.

233) அள்ளிக் கொண்டு போகும் போதும், நுள்ளிக் கொண்டு போகிறான்.

234) அள்ளுகிறவன் பக்கத்தில் இருந்தாலும் பரவாயில்லை கிள்ளுகிறவன் பக்கத்தில் இருக்காதே!

235) அறக்கப் பறக்கப்(வேக வேகமாகப்) பாடுபட்டாலும்; படுக்கப் பாய் இல்லை!

236) அறக்காத்தான் பெண்டிழந்தான்; அலுகாத வழி (தூரம்) சுமந்து அழுதான்( காதவழி என்ற நீட்டல் அளவை வழக்கில் இருந்த காலத்தில் இந்தப் பழமொழி தோன்றியிருக்க வேண்டும்; இந்தப் பழமொழியை மையமாகக் கொண்டு ஒரு பாலியல் நாட்டார் கதை உள்ளது).

237) அறக் குழைத்தாலும்  குழைப்பாள் (சோற்றை) அரிசியாய் இறக்கினாலும் இறக்குவாள்(அது மனைவியின் அப்போதைய மனநிலையைப்  பொறுத்தது).

238) அறச் செட்டு(சட்டத் திட்டம்) முழு நஷ்டம்( அளவுக்கு அதிகமான சிக்கனத்தாலும் நஷ்டமே வரும்).

239)அறத்தால் வருவதே இன்பம் (திருக்குறளின் கருத்தைச் சொல்லும் பழமொழி. இந்தப்பழமொழியில் இருந்து திருக்குறள் படைக்கப்பட்டதா, இல்லை. திருக்குறளை மையமாகக் கொண்டு இந்தப் பழமொழியைப் படைத்தார்களா.  . என்பதை ஆராய வேண்டும்).

240) அற நனைந்தவனுக்கு (முழுவதும் நனைந்தவனுக்கு) கூதல் (வாடை- விரையல்) ஏது? (முழுக்க நனைந்தவனுக்கு முக்காடு எதுக்கு? என்ற பழமொழியும் இதே கருத்தைத்தான் விளக்குகிறது).

241) அறப்படித்த (சேட்டை செய்யும்) பூனை. காடிப்பானையில் தலையை விடும். (வழுவி உள்ளே விழுந்து விடும்.)

242) அறப்படித்த மூஞ்சுறு (எலியில் இது ஒரு வகை) கழனிப்பானையில் (எச்சித்தண்ணீர் உள்ளபானையில்) விழுந்ததைப் போல் (கழனிப்பானையில் விழுந்த மூஞ்சுறு வெளியே வர முடியாமல் பானைக்குள்ளேயே கிடந்து மாண்டுவிடும்)

243) அறப்படித்தவன் (சட்டம் பேசுகிறவன்) அங்காடிக் (கடைவீதிக்குப்) போனால் விற்கவு ம் மாட்டான்  வாங்கவும் மாட்டான் (வியாபாரத்திற்கு நெளிவு சுழவு வேண்டும்)

244) அறம் பொருள் இன்பம் - அனைவருக்கும் கிடைக்காது (ஏதாவது குறைந்தே கிடைக்கும்)

245) அறவடிக்கும் ‘முன் சோறு’ (பானையின் வாய்வளையத்தில் இருக்கும் சோறு) காடிப்பானை (கூழப்பானை)யில் விழுந்தாற் போல.

246) அறவும் (மிகவும்) கொடுங்கோல் செய்யும் அரசன் கீழ குடியிருப்பதைவிட, குறவன் (நாடோடி) கீழ குடியிருப்பது நல்லது.

247) அறிஞர்க்கு அழகு; அகத்துணர்ந்து (மனதை உணர்ந்து) கொள்வது.

248) அறிந்த (பழக்கமான) ஆண்டை (பண்ணையார்) என்று கிட்டப் போய் கும்பிடப்போனேன். ஆண்டையோ, உன் அப்பன் ஐந்து பணம் கடன் தர வேண்டும், எடுடா பணத்தை என்றான். (நாடகப் பாங்கான காட்சி வடிவான பழமொழி)

249) அறிந்தவன் (முன்பே பழக்கமானவன்) என்று கும்பிடப் போனால், அடிமை வழக்கிட்ட கதையாக இருக்கிறதே!)

250) அறிந்தும் கெட்டேன்; அறியாமலும் கெட்டேன். கடைசியில் சொறிந்த இடம் புண் ஆயிற்று. (விபச்சாரி ஒருத்தி கூறிய பழமொழ)

251) அறியாமல் தாடியை வளர்த்து, அம்பட்டன் (நாசுவின்) கையில் கொடுக்கவா..?

252) அறிவுடன் ஞானமும் வேண்டும்; அன்புடன் ஒழுக்கமும் வேண்டும் (அறிவு என்பது வேறு - ஞானம் என்பது வேறு)

253) அறிவுடையினரை அடுத்தால் (அண்டினால்) போதும்.

254) அறிவு உடையாரை, அரசனும் விரும்புவான்.

255) அறிவை உரைக்கும் (சொல்லும்) வாய் (உதடு) அன்பை உரைக்கும் நா(நாக்கு)

256) அறிவேன், அறிவேன், ஆலிலை புளிய இலை போலிக்கும் என்றானாம் (அங்கதச்சுவை)

257) அறுகம்புல்லும் ஆபத்துக்கு உதவும்.

258) அறுக்க ஊறும். பூம்பாளை (தென்னம்பிள்ளை - கள்ளைச் சுரக்கும்) அணுக ஊறும் சிற்றின்பம்.

259) அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுற்றி ஐம்பத்தெட்டு அருவாளைக் கட்டி இருக்கிறான் (அங்கதச் சுவையுடைய பழமொழி இது)

260) அறுதலி மகனுக்கு வாக்கப்பட்டு (வாழ்க்கைப்பட்டு) விருதாவிலே தாலி அறுந்தேன். (வீணாக விதவை ஆனேன்)

261) அறுத்தவள் ( தாலியறுத்தவள்- விதவை) ஆம்பளப் புள்ளை பெற்ற கதையா இருக்கே!

262) அறுத்த விரலுக்கு (மருந்தாகத் தடவ) சுண்ணாம்பு கொடுக்க மாட்டாளே! (அங்கதச் சுவை)

263) அறுத்துக் கொண்டதாம் (காலில்கட்டி இருந்த தளையை அறுத்து கொண்டதாம்) கழுதை; எடுத்ததாம் ஓட்டம். (அறுத்து என்பதற்குப் பதில் ‘அத்து’ என்ற வட்டார வழக்குச் சொல்லுடனும் இப்பழமொழி வரும்)

264) அறுபத்தினாலடி கம்பத்தில் ஏறி வித்தை காட்டினாலும் அடியில் இறங்கித்தான் (தரையில் இறங்கித்தான்) ‘காசு’ வாங்க வேண்டும்.

265) அறுப்புக் காலத்திலே (அறுவடைநாளிலே) எலிக்கும் அஞ்சாறு வப்பாட்டிகளாம் (நகைச்சுவை)

266) அரையிலே ஆடிய பின்தான் ஒத்திகை பார்த்த பின்தான்; அம்பலத்தில் ஆட வேண்டும்.

267) அற்ப ஆசை (பொன்னாசை முதலியன) கோடித்தவத்தைக் கெடுத்து விடும்.

268) அற்பக் கோபத்தினால் அறுந்த மூக்கை, ஆயிரம் சந்தோஷத்தாலும் ஒட்ட வைக்க முடியாது.

269) அற்பனுக்கு பவுசு (வாழவு) வந்தால், அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்.

270) அற்பின் கையில் ஆயிரம் பொன் வாங்குவதை விட, நற்புத்திரன் (நல்லவன்) கைத்தவிடு நன்று.

271) அற்பன் கையில் ஆயிரம் பொன் கிடைத்தால் வைக்கிட இடம் அறியான்.

272) அற்றது ‘பற்று’ எனில் உற்றது வீடு.( ஆசையை விட்டவன் சொர்க்கம் புகுவான்)

273) அன்பற்ற (வேண்டாத) மாமியார்க்கு கால்பட்டாலும் குற்றம்; கை பட்டாலும் குற்றம்.

274) அன்பற்ற மாமியாளைக் கும்பிட்டாலும் குற்றம் சொல்வாள்.( மாமியார்- மருமகள்- உளவியல் இது)

275) அன்பான சிநேகிதனை ஆபத்தில் அறியலாம். (ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை என்ற பழமொழியுடன் ஒப்புமை உடைய பழமொழி இது).

276) அன்புள்ள வாழ்வு; அலையற்ற நதி.

277) அன்பே பிரதானம்; அதுவே வெகுமானம் (பரிசு).

278) அன்று (தாத்தாகாலத்தில் இருந்ததாகச் சொல்லும்) ஆயிரம் பொன்னிலும், இன்று நின்ற (தற்போது கையிலிருக்கும்) ஒரு காசு பெரியது.

279) அன்றில்லை, இன்றில்லை அழுகல் பலாக்காய், கல்யாண வாசலிலே கலிந்துண்ண வந்தாயோ...? (திடீர் நட்பைக் கேலி செய்யும் அங்கதச்சுவையுடைய பழமொழி).

280) அன்று இருந்திருக்கலாம் (கெட்ட பழக்கம்) நின்றிருக்கல் ஆகாது!(என்றும் அது நீடிக்கலாகாது).

281. அன்று (ஆண்டவன்- இறைவன்) எழுதிய எழுத்தை (தலை எழுத்தை) யாராலும் அழித்தெழுத முடியாது.

282. அன்று கண்டதை அடுப்பிலே போட்டு; ஆக்கின பானையைத் தோளிலே போட்டுக் கொண்டு திரிகிறதைப் போல . . .(நகைச்சுவை)

283. அன்று கண்ட மேனிக்கு(உடல் அழகு) அப்படியே இருக்கிறாள், அம்சவல்லி. (பெருமிதச்சுவை)

284. அன்று (முகந்து) குடிக்கத் தண்ணீர் இல்லை; ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம்.

285. அன்று தின்ற ஊண் (சாப்பாடு) ஆறுமாதப் பசியைத் தாங்குமா..?

286. அன்று பொத்தும் துணியில் கிழிசலும் இல்லை; இன்று தையலும் இல்லை.

287. அன்றைக்கு (நாளைக்கு) கிடைக்க இருக்கிற ஆயிரம் பொற்காசை விட, இன்றைக்குக் கிடைக்கிற அரைக்காசு (நாணயம்) பெரியது.

288. அன்னதானத்திற்கு இணையாக என்ன தானமிருக்கிறது உலகில். . ?

289. அன்ன நடை (அலங்கார நடை) நடக்கப் பழகப் போய் காக்காய் (காகம்) தன்நடையும் மறந்த கதையாய் இருக்கிறதே!(இப்படி மொழியில் அங்கதச் சுவை உள்ளது)

290. அன்னப்பயிலுக்கு (சோறு வடித்த தண்ணீர்) சிங்கி அடித்தவன் (கிடைக்காமல் அலைந்தவன்) ஆவின் (பசுவின்) பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்.

291. அன்னம் (சோறு) இட்ட வீட்டில்; கன்னம் (கன்னக்கோல்) வைக்கலாமா? (திருடலாமா..)

292. அன்னம் ஒடுங்கினால்; அஞ்சும் ஒடுங்கும். (ஐந்து புலன்களும் - மெய்- வாய்-கண்-மூக்கு- செவி)

293. அன்னம் இறங்குவது (தொண்டையை விட்டுக் கீழே உணவுக்குழாய்க்குச் சோறு இறங்கியது) அபான வாயுவால் (குதத்தில் இருந்து காற்று (குசு) வெளியேறுவதால்தான்)

294. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். (கண்கண்ட தெய்வம்) - முதுமொழி சார் பழமொழி)



4 comments:

POSTAL PHOENIX said...

நல்ல முயற்சி நண்பரே உங்கள் உழைப்புக்கு வாழ்த்துகள்சூப்பர் ! வித்யாசமான முயற்சி நன்றிகள் நண்பரே.நன்றிகள் நண்பரே, நட்புடன்,இராஜா மயிலாடுதுறை

rajendran said...

நல்ல முயற்சிக்கு பாராட்டுகள். இதுபோல் 1) கோவை,2)சென்னை, தென் ஆற்காடு 3)மதுரை, இராமநாதபுரம்,4)தஞ்சை பகுதி சொலவடகளை தொகுத்தால் பல அரிய சொற்கள் கிடைக்கலாம். பழமொழி போல் மட்டுமல்லாது தனிச் சொல்களையும் தொகுக்க வேண்டும்.
வாழ்க! வளர்க

Unknown said...

அருமை !அக்கால வழக்கு சொற்களுக்கு அடைப்பில் விளக்கம் தந்நது மிகவும் அருமை !
ஏண்டுகிட்டு - கெக்கலிப்பு- அன்னப்பயில் - நாழி - ஆண்டிச்சி - அண்டர் - குலைச்சல் - கால்மாடு தலைமாடு - அலுத்து சடைச்சி - குலுக்கை - சோம்பரை - அவுசாரி போன்ற சொல்லாடல் என்னை என் கிராமத்திற்கு அதுவும் நாற்பதாண்டு காலத்திற்கு முந்தைய கிராமத்திற்கு என் கரம் கோர்த்து அழைத்துச் சென்றது.
அது மட்டுமா? வெற்றிலை பாக்கு போட்டபடி சொலவடைகளை அள்ளி வீசும் அன்றையபாட்டிமார்கள் என் கண் முன் பாம்பட காதாட குறுநகை செய்யும் அழகை கண்முன் நிழலாடச் செய்தது!

நன்றி ! மிக்க நன்றி !@!

Anonymous said...

தமிழ் நெல் காக்க தரணியில் நீங்கள் தான் வேலி.