கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, July 22, 2013

தாத்தா சொல்லும் கதைகள் 2

 கண்ணாடி தாத்தா தெருவில் நடந்து வருவதைப் பார்த்ததும் குழந்தைகள் உற்சாகமானார்கள். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளிக்கு விடுமுறை. அது மின்வெட்டு நேரம் என்பதால் குழந்தைகள் தொலைக்காட்சியில் அவர்களுக்கே உரிய அலைவரிசையைப் பார்க்க முடியவில்லை. வீடியோ கேம் விளையாடவும் வழியில்லை. கண்ணாடி தாத்தாவிடம் கதை கேட்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு அவரைப் பார்த்ததும் உற்சாகம் பிறந்தது. கண்ணாடி தாத்தாவுக்கு பஞ்சுப்பெட்டி போன்று தலைமுடி நரைத்துவிட்டது. அதிலேயும் தாத்தாவுக்கு ஏறுநெற்றி என்பதால் முன் நெற்றி வழுக்கையாகி இருந்தது. நெற்றியில் குங்குமமும் திருநீறும் துலங்க, தன் கண்ணாடியைக் கழற்றி தன் வேட்டியில் துடைத்து மீண்டும் மாட்டினார் கண்ணாடி தாத்தா. குழந்தைகளைப் பார்த்து நளினமாகக் கையசைத்தார். அவர்களும் தாத்தாவின் முன்னால் புல்வெளியில் வரிசையாக அமர, ஒருமுறை செருமி தன் குரலை சரிசெய்துகொண்டு கதை சொல்ல ஆரம்பித்தார் கண்ணாடி தாத்தா.

ஒரு ஊர்ல ஒரு அண்ணனும் தம்பியும் இருந்தாங்க. அவங்களுக்கு அந்த ஊர்ல சொந்தமா ஒரு ஏக்கர் நன்செய் நிலமும் ஒரு ஏக்கர் புன்செய் நிலமும் இருந்தது. நிலங்கள் எல்லாம் அவர்களின் தந்தையாரின் பராமரிப்பில் இருந்தது. ஒருநாள் தந்தையார் இறந்துவிட்டார். அவர் இறந்த பிறகு இருக்கிற சொத்தையும் வீட்டையும் அண்ணனும் தம்பியும் ஆளுக்குப் பாதியாக பங்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள்.
அண்ணன், மகா முரடன். தந்திரசாலி, பேராசை பிடித்தவன். உடல் பலமும் அதிகமுள்ளவன். அவனை எதிர்த்து யாரும் எதையும் பேசமுடியாது. ஏறுக்கு மாறு பேசுவான். ஆளும் ஆறடி உயரம் இருந்தான். உடம்பும் அதற்கேற்ற தன்மையுடன் இருந்தது. தம்பியோ, பாவம்... பைத்தியக்காரன் போல திரிவான். தம்பிக்கு மெலிந்த உடல்வாகு, அதற்கேற்ற உயரம்தான் இருந்தான். யாரிடமும் அதிகம் பேசமாட்டான். எல்லோரிடமும் அன்பு செலுத்துவான். அடுத்தவர்கள் பணத்துக்கு ஆசைப்பட மாட்டான். நேர்மையான சுபாவம் உள்ளவன்.

அப்பா இறந்த பிறகு தம்பிக்காரன் அண்ணனிடம் சென்று, ��அண்ணா, நம் தந்தையார் நமக்கு விட்டுச்சென்ற நிலங்களை எல்லாம் ஆளுக்குப் பாதியாக பிரித்துக் கொள்வோமே!�� என்று கேட்டான். அதற்கு அண்ணன்காரன் தம்பியிடம், ��தம்பி நாம் நிலங்களைப் பிரித்துப் பயிர் செய்தால் நம் நிலத்தின் பரப்பு குறைந்துவிடும். அக்கம்பக்கம் உள்ள நிலத்துக்காரர்கள் மோசமானவர்கள். வரப்பு, வாய்க்காலை வெட்டி, தங்கள் நிலத்துடன் சேர்த்துக்கொள்வார்கள். எனவே நாம் நிலத்தை இப்போதைக்கு பங்குவைக்க வேண்டாம். நாம் இருவரும் என்றும் போல ஒற்றுமையாய் நம் நிலத்தில் பயிர் செய்வோம். நிலத்தில் விளையும் மகசூலையும் ஆளுக்குப் பாதியாகப் பங்கிட்டு எடுத்துக்கொள்வோம்�� என்றான்.

அண்ணன் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது என்று நினைத்த தம்பிக்காரனும் �சரி� என்றான். அந்த வருடம் நன்கு மழை பெய்தது. ஆறு, குளங்களில் எல்லாம் நீர் நிறைந்து அலைமோதியது. எனவே அண்ணனும் தம்பியும் நன்செய் நிலத்தில் நெல் நடவு செய்து, உரம் போட்டு, களை எடுத்து, மருந்து அடித்து, நீர் பாய்ச்சி, நெல்லை விளையவைத்தார்கள். புன்செய் நிலத்தில் நிலக்கடலை எனப்படும் வேர்க்கடலையை விதைத்து, நன்கு பராமரித்து வந்தார்கள். நன்செய் நிலத்தில் நெற்பயிர் நன்றாக விளைந்து வந்தது. புன்செய் நிலத்திலும் நிலக்கடலை மகசூல் விளைந்துகொண்டிருந்தது. இரண்டு பயிர்களும் இன்னும் முழுமையாக விளையவில்லை.

அப்போது அண்ணன்காரன் தன் கொடூர முகத்தைக் காட்ட ஆரம்பித்தான். தம்பியை ஏமாற்றி, விளைந்த மகசூல் அனைத்தையும் தானே அபகரிக்க வேண்டும் என்று திட்டம் போட்டான். எனவே தம்பியை அழைத்து, ��தம்பி, நன்செய் நிலத்தில் விளைந்த பயிரில் மேல்பாதியை நான் வைத்துக் கொள்கிறேன். நெல் பயிரில் கீழ் பாதியை நீ வைத்துக் கொள். அதேபோல, புன்செய் நிலத்தில் விளையும் பயிரில் கீழ்ப்பகுதியை நான் வைத்துக்கொள்கிறேன். மேல்பகுதியை நீ வைத்துக்கொள்�� என்றான்.

�அண்ணன்காரன் நெல் மணிகளை தான் அபகரித்துக்கொண்டு, வைக்கோலை நம் தலையில் கட்டப்பார்க்கிறான். அதேபோல கடலைமணிகளை எல்லாம் அவன் வைத்துக்கொண்டு கடலைச் செடியின் இலை, தழைகளை எல்லாம் எனக்குக் கொடுக்கப்பார்க்கிறான். தானியங்கள் எல்லாம் அவனுக்கு; மாட்டுக்குப் போடும் தீவனங்கள் மட்டும் நமக்கா? அண்ணன், பேராசைப் பிடித்தவனாக இருக்கிறான். விளைந்த மகசூலில் பாதியை நாம் பெற வேண்டும். ஆனால் இப்போதைக்கு அவனிடம் சண்டை போடவும் கூடாது. ஆனான் அண்ணனுக்கு புத்தி புகட்டவும் வேண்டும்� என்று பலவாறு சிந்தித்த தம்பிக்காரன், கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான்.

அன்று பவுர்ணமி இரவில் முழுநிலவு வானத்தில் ஜொலித்தது. தம்பிக்காரன் நடுஜாம நேரத்தில் எழுந்து, கையில் ஒரு பன்னருவாளுடன் புன்செய் காட்டுக்குச் சென்றான். அங்கு விளைந்திருந்த கடலை மகசூலில் தரைக்கு மேல் உள்ள இலை, தழைகளை ஒரு பாத்தி அளவுக்கு அறுத்து எடுத்து, ஒரு கட்டாகக் கட்டி கொண்டுவந்து வீட்டு முற்றத்தில் போட்டான்.

மறுநாள் காலையில் பொழுது பொல பொலவென்று விடியும்போது படுக்கையில் இருந்து எழுந்த அண்ணன்காரன், கண்களைக் கசக்கிக்கொண்டு முகம் கழுவுவதற்காக கையில் ஒரு செம்பு தண்ணீருடன் வீட்டு முற்றத்துக்கு வந்தான். அங்கே கடலைச் செடியின் இலைகள், தழைகள் அடங்கிய கட்டு கிடந்தது. அதைப் பார்த்து அதிர்ந்த அண்ணன்காரன், தம்பி படுத்துக்கிடக்கும் இடத்துக்குச் சென்று அவனை எழுப்பினான். ��தம்பி, என்ன கூத்து இது? யார் செய்த காரியம்? நம் புன்செய் காட்டில் உள்ள கடலை தழைகளை எல்லாம் யாரோ அறுத்துவந்து நம் வீட்டு முற்றத்தில் போட்டு இருக்கிறார்கள். இன்னும் நன்கு முற்றி விளையாத நிலையில் இப்படி தழையை அறுத்துவிட்டால், பூமிக்குள் பிஞ்சாக இருக்கும்  கடலை எப்படி மணி பிடித்து விளையும்? மேலே இலை, தழை இல்லாத கடலைப் பயிரை எப்படி பூமியில் இருந்து வெளியே எடுக்க முடியும்? எந்த மடையன் செய்த காரியம் இது?�� என்று காச் மூச் என்று கோபத்துடன் கத்தினான்.

அண்ணன் இப்படி அதிகாலை நேரத்தில் கத்துவான் என்று எதிர்பார்த்த தம்பிக்காரன், தன் படுக்கையை விட்டு எழுந்துவது, ��அண்ணா, ஆத்திரப்படாதே. நீதானே புன்செய் காட்டில் விளையும் மகசூலில் மேல்பாதி எனக்கு என்று சொன்னாய். அதனால்தான் காட்டுக்குச் சென்று எனக்கு உரிய பங்கை நான் அறுவடை செய்திருக்கிறேன்�� என்றான் அமைதியாக.
��தம்பி, கடலை பயிரில் மேல்பாதியை அறுத்துவிட்டால், கீழ்பாதியில் உள்ள மகசூல், பிஞ்சாக, விளையாமல் பொக்காகி விடுமே�� என்று பரிதாபமாகக் கேட்ட அண்ணன்காரனுக்கு, �நாம் தம்பியை ஏமாற்றி முழு மகசூலையும் அபகரிக்க நினைத்தது தப்புதான். தம்பி புத்திசாலி என்பதால் நம்மை எதிர்த்துப் பேசாமல், தர்க்க முறையில் காரியத்தை செய்துகாட்டி, மறைமுகமாக நமக்குப் புத்தி புகட்டுகிறான். இனியும் இவனை ஏமாற்ற முடியாது� என்பது புரிந்தது.

அவனை, உண்மையான பாசத்துடன் ��தம்பி�� என்று அழைத்து, ��என்னை மன்னித்துவிடு. நான் என் தவறை உணர்ந்துகொண்டேன். முதலில் உன்னை ஏமாற்றி உனக்கு உரிய பங்கை அபகரிக்க நினைத்தது தப்புதான் என்பதை இப்போது நானும் புரிந்து கொண்டேன். இனிமேல் நமக்குள் சண்டை, சச்சரவு வேண்டாம். நன்செய், புன்செய் ஆகிய இரண்டு நிலத்திலும் விளைந்து வரும் எல்லா மகசூல்களிலும் ஆளுக்குப் பாதியாக நாம் இருவரும் பங்கு வைத்துக்கொள்வோம்�� என்றான்.

தம்பிக்காரன், அண்ணனுக்கு இந்த மட்டிலாவது புத்தி வந்ததே என்று நினைத்து சந்தோஷமாகத் தலையை ஆட்டினான்!

குழந்தைகளே... இந்தக் கதையில் வரும் பேராசைப் பிடித்த அண்ணன்காரனைப் போல யாரும் இருக்கக்கூடாது. நம்மை ஏமாற்றி யாராவது நம் பங்கை திருட நினைத்தால் நம் அறிவைக்கொண்டு யோசித்து, நம் உடைமைகளை அவர்களிடம் இருந்து காத்திட வேண்டும். இதைத்தான் திருவள்ளுவரும் �அறிவு அற்றம் காக்கும் கருவி�� என்று கூறுகிறார். நமக்கு சோதனை வரும்போது நாம் அறிவு என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்து போராட வேண்டும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்.

No comments: