கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Thursday, July 25, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-33 காலு தூக்கிக் கணக்கப் பிள்ளைக்க மாசம் பத்து ரூபா

"விளையாட்டு" - என்ற சொற்பிரயோகம் பேச்சு வழக்கில் மிக இயல்பாகப் பயன்படுத்தப்படுகிறது.
"மாப்ளே... சும்மா ஒரு விளையாட்டுக்குச் சொன்னேன்” என்றான் ஒருத்தன்.
இன்னொருத்தன், "விளையாட்டுக்குக் கூட அப்படிச் சொல்லாதே!” என்கிறான்.
"விளையாட்டு வினையாகி விட்டது" என்றான் மற்றொருத்தன்.
"வேட்டையாடு விளையாடு...” என்று ஆரம்பிக்கிறது ஒரு திரை இசைப்பாடல்.
"ஓடி விளையாடு பாப்பா- நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா!”
என்று பாடினார் மகாகவி பாரதியார்.
ஆனால் இன்று நம் குழந்தைகள், வீடியோ கேம்களின் முன்னால் இரவு பகலாக ஆணி அடித்த பதுமைகள் போல் உக்கார்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் உக்கார்ந்திருக்கிறார்கள்.
"விளையாட்டு" என்று சொன்னால் குழந்தைகளுக்கு எப்போதும் உற்சாகம்தான்.
"பார்த்து சாப்பிடேன்; சாப்பிடும் போது என்ன விளையாட்டு வேண்டிக் கிடக்கிறது?” என்று குழந்தையைப் பார்த்து கோபிக்கிறாள் (பொய்க் கோபம்தான்!) தாய்.
"விளையாட்டுக்குச் சொன்னேன்" என்கிறான் ஒருத்தன். (சொல்வதில்கூட ஒரு விளையாட்டு இருக்கிறது பாருங்கள்.)
"அந்தக் கவிதையில் வார்த்தை விளையாட்டு மட்டும்தான் இருக்கிறது. மற்றபடி அந்தக் கவிதையில் ஒன்றுமே இல்லை" என்கிறார் ஒரு விமர்சகர்.
"சும்மா விளையாடாதீர்கள்!” என்று சிணுங்குகிறாள் காதலி. தன் காதலன் தன்னைத் தொடக்கூடாத நேரத்தில், தொடக்கூடாத இடத்தில் தொடும்போது.
குழந்தைப் பருவத்தில் பொம்மை வைத்து விளையாடுவதில் தொடங்கும் விளையாட்டு, பருவம் தோறும் பல்வேறு வடிவங்களில் மனித வாழ்க்கையோடு பயணிக்கிறது.
தானே தனியே இருந்து விளையாடுவது, பிறருடன் சேர்ந்து விளையாடுவது, வீட்டில் சிறுவர்களும், சிறுமிகளும் சேர்ந்து விளையாடுவது, சிறுமியர் மட்டும் விளையாடுவது, சிறுவர்கள் மட்டும் விளையாடுவது, வாலிபப் பருவத்தில் கன்னிப்பெண்கள் மட்டும் தனித்தும், பிற கன்னிப் பெண்களுடன் சேர்ந்தும் விளையாடுவது, வாலிபர்கள் மட்டும் விளையாடுவது, நடுத்தர வயதினர் விளையாடுவது, முதியோர்கள் மட்டும் விளையாடுவது, முதியவர்கள் இளைஞர்களுடன் சேர்ந்து விளையாடுவது என்று விளையாட்டுகளில்தான் எத்தனை எத்தனை வகைகள் உள்ளன.
விளையாட்டு உடலையும், உள்ளத்தையும் ஒருசேர வளர்க்கிறது. கிராமப் புறங்களில் சென்ற தலைமுறையினர் விளையாடிய விளையாட்டுகளை இன்று காண முடியவில்லை.
'கிரிக்கெட்' என்ற மட்டைப் பந்து விளையாட்டு வந்து மற்ற விளையாட்டுகளை எல்லாம் அடித்து நொறுக்கிவிட்டது; கொக்கோகோலாவும், மிரண்டாவும் வந்து உள்ளூர் கலர் கம்பெனிகளை எல்லாம் அடித்து நொறுக்கியதைப் போல... கிராமங்களில் அன்று குழந்தைகள் விளையாடிய விளையாட்டுகளில்தான் எத்தனை... வகைகள் இருந்தது. வீட்டிற்குள் விளையாடுவது, மரத்தடியில் விளையாடுவது, தெருவில் விளையாடுவது, காடுகரைகளில் விளையாடுவது, நீர் நிலைகளில் விளையாடுவது என்று, அவை எல்லாம் இன்று போன இடம் தெரியாமல் போய் விட்டதே!
குழந்தைகள் ஆரம்பத்தில் பொம்மைகள் வைத்து விளையாடுகின்றன; அந்தக் காலத்தில் தச்சாசாரிகள் குழந்தைகள் விளையாட என்று மரப்பாச்சி பொம்மைகளை (மரத்தால் ஆன பொம்மைகளை) செய்து கொடுத்தார்கள்.
பொம்மைகள் வைத்து விளையாடும்போதே பிள்ளைகள் 'அம்மா பொம்மை' 'அப்பா பொம்மை' என்று வேறுபாடு பார்த்து விளையாட ஆரம்பித்து விடுகின்றன.
குழந்தைப் பருவம் முடிந்து சிறுவர் - சிறுமி என்று ஆனபின்பு பிள்ளைகள் மரத்தடியில், மண் வீடு கட்டி, மண் சமையல் செய்து, பிறர்க்கும் கொடுத்து, தானும் சாப்பிட்டு (கற்பனையாகத்தான்!) விளையாடுவார்கள்.
இடது உள்ளங்கையில், வலது கை முட்டாய் பருப்புக் கடைந்து "வண்ணாக்குடிக்குப் போற வழி... எந்த வழி?” என்று பாட்டுப் பாடியும், கிச்சம் காட்டியும் (கூச்சப்பட வைத்தும், சிரிப்புக் காட்டியும்) விளையாடுவார்கள். இதை வீட்டினுள்ளும், வெளியேயும் விளையாடமுடியும்.
"கண்ணாமூச்சி, கடைக்கலாம் மூச்சி, ஒரு முட்டையைத் திண்ணுட்டு, மறு முட்டையைக் கொண்டு வா...”
என்று சிறுமிகள் தெருக்களிலும், பூங்காக்களிலும் கண்களைப் பொத்தி விளையாடினார்கள். சிறுவர்கள் "பந்தே பந்தே பே பந்தே!” என்று தெருக்களில் புழுதி கிளம்ப விளையாடினார்கள்.
பெண் பிள்ளைகள் மரத்தடியில் சமையல் செய்து, இது அப்பாவுக்கு, இது அம்மாவுக்கு, இது அண்ணனுக்கு என்று கற்பனைச் சோறு கொடுத்து விளையாடினார்கள்.
துடிப்பான சிறுவர்கள், காடு கரைகளில் அலைந்து திரிந்து ஓணான் என்ற தெண்டலைப் பிடித்து வந்து அதை சாமியாட வைத்து (அது ஒரு சித்ரவதைக் கலை) விளையாடினார்கள்.
ஊரில் கோயில் கொடை முடிந்த ஒரு வாரத்திற்கு, கோயில் கொடையை மாதிரியாகக் கொண்டு, சிறுவர்கள் கொட்டு அடித்தும், குழல் ஊதியும், சாமி ஆடியும் விளையாடுவதுண்டு.
பூவரச இலையில் குழல் செய்வார்கள். பூவரச இலையில் குழல் செய்கிற போதே.
"பட்டாப் பட்டாக் குழலே - உனக்கு
பாலும் பழமும் தாரேன்.
எனக்கு மட்டும் ஊது!” என்று
ராகத்தோடு பாட்டும் படிப்பார்கள்.
சிறுவர்கள் விளையாடும் நீர் விளையாடுகள் அது தனிரகம். கிணற்று நீரில் நீந்தியபடியே தொட்டுப் பிடித்து விளையாடுவது தனிக்கலை. முங்கு நீச்சல் தெரிந்தவன், மூச்சடக்கி வெகுநேரம் கிணற்றுத் தண்ணீருக்குள் இருக்கத் தெரிந்தவன், நீர் விளையாட்டுகளில் ஜெயிக்க முடியும்.
பெண்குழந்தைகள், பூச்சொல்லி விளையாடுவார்கள். தட்டாங்கல் விளையாடுவார்கள். பட்டுப் பாவாடை தெருப்புழுதியில் அழுக்காகிறதே என்ற கவலை இல்லாமல் மரத்தடியில் உக்கார்ந்து "கோழி சுண்டி... குத்துலக்கை...” என்று பாடிக் கொண்டே விளையாடுவார்கள்.
பூச்சொல்லி விளையாடும்போது, "பூப்பறிக்க வறீகளா..? பூப்பறிக்க வறீகளா..? என்று பாட்டு பாடிக் கொண்டே விளையாடுவார்கள்.,
குழந்தைகளின் விளையாட்டுகளுடன் இசையும், பாடலும் இணைத்த மேன்மையை என்ன சொல்லிப் பாராட்ட..
பையன்களின் விளையாட்டுகள் கொஞ்சம் முரட்டுத்தனத்துடன் காணப்பட்டது. பெண் பிள்ளைகளுக்கு என்று மேன்மையான விளையாட்டுகள்.
நொண்டியடித்து விளையாடும் போதே "நொண்டி, நோக்கா - என்னைப்
பெத்த தவக்க" என்று பாடிக் கொண்டே விளையாட ஆரம்பிப்பது.
செதுக்கு முத்து விளையாடி, முத்துகளை ஒருவன் தோற்பது, மற்றவன் முத்துகளைச் சேர்ப்பது (புளிய முத்து)
பம்பர விளையாட்டில் பையன்கள் மும்முரமாக அலைவார்கள். குறிபார்த்து எதிரியின் பம்பரத்தைத் தாக்கி உடைப்பது என்றெல்லாம் நடக்கும். பம்பர விளையாட்டில்தான் எத்தனை வகைகள்..? எத்தனை சட்ட திட்டங்கள்..?
நடுவர் இல்லாத இந்த விளையாட்டுகளில், சிறுவர்கள் தானே முன் வந்து வெற்றி தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் பெருந்தன்மைதான் என்ன..?
பொன் வண்டு பிடித்து, அதைத் தீப்பெட்டிக்குள் போட்டு, அதற்குத் தீவனமாக (உணவாக) சில தாவர இலைகளையும் போட்டு, அது குட்டி போடும் என்ற கனவோடு காத்திருப்பதென்ன..? பட்டுப் பூச்சிகளுக்கு பூருமத்தை சமைத்துக் கொடுக்கும் அழகுதான் என்னே...!
நொங்கு தின்ன கூந்தலில் வண்டி செய்து அதை கவை (பிளவு) உள்ள கம்பியில் ஒட்டி விளையாடும் காலம் மலை ஏறிவிட்டது!.
கிட்டிப்புல் என்கிற சில்லாங்குச்சி விளையாட்டை நாள் முழுவதும் விளையாடினாலும் சிறுவர்களுக்கு அலுக்காது.
சைக்கிள் டயர், சைக்கிள் ரிம் இவைகளை ஓட்டிக் கொண்டு சிறுவர்கள் எங்கெல்லாம் ஓடுவார்கள்..! இதனால் அந்தக் காலத்து சிறுவர்கள் உடல் வலிமை பெற்று விளங்கினார்கள். இன்றைய 'வீடியோ கேம்' பிள்ளைகள் 'சோளத்தட்டை பயில்வான்கள்' (நோஞ்சான்களாகத் திகழ்கிறார்கள்)
மரத்தடியில் மணலைக் குவியலாக (நீளவசத்தில்) குவித்து வைத்துக் கொண்டு அதில் ஒரு சிறு குச்சியை ஒழித்து வைத்து "கிச்சிக் கிச்சி தாம்பளம்; கீயாளி தாம்பளம்" என்று பாடிக் கொண்டே விளையாடுவார்கள்.
இவை தவிர, "காலு தூக்கிக் கணக்கப்பிள்ளை" என்று ஒரு விளையாட்டை சிறுவர்கள் விளையாடுவார்கள். இந்த விளையாட்டைப் பற்றிய விபரத்தை மட்டும் கீழே தருகிறேன்.
இருவர் ஒரே திசையில் திரும்பி நின்று கொண்டு, ஒருவனது வலது கையுடன் மற்றவன் இடது கையைக் கோத்துக் கொள்வான். மூன்றாமவன் அந்த இருவருக்கும் பின்புறமாக வந்து இருவரது தோள்களிலும் தனது இரு கைகளையும் போட்டுக் கொண்டு, தனது வலது முழங்காலை அவர்களின் கோர்த்த கைகளில் ஊன்றி இருந்து கொள்வான். இப்போது அவனது மற்றொரு கால் பின்புறமாகத் தொங்கும். தொங்கும் காலை நான்காமவன் ஏந்திப் பிடித்துக் கொள்வான். இப்போது கைகோத்த இருவரும் தன் கைகளில் சவாரி செய்கிறவனைத் தாங்கிப் பிடித்தபடி "காலு தூக்கிய கணக்கப் பிள்ளைக்கு மாசம் பத்து ரூபாய்!” என்று பாடிய படியே நடந்து செல்வார்கள். இப்படி நால்வரும், ஒருவர் மாற்றி ஒருவர் மற்ற மூவரின் அரவணைப்பில் சவாரி செய்து மகிழ்வார்கள். அக்காலத்தில் இப்படி குழந்தைகள் விளையாடிய விளையாட்டுகள் யாவும் அர்த்தம் உள்ளதாகவும், மனப்பான்மைகள் வளர்ப்பதாகவும் திகழ்ந்தன.
தமிழகம் எங்கும் வட்டாரத்திற்கு வட்டாரம் இதுபோல எண்ணற்ற விளையாட்டுகள் விளையாடப்பட்டன. அவை யாவும் இன்று வழக்கொழிந்து வருகின்றன. எனவே. அவைகளை எழுத்திலாவது பதிவு செய்து வைக்கலாம் என்று எண்ணுகிறேன்

No comments: