கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள் -17 வட்டார வழக்கில் குணச் சித்திரச் சொற்றொடர்கள்

கிராமத்து மக்கள் சிலரின் குணாம்சங்களைச் சொல்ல சில சொற்றொடர்களைப் பயன் படுத்துகிறார்கள். அவைகளைக் கேட்டு சக கிராமத்து மக்கள் அதன் பொருளைப் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் பொதுத்தமிழில் பழகியவர்களால் அத்தகைய சொற்றொடர்களைப் புரிந்து கொள்ளச் சிரமப்படுவார்கள். இக்கட்டுரையில் அத்தகைய சொற்றொடர்களுக்கு மட்டும் விளக்கம் சொல்ல விரும்புகிறேன்.

கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் சிலர் விபரமான ஆளாக இருப்பான். எந்த அதிகாரி வந்தாலும் அவர்களிடம் தெளிவாகப் பேசுவான். அத்தகைய நபர்களைக் கிராமத்து மக்கள், “தெளியக் கடஞ்ச ஆளு’ என்று சொல்கிறார்கள்.

சிலர் வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கிற அப்புராணி; சுப்புராணியாக இருப்பார்கள். சூதுவாது இல்லாமல் ஒளிவு மறைவின்றி மனதில் பட்டதைப் பட்ட வர்த்தனமாகப் பேசி விடுவார்கள். அப்படிப்பட்டவர்களை “வெள்ளாந்தியான ஆளு” என்று சொல்கிறார்கள்.

எந்தப் பிரச்சினையையும் தைரியமா, மனத்திடத்துடன் எதிர் கொள்பவனைப் பார்த்து, “அவன் வல்லாள கண்டன்” என்று கூறுகின்றார்கள்.
எப்போதும் சேட்டை செய்து கொண்டிருக்கிற சிறுவர்களைப் பார்த்து ‘எமகாதப் பெயல்’ என்கிறார்கள்.

ஏதாவது தவறு செய்து விட்டு உயரதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டாலும் விசாரணையின் போது எந்த பதிலையும் வாயைத் திறந்து சொல்ல மறுக்கும் ஆசாமியைப் பார்த்து ”அவன் சரியான கல்லுளி மங்கன்” என்கிறார்கள்.

எப்போதும் நோயுண்டவனைப் போல தலைநிறைய முக்காடு போட்டுக் கொண்டு தலைகுனிந்தபடி தெரு ஓரமாக உக்காந்திருக்கும் நபரைப் பார்த்து, ”கொக்கு முக்காடு போட்டவன்” என்று கூறுகிறார்கள்.

சிலர், எகதாளமாகப் பேசுவார்கள். ஆனால் எந்த வேலையையும் சரியாகச் செய்து முடிக்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களை, ”அவன் வாயில் களி கிண்டுகிறவன்” என்கிறார்கள்.

பிறர்க்கு எந்தச் சூழ்நிலையிலும் நாலு காசு கொடுத்து உதவி செய்து விடக் கூடாது என்று ‘கங்கணம்’ கட்டிக் கொண்டு வாழ்கிறவனைப் பார்த்து ”கல் நெஞ்சக்காரன்” என்கிறார்கள்.

சுறுசுறுப்பாக  எந்தக் காரியத்தையும் எளிதாகச் செய்து முடிக்கிற இளந்தாரியைப் பார்த்து, “சும்மா புகுந்து விளையாடுகிறான்” என்றும், ”புகுந்து விளாசுகிறான்” என்றும் சொல்கிறார்கள்.

ஆடம்பரமாகச் செலவு செய்தும் கேளிக்கைகளில் ஈடுபட்டும், தவறான வழியில், தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் செலவு செய்து விட்டவனைப் பார்த்து “ஆயிரத்தை காலே மாகாணி, ஆக்கினவன்” என்கிறார்கள்.

ஆயிரம் என்பது எண் அளவை, ‘காலே மாகாணி’ என்பதும் பழங்காத்தில் நடைமுறையில் இருந்த ஒரு எண் அளவைதான். ‘கால்’ என்பதுடன் ‘மாகாணி’ (காலில் நாளில் ஒரு பங்கு) என்பதும் சேர்ந்தால் காலே மாகாணி ஆகும்.

ஈகை குணமே இல்லாத கஞ்சப் பிசுநாரியான, பொம்பளைகளை; அறுந்த கைக்குச் சுண்ணாம்பு (மருந்து) கொடுக்க மாட்டாள் என்றும், தவிச்ச வாய்க்கு (தாகம் எடுத்தவனுக்கு) தண்ணீர் கொடுக்க மாட்டாள் என்றும் சொல்கிறார்கள்.

கஞ்சப்பிசுநாரியான ஆண்களைக் குறிக்க, “எச்சிக் கையால் காக்காய் விரட்ட மாட்டான்” என்கிறார்கள். சாப்பிடும் போது எச்சிக் கையால் காக்காயைப் பார்த்து கையை உதறியபடி ‘சூ’ என்று சொல்லும் போது, எச்சிக் கையில் உள்ள சோற்றுப் பருக்கைகள் கீழே தரையில் விழுந்துவிடுமாம். அப்படி விழுந்த எச்சில் பருக்கைகளை காகம் கொத்தித் தின்று தன் பசியை ஆற்றிக் கொள்ளக் கூடாதே என்ற நல்ல எண்ணத்தில்(?) தான் எச்சிக் கையில் காக்காயை விரட்டாமல் இருக்கிறார் அந்தக் கனவான்.

ரொம்ப கடுமையான கஞ்சனைப் பார்த்து, “அடே யப்பா அவனா. . .  அவன் முழங்கைவரை அறுத்தாலும் ரெத்தம் வராதே!” என்று மிகை எதார்த்தமாகச் சொல்கிறார்கள்.

படிப்பு வாசனையே இல்லாத பாமரனைப் பார்த்து “ஆனாங்கிற அச்சரம் (எழுத்து) தெரியாதவன்” என்கிறார்கள். கையெழுத்துக்கூடப் போடத் தெரியாதவனைப் பார்த்து அவன் ஒரு ‘கைநாட்டுப் பேர் வழி’ என்கிறார்கள்.

ஏட்டுப் படிப்பு வரை படித்த கிராமத்து அறிஞர்களைப் பார்த்து ”அவர், நாலெழுத்துப் படித்தவர்” ”கதை காரண மெல்லாம் தெரிஞ்சவர்” என்கிறார்கள்.
வயதான ஒத்தக்கட்டையான அனாதை மூதாட்டியைப் பார்த்து ‘உழக்கரிசி ஜீவன்” என்கிறார்கள்.

பைத்தியார மனுஷனாக இருக்கிறவனைப் பார்த்து “சுத்த அப்புராணி” என்றும் கண்ணைத் திறக்கச் சொன்னா, வாயைத் திறப்பார்” என்றும் சொல்கிறார்கள்.
உடல் பலமும், உள்ள உறுதியும் இல்லாத சோப்பளாங்கியானவனைப்பார்த்து “தவிச்ச முயல் அடிக்கிறவரு” என்றும், “நனைஞ்ச கோழி பிடிக்கிறவன்” என்றும் கூறுகிறார்கள்.

கிராமத்தில் கட்டு முட்டுமாக உடல்கட்டோடு இருக்கிற பெண்ணைப் பார்த்து ”அவள் சரியான நாட்டுக் கட்டை” என்கிறார்கள்.

சுத்த கறார் பேர் வழியாக இருக்கிறவர்களிடம் இருந்து எந்த ஒரு பொருளையும் எளிதில் வாங்கிவிட முடியாது. அப்படிப்பட்டவர்களை அழுத்தமான ஆளு” என்றும் ”கடுத்தமான ஆளு” என்றும் சொல்கிறார்கள்.

சின்னஞ்சிறுவர்களைப் பற்றி கோவமாகக் குறிப்பிடும் போது “முந்தாநாள் பெய்த மழையில், நேத்து முளைத்த சிறு கீரை (அல்லது காளான்) என்றும், ”அவனா, முளைக்கலை, இன்னும் மூணு இலை விடலையே!” என்கிறார்கள்,

கைராசி இல்லாத ஆண்களைப் பார்த்து ”அவன் மஞ்சளைத் தொட்டால் கரியாகும்” என்றும், கைராசி இல்லாத பெண்களைப் பார்த்து, ”அவள் மஞ்சளை அரைத்தால் கரியாகும்” என்றும் சொல்கிறார்கள். இத்தொடரில் மஞ்சள் மங்களத்தின் குறியீடாகவும், ‘கரி’ அமங்களத்தின் குறியீடாகவும் உள்ளது.

மனிதர்களின் குணச் சித்திரங்களைக் குறிக்க கிராமத்து மக்கள் உபயோகிக்கின்ற வட்டார வழக்குத் தொடர்களை எல்லாம் ஒன்று சேர்த்துப் பார்க்கிற போது புதிய சொற்பிரயோகங்களை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

இத்தகைய தொடர்கள் படிக்க சுவாரஸ்யமாகவும், பேசுவதற்கு ரசமானதாகவும், சில சொற்றொடர்கள் நகைச் சுவையை வரவழைப்பதாகவும் உள்ளன.

No comments: