கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-31 வெண்டைக்காய் பிறந்த கதை

இந்த வாரமும் ஒரு பாலியல் நாட்டார் கதையை வாசகர்களுக்குத் தருகிறேன். இக்கதையும் அமரர் வ. க. அவர்களின் உபயம்தான்.

நாட்டார் கதைகளில் ‘காரணக் கதைகள்’ என்று ஒரு பிரிவு உள்ளது. வித்தியாசமான பறவைகள், விலங்குகள், தாவரங்கள், காய், கனிகள் என்று ஒவ்வொன்றும் தோன்றியதற்கான காரணக்கதை என்னை நாட்டுப்புறத்து மக்கள் கற்பனையாகப் படைத்து உலவ விட்டிருக்கிறார்கள்.

‘மறைவாய் சொன்ன கதைகள்’ என்ற தொகுப்பில் வெற்றிலை பிறந்த கதை ஒன்றைப் பதிவு செய்துள்ளேன். அதுவும் ஒரு காரணக்கதைதான்.



முள்ளம் பன்றியின் வடிவம் வித்தியாசமாக இருக்கிறது. எனவே அதைப்பார்த்த கதை சொல்லி ஒருவர், முள்ளம் பன்றிக்கு ஏன் அப்படி ஒரு உருவம் வாய்த்தது என்ற காரணத்தை அடிப்படையாக வைத்து ஒரு கதையை உருவாக்கி உலவ விட்டிருக்கிறார்.

வரிக்குதிரையின் உடம்பில் போடப்பட்ட வரிகளுக்கான காரணக் கதையும், நீர் யானையின் முக அமைப்பிற்கான காரணக் கதையும், ‘வௌவால்’ என்ற பறவை, தின்ற வாய்மூலமே கழிக்கும் காரணத்திற்குப் பின்னால் உள்ள கதையும் எனது சேகரிப்பில் உள்ளன. இதில் பாலியல் கதைகளும் உண்டு.

வெண்டைக்காயின் வித்தியாசமான உருவ அமைப்பும் அதன் வழவழப்பும் ஒருகதை சொல்லியை இப்படிப்பட்ட ஒரு நாட்டார் பாலியல் கதையை உருவாக்கச் செய்திருக்கிறது.

உலகம் முழுவதிலும் இத்தகைய நாட்டார் காரணக் கதைகள் உள்ளன. குறிப்பாகத் தென்னாப்பிரிக்காவில் இத்தகைய கதைகள் அதிகம் சொல்லப்படுகின்றன.

தமிழகத்தில் உலவும் நாட்டார் காரணக் கதைகளை மட்டும் தொகுத்து தனி ஒரு தொகுப்பு நூலே வெளியிடலாம். அந்த அளவுக்கு தமிழில் காரணக் கதைகள் புழக்கத்தில் உள்ளன.

அமரர் வல்லிக்கண்ணன் எழுத்து வாயிலாக, எனக்கு அனுப்பிய, இந்த நாட்டார் பாலியல் காரணக் கதையை இனி வாசகர்கள் முன் வைக்கிறேன்.

இனி, கதைக்குள் செல்வோமா. . .

இது ரொம்ப காலத்துக்கு முன்னே- ரொம்ப ரொம்ப காலத்துக்கு முன்னே- நடந்தது.

பூமியில் பிருமாண்டமான உருவங்கள் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த காலத்தில் நடந்தது. வானத்தில் இருக்கும் தேவாதிகள் பூமியிலிருக்கும் மனுஷாள்களின் நல்லது கெட்டதில் அக்கறை காட்டிவந்த காலம் அது.

இரண்டு ஊர்கள். ஆற்றின் இக்கரையில் ஒன்றும், அக்கரையில் ஒன்றுமாக இருந்தன. நடுவிலே பாலம் கிடையாது. ஆற்றைக் கடந்து அந்த ஊரிலிருந்து இந்த ஊருக்கு வருகிறவர்களும், இந்த ஊரிலிருந்து அந்த ஊருக்குப் போகிறவர்களும், வண்டிகள் மாடுகள் முதலானவைகளும் ஆற்றுக்குள் இறங்கித்தான் வந்து போயாக வேண்டும்.

ஆற்றிலே தண்ணீர் அதிகம் இல்லாத நாட்களில் இதிலே கஷ்டம் ஒன்றுமில்லை. ஆற்றில் அதிகமாகத் தண்ணீர் ஓடும் நாட்களில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிற போது, இரண்டு ஊர்க்காரர்களும் கஷ்டப்பட்டார்கள்.

அந்த வட்டாரத்திலே அசுரன், ராட்சஸன் என்றெல்லாம் சொல்றார்களே, மலைமாதிரி உடம்பும், பனைமரங்கள் மாதிரி கைகளும் கால்களும் படைத்த பிறவி - அப்படிப்பட்ட ஒருவன் இருந்தான். மனுஷாள்ளே இருக்கிற மாதிரி ராட்சஸாள்ளேயும் நல்லவங்களும் அபூர்வமாக உண்டு. இவன் நல்லவன். கஷ்டப்படுகிற மனுஷப் பயபுள்ளெகளுக்கு உதவி செய்யலாமேன்னு நெனச்சான். ஆற்றுக்குக் குறுக்கே, வாய்க்கால் ஊடே நடப்பதுக்குப் பாலம் போலே பனைமரம், தென்னைமரம் இவைகளைப் போட்டு வைப்பாளே அதுமாதிரி, இவன் தன்னையே கிடத்திக்கிட்டான். ‘டே பயல்களா, என் மேலே ஏறிப் போங்கடா. வண்டி, மாடு எல்லாமே போலாம். நான்தான் பாலம்’னான். மனுசங்க முதல்லே பயந்தாங்க. ‘பயப்படாதீங்கடா. நான் உங்களுக்கு நல்லதுதான் செய்றே’ன்னான் இவன். அந்த ராட்சஸன் எல்லாரும் அவன் மேலே ஏறிப் போனாங்க. வந்தாங்க. வண்டிகளும் போச்சு. ரொம்ப வசதியாக இருந்தது. மனுசங்க நன்றி அறிதலோடு அவனைக் கும்பிட்டாங்க.

இப்படிச் சிலகாலம் ஒழுங்கா நடந்துக் கிட்டிருந்தது.

ஒரு சமயம் என்ன நடந்ததுன்னு சொன்னா - அதுதான் ரசமான விஷயம்.

அப்போ ஆற்றிலே வெள்ளம். அந்த ராட்சஸன் பாலமாக் கிடக்கான். அவன் மேலேகூடி ஆள்கள் - ஆம்பிளைகளும் பொம்பிளைகளும் - போய் வந்துக்கிட்டிருக்கு. வண்டிகள் - கட்டை வண்டி, வில்லு வண்டி எல்லாம்தான் - போகுது. திடீர்னு அந்த ராட்சஸனுக்கு ஏதோ கிளுகிளுப்பு ஏற்பட்டுது. எதையாவது நெனச்சானோ! கனவு மாதிரிக் கண்டானோ! அவன் என்ன எழவோ - அவனுக்கு ஆசை கிளம்பிட்டுது. அவன் ராட்சஸப் பயலா சும்மாவா? அதோ ஒரு தடிப் பனை மாதிரி நிமிர்ந்து நின்னுது. அதிலேருந்து வெள்ளம் மாதிரி வெள்ளை நீர் பொங்கி வழிஞ்சுது. அப்படி அது எழும்பிய வேகத்திலும், அருவி மாதிரிப் பாய்ந்து வழிந்த தண்ணியிலும் அடிபட்டும் இழுபட்டும் மனுசங்க, மாடுக, வண்டிக எல்லாம் ஆற்றோடு சேர்ந்து, ஐயோன்னு போயிட்டாங்க. பெருகிப் புரண்டு வந்த வெள்ளம் அவனையும் அடிச்சு ஒதுக்கி கரையிலே ஒரு பக்கமாச் சேர்த்திட்டுது.

அப்புறம் சூரியன் எத்தனையோ தடவைகள் தோன்றி மறைந்துவிட்டான். மழை பெய்தது. ஓய்ந்தது. ராட்சஸன் தேகம் மக்கி, மண்ணாகி, பூமியோடு கலந்துவிட்டது.

சில நாட்களுக்குப் பிறகு அந்த இடத்திலே பசுமையாய் ஒரு செடி முளைத்து வளர்ந்தது. அது அதிசயமான ஒன்றாகத் தோன்றியது.

உரிய காலத்தில், அதில் பூக்கள் பூத்தன. காய்கள் தோன்றின.

அதன் காய் விசித்திரமானதாகத் தோன்றியது. அடி பருத்து, நுனி சிறுத்து, வானத்தை நோக்கி விறைப்பாக எழும்புவது போல் நின்றது ஒவ்வொரு காயும்.

அதை அதிசயமாகப் பார்த்தவர்களில் ஒருவன், ஒரு காயைப் பறித்து, முறித்துப் பார்த்தான். அவன் கை பிசுபிசுத்தது. அப்படிப் பிசுபிசுக்க வைக்கும் வழ வழப்பான திரவம் ஒன்று அந்தக் காயில் உள்ளுறை பொருளாய் இருந்தது.

அப்போது பலருக்கும் அந்த ராட்சஸனின் ‘சங்கதி’ நினைவே வந்தது. அவன் ஞாபகார்த்தமாகத்தான் தேவாதிகள், அவன் செத்த இடத்திலே, இந்தச் செடியையும் அதில் இப்படி ஒரு காயையும் உண்டாக்கி விட்டிருக்கிறார்கள் என்று அவர்கள் கருதினார்கள். ராட்சஸனை நினைத்தும், கடவுளை நினைத்தும், அந்தக் காயைப் பார்த்துக் கும்பிட்டார்கள்.

அதுதான் வெண்டைக்காய்

No comments: