கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, July 22, 2013

செவக்காட்டுச் சேதிகள்- 8 கிராமிய குடும்பம்

Bull race
பெண் உரிமை குறித்த செய்திகள் பலவும் பழைய கிராமியக் கதைகளிலும், பழமொழிகளிலும், பாடல்களிலும் பதிவாகி உள்ளன. அவைகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஆர்வம் நமக்குத்தான் இல்லாமல் போய்விட்டது.

Bull race பொதுவாகப் பெண்களை நாலாந்தரக் குடிமக்களாக நடத்தும் ஆணாதிக்க மனப்பான்மை, இடைக்காலத்தில் நம்மில் புகுந்த ஆரிய மரபில் இருந்து வந்ததுதான். எழுத்துப்பூர்வமாக நமக்குக் கிடைத்துள்ள பழந்தமிழ் இலக்கியச் சான்றுகள் பலவும் பெண்களின் பெருமை பேசுகின்றன. பெண்மையைப் போற்றுகின்றன. இந்த உண்மையை நிரூபிக்கத் தனி ஒரு நூலே எழுதும் அளவிற்கு இலக்கியச் சான்றுகள் விரிந்து பரந்துள்ளன.

சான்றாகத் திருக்குறளில் இருந்து ஒரே ஒரு செய்தியை மட்டும் வாசகர்கள் முன் வைக்கிறேன். இல்லறவியலில் திருவள்ளுவர் ஓர் அதிகாரத்திற்கு வாழ்க்கைத் துணை நலம் என்று பெயர் சூட்டுகின்றார். மனைவியை கணவனின் துணை என்றும் அத்துணையே வாழ்க்கைக்கு நலம் பயக்கும் என்றும் பொருள் படும்படி திருவள்ளுவர் அந்த அதிகாரத்திற்குப் பெயர் சூட்டியுள்ளார்.

ஓர் அதிகாரத்திற்குத் தலைப்பு வைக்கும்போது கூட பெண்ணுக்கு உரிய இடத்தை வள்ளுவர் வழங்கியுள்ளார். எனவே, பெண்ணடிமைத்தனம் என்பது பழந்தமிழ்ச் சமூகத்தில் தீவிரமாக இல்லை. இந்தக் குணம் இடைக்காலத்தில்தான் வந்து தமிழ்ச் சமூகத்தில் புகுந்தது என்பதைப் பல சான்றுகள் மூலம் நிறுவ முடியும்.

பெண்கள் தங்கள் உரிமைக்காகக் குரல் கொடுத்தார்கள். தங்கள் உரிமையை நிலைநாட்டினார்கள் என்பதை நிறுவ நாட்டார் கதையாடல்களில் பலப்பல சான்றுகளைக் காட்ட முடியும். பெண் மொழியாகப் பதிவாகியுள்ள ஒரு நாட்டார் கதையை இனி பார்ப்போம்.

ஒரு ஊர்ல ஒரு பொண்டாட்டியும் புருசனும் இருந்தாங்க. புருசன்காரனுக்கு சம்சாரித்தனம்தான் தொழிலு. ஆனால், நேரம் கிடைக்கும் போதெல்லாம் முயல் வேட்டைக்குப் போவான். முயல் வேட்டைக்கு என்று ஒரு வேட்டை நாயை வளர்த்தான்.

முயல் வேட்டையால் அவனுக்கு ரொம்ப கூர்மையான அறிவு இருந்தது. காடு கரைகளில் கிடக்கின்ற முயல் புழுக்கையைப் (கழிவை) பார்த்தே இந்த இடத்திற்கு முயல் எவ்வளவு நேரத்திற்கு முன் வந்தது, அது ஆண் முயலா? பெண் முயலா? குட்டி முயலா? இந்த இடத்தில் இருந்து தொடர்ந்து எந்த இடத்திற்கு அந்த முயல் பயணமாகிச் சென்றுள்ளது? அந்த முயல் தனியாக வந்ததா? அல்லது கூட்டமாக வந்ததா? அந்த முயலின் நிறம் என்ன? என்பது போன்ற பல விசயங்களை யூகித்து அறிந்து கொள்ளும் நுட்பமான அறிவு அவனுக்கு அனுபவத்தால் கிடைத்திருந்தது.

கிடக்கும் முயல் புழுக்கையின் அளவையும், வடிவத்தையும் வைத்து வந்தது ஆண் முயலா? பெண் முயலா என்றும், புழுக்கையின் ஈரப்பதத்தை வைத்து அந்த முயல் இந்த இடத்தில் இருந்து சென்ற நேரத்தையும், அந்த இடத்தில் அல்லது சற்று தொலைவில் உதிர்ந்து கிடக்கும் முயலின் முடியை வைத்து அம்முயலின் நிறத்தையும், புழுதியில் பதிந்துள்ள காலடித் தடத்தின் அளவையும், அழுத்தத்தையும் பார்த்து அம்முயலின் கனத்தையும், உருவத்தையும் கணித்துச் சொல்லும் ஆற்றல் அந்த முயல் வேட்டைக்காரனுக்கு இருந்தது.

அவன் முயல் வேட்டைக்குச் சென்று பிடித்து வரும் முயல்களை எப்போதும் வெளி ஆட்களுக்கு விற்று விடுவான். யாரும் முயல் வாங்கவில்லை என்றால் தன் மனைவியிடம் கொடுத்து கறி வைக்கச் சொல்வான். ஒருநாள் அந்த முயல் வேட்டைக்காரன், காடு கரைகளுக்குச் சென்று ஒரு பெரிய முயலை வேட்டையாடி வந்தான். அன்று வேட்டை முடிந்து திரும்பும் போது இரவு வெகு நேரமாகி விட்டது. வேட்டையால் ஒரு பெரிய ஆண் முயல் கிடைத்தது. இரவு ரொம்ப நேரமானதால் ஊரில் யாரும் அந்த முயலை விலைகொடுத்து வாங்க முன்வரலை. அதனால அந்த முயலைத் தன் பொண்டாட்டியிடம் கொடுத்து எம்மா, இது பொட்டக்காட்டுல பிடிச்ச முயலு. இன்னைக்கு இந்த முயலைக் கறி வை. நான் மாடு, கண்ணுகளுக்கு வைக்கோல் அள்ளி வச்சிட்டு, காடு கரைகளை ஒரு சுத்தி சுத்தி பார்த்துட்டு வாரேன். முன்னிருட்டு நேரத்துலதான் கள்ளாளிப் பெயல்கள். லாந்துவானுக (வருவார்கள்) ன்னு சொல்லிட்டு வீட்டை விட்டுப் போயிட்டான்.

பொண்டாட்டிக்காரி அந்த கொழுத்த முயலை அறுத்து நன்றாக மசால் போட்டு வாய்க்கு ருசியாகச் சமைத்து வைத்தாள். ராக்காவலுக்கு காடு கரைகளுக்குப் போன புருசக்காரன், வருகிற வழியில பனையேறி வீட்டுக்குப் போய் ஒரு கலையம் தனிக்கள்ளையும் குடிச்சிட்டு போதை யோடயும் பசியோடயும் வீட்டுக்கு வந்தான்.

கால், கை, கழுவிட்டு வாங்க... சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்று பொண்டாட்டிக்காரி சொன்னாள். புருசக்காரனும் கால், கை, கழுவிட்டு வந்து சாப்பாடு மனையில் (பலகையில்) உக்கார்ந்தான். தலை வாழை இலை விரிச்சு புருசக்காரனுக்கு சோறு போட்டான். காச்சி வைச்ச முயல் கறியை சட்டியோட கொண்டு வந்து புருசக்காரன் முன்னால வச்சாள். நல்ல பசியும், இளம் போதையுமா இருந்த புருசக்காரன் பொண்டாட்டியிடம் நீ சாப்பிட்டாயா என்று கேட்கவும் இல்லை. அவளுக்கு என்று முயல் கறியை மிச்சம் வைக்கவும் இல்லை. சமைத்த கறி ருசியாக இருந்ததால் தனக்கு முன்னால் சட்டியில் இருந்த முயல் கரி முழுவதையும் சாப்பிட்டு விட்டான்.

மனைவிக்கு என்று மிச்சம் வைக்காமல் சாப்பிடும் கணவனைப் பார்த்து அப்போதைக்கு அவள் ஒன்றும் சொல்லவில்லை. போதையில் இருக்கிறார் தேவையான அளவு சாப்பிடட்டும் என்று நினைத்துவிட்டாள்.

கட்டிய மனைவிக்கு என்று அவர் காய்ச்சிய முயல் கறியில் ஒரு துண்டுக் கறி கூட மீதம் வைக்காமல் சாப்பிட்டு முடித்து விட்டு, ஏவ்... என்று ஒரு ஏப்பமும் விட்டு விட்டு புருசக்காரன் சாப்பிட்ட இலையையும் எடுக்காமல் எந்திரிச்சி புறவாசலுக்குப் போய் கை, கழுவி விட்டு திரணையில் கிடந்த பாயை விரித்து கட்டையைச் சாத்தி விட்டான்.

தனக்கு ஒரு துண்டுக் கறிகூட மிச்சம் வைக்காமல் முயல் கறியை எல்லாம் சாப்பிட்டதோடு நீ சாப்பிட்டியா? உனக்குக் கறி இருக்கா? என்று ஒரு வார்த்தைகூட கேட்காமல் போய் படுத்து விட்ட தன் புருசன்மேல் பொண்டாட்டிக்காரிக்கு கோவம், கோவமாக வந்தது. என்றாலும் தன் கோவத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமலும், அன்று இரவு சாப்பிடாமலும் கொலைப் பட்டினியோடு வீட்டிற்குள் சென்று கதவை அடைத்துப் படுத்துக் கொண்டாள்.

அதிகாலையில் பொழுது விடிந்ததும், விடியாமலும் இருக்கும் கங்கல் மங்கலான குரங்கிருட்டு நேரத்தில் போதை தெளிந்து தூங்கி முழித்து கதவைத் தட்டினான் புருசக்காரன். நல்லா பொல, பொல என்று பொழுது விடியும் வரை பொண்டாட்டிக்காரி கதவைத் திறக்கவில்லை. கதவைத் தட்டிப் பார்த்து சடைஞ்சி போன (அலுத்துப்போன) புருசக்காரன் புழக்கடைக்குப் போய் முகம் கழுவி வாய் கொப்பளித்து விட்டு காடு கரையைச் சுத்திப் பார்க்கப் போயிட்டான் கோவத்தோட.

புருசக்காரன் காட்டுக்குப் போயிட்டான்னு தெரிஞ்ச பிறகு வீட்டுக்குள்ள இருந்து எந்திரிச்சு அவள் வாசல் கதவைத் திறந்துக்கிட்டு வெளியே வந்தாள்.

காடு கரைகளுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்த புருசக்காரனைப் பார்த்து பொண்டாட்டிக்காரி, ராத்திரி வாய்க்கு ருசியா முயல் கறி சாப்பீட்டிகளே... கட்டுன பொண்டாட்டியான எனக்கு ஒரு துண்டுக் கறியாவது மிச்சம் வச்சீகளா? சரியான தாந்திண்ணியாக (தானே அனைத்தையும் சாப்பிடுகிறவன்) இருக்கீகளே... என்று கேட்டாள்.

அப்போதுதான் புருசக்காரனுக்கே போதையில் நடந்த தவறு மூளையில் உரைத்தது. கோழி கூப்புட கூப்பிட்ட சத்தத்திற்கு பொண்டாட்டியிடம் இருந்து பதில் வராததற்கும், உடனே அவள் கதவைத் திறக்காததற்கும் என்ன காரணம் என்பது இப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. போதையில் அந்தத் தவறு நடந்து விட்டது என்பதைப் புரிந்து கொண்ட புருசக்காரன் சமத்காரமாக ஏதாவது ஒரு பதிலைச் சொல்லிச் சமாளிக்க வேண்டும் என்று யோசித்து, ஏ... புள்ள, பொட்டக்காட்டுல புடிச்ச முயல் கறி பொட்டப்புள்ளைக்கு ஆகாதுங்கறதுனாலதான் நான் உனக்கு மிச்சம் வைக்காமல் அம்புட்டு முயல் கறியையும் தின்னுட்டேன்னு பதில் சொன்னான்.

புருசக்காரனின் சமத்காரமான (சமயோசிதமான) பதிலைக் கேட்டுச் சிரித்துக் கொண்ட பொண்டாட்டிக்காரி, அந்தப் பிரச்சனையை அத்தோடு விட்டு விட்டு அடுத்து ஆகவேண்டிய வீட்டு வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

அடுத்த வாரம் அதே நாளில் புருசக்காரன் முயல் வேட்டைக்குப் போய் ஒரு கன்னித்தரத்து சிறிய பெண் முயலைப் பிடிச்சிக்கிட்டு வந்தான். வேட்டையில் கிடைத்த அந்த முயலை பொண்டாட்டிக்காரியிடம் கொடுத்து கறி வை என்று சொன்னான். பொண்டாட்டிக்காரி ஞாபகமாக இந்த முயலை எந்த இடத்தில் பிடித்தீர்கள்? என்று கேட்டாள். புருசக்காரன் எதேச்சையாக இந்த முயலை அணைக்கரை ஓரமாகப் பிடித்தேன் என்று கூறினான். பொண்டாட்டிக்காரி முயலை அறுத்துக் கறி வைக்க ஆரம்பித்தாள். புருசக்காரன் ராக்காவலுக்காகக் காடு, கரைகளுக்குப் போனான். காவல் முடிந்து ராத்திரி வெகு நேரம் கழித்துதான் புருசக்காரன் வீடு திரும்பினான்.

பொண்டாட்டிக்காரி அன்று நேரங்காலத்தோடு சோறு பொங்கி, முயல் கறி வைத்து வீம்புக்கு என்றே கறி முழுவதையும் சாப்பிட்டுக் காலி பண்ணிட்டு புருசக்காரனுக்குக் கொஞ்சோண்டு வெறும் சோறும் பழைய குழம்பும் மட்டும் சாப்பிட வைத்திருந்தாள்.

ராக்காவல் முடிந்து பசியோடு வீடு திரும்பிய புருசக்காரன் கையில் தலை வாழை இலையோடு வீட்டிற்கு வந்தான். கை, கால் கழுவி விட்டு மனையில் உக்கார்ந்து கொண்டு தலை வாழை இலையை விரித்தான் முயல் கறி நினைப்போடு.

பொண்டாட்டி இலையில சோத்தைப் போட்டு அதன் மேல் நேற்று வைத்த பழைய குழம்பைக் கொண்டு வந்து ஊற்றினாள். முயல் கறியின் நினைப்பில் வந்த புருசக்காரன் ஏன் பழைய குழம்பை ஊற்றுகிறாய்? முயல் கறி எங்கே? என்று கேட்டான்.

பொண்டாட்டிக்காரி சமத்காரமாக அணைக்கரையில் பிடிச்ச முயல் ஆம்பிளைக்கு ஆகாதுன்னு சொல்லுவாங்க. அதனாலதான் இன்னைக்கு வைச்ச முயல் கறி முழுவதையும் நானே சாப்பிட்டுடேன் என்று பதில் சொன்னாள்

போன வாரம் நாம் எரிந்த வார்த்தைப் பந்து இந்த வாரம் நம்மை நோக்கித் திரும்ப வருகிறது என்பதைப் புரிந்து கொண்ட புருசக்காரன் அப்படியா சேதி, சரி இனிமேல் எந்த இடத்தில் பிடித்த முயல் கறியானாலும் நாம ரெண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடுவோம் என்று சமாதானமாகச் சொல்லி விட்டு முகம் கோணாமல் பழைய குழம்பை வைத்து சாப்பிட்டு விட்டு எந்திரிச்சான். அன்று முதல் புருசக்காரனும் தன் மனைவிக்கு மிச்சம் வைத்து எதையும் சாப்பிட்டான் என்பதுதான் அந்த நாட்டார் கதை

No comments: