கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, July 22, 2013

தாத்தா சொல்லும் கதைகள் 3

புத்தியுள்ளவன் பலவான்..!


கண்ணாடித் தாத்தா கதை கேட்கக் கூடி இருந்த பிள்ளைகளைப் பார்த்து, ``இன்றைக்கு நான் உங்களுக்கு சொல்லப் போகிற கதை மிகவும் பழமையானது. நான் உங்களைப் போல சின்னப் பிள்ளையாக இருந்தபோது என் தாத்தா எனக்குச் சொன்ன கதை இது என்ற பீடிகையுடன் கதையை ஆரம்பித்தார்.

``அப்படியா... அப்ப சொல்லுங்க`` என்றார்கள் குழந்தைகள் ஆர்வத்துடன்... தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார்.

மலையடிவாரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு குளம் இருந்தது. மலையில் பெய்கிற மழையால் பெருக்கெடுத்து வருகிற வெள்ளம் கால்வாய் வழியாக அந்த கிராமத்தைக் கடந்து சென்றது. கால்வாயில் வருகிற நீரை அக்கிராமத்து மக்கள் ஊரை அடுத்த பள்ளத்தாக்கில் குளம் வெட்டி, அதில் தேக்கி வைத்து, அக்குளத்து நீரை வயலுக்குப் பாய்ச்சி மகசூல் செய்து வந்தார்கள்.

குளத்தில் நண்டு, தவளை மற்றும் பல்வகை மீன்கள் வாழ்ந்து வந்தன. கோடைக்காலம் வந்ததும் குளத்து நீரின் அளவு குறைந்தது. அந்தக் குளத்தில் ஒரு கொக்கு மேடான இடத்தில் நின்று கொண்டு தினமும் அந்தப் பக்கம் நீந்தி வரும் மீன்களைக் கொத்தித் தின்று வாழ்ந்து வந்தது. நாளாக, நாளாக குளத்தில் தண்ணீர் வற்றிக் கொண்டே இருந்தது. குளத்தில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றிவிட்டால், குளத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் குளத்தில் உள்ள மீன்களை எல்லாம் பிடித்து விற்று விடுவார்கள் என்பது கொக்குக்குத் தெரியும்.

இந்த குளத்து மீன் மிகவும் ருசியாக இருக்கும். குளம் முழுவதுமாக வற்றும் முன்பாக இந்தக் குளத்தில் உள்ள மீன்களை எல்லாம் பிடித்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தது கொக்கு. பேராசைபிடித்த கொக்கு குளத்தில் வாழும் மீன்களை எல்லாம் பிடித்துக் கொண்டு செல்ல ஒரு தந்திரம் செய்தது. குளத்தின் நடுவில் மேடான ஓர் இடம் இருந்தது. அதை மண்குதிர் என்று கிராமத்து மக்கள் சொல்வார்கள்.

குளத்தின் நடுவிலுள்ள மண்குதிரில் போய் நின்று கொண்ட கொக்கு அங்கு நீந்திவந்த கெண்டை மீனிடம், ``தம்பி நான் உனக்கு ஒரு செய்தியைச் சொல்கிறேன். அதை நீ, உன் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் போய் சொல்`` என்றது. கெண்டை மீன், ``அது என்ன செய்தி என்று ஆர்வத்துடன் கேட்டது. தம்பி, நான் குளத்தின் மேடான பகுதியில் மண் குதிரில் நின்று கொண்டிருந்தேன். நேற்று இந்தக் குளத்தின் கரையில், நான்கு பேர் நின்று பேசிக்கொண்டு இருந்தார்கள். அதை நான் கேட்டேன். அவர்கள், இன்னும் ஒரு வாரத்தில் இந்தக் குளத்தை அழிக்கப்போவதாகவும், குளத்தில் உள்ள மீன்களை எல்லாம் பிடித்து விற்பனை செய்யப் போவதாகவும் பேசிக் கொண்டார்கள் எனவே இன்னும் ஒருவாரத்தில் நீங்கள் எல்லாம் செத்து விடுவீர்கள். ஆனால் நான் நினைத்தால் உங்களை எல்லாம் காப்பாற்ற முடியும் என்று நயவஞ்சகமாக பேசியது.

கொக்கு சொன்னதைக் கேட்ட கெண்டை மீனுக்கு, தண்ணீருக்குள் இருக்கும்போதே வேர்த்துக் கொட்டியது. கொக்கைப் பார்த்து, கெண்டை மீன் அப்படியென்றால் நீங்கள் சொன்ன செய்தியை இந்தக் குளத்தில் உள்ள எல்லா மீன்களிடமும் நான் இப்போதே சொல்கிறேன்`` என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டது. கெண்டை மீன் நேரே, விரால் மீனிடம் சென்று கொக்கு சொன்ன செய்தியைக் கூறியது. அந்த குளத்தில் உள்ள மீன்களுக்கு எல்லாம் விரால்மீன்தான் தலைவராக இருந்தது.

விரால் மீன் உடனே அந்த குளத்தில் உள்ள மீன்களை எல்லாம் ஒரு இடத்தில் கூட்டி, அவைகளிடம், கொக்கு சொன்ன செய்தியைக் கூறியது. விரால் மீன் சொன்ன செய்தியை கேட்ட மற்ற எல்லா மீன்களும் பயந்து நடுங்கின. விரால் மீன் என்ன முடிவெடுக்கிறதோ... அதை நாங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்கிறோம்`` என்று குளத்தில் வாழும் எல்லாவகை மீன்களும் ஒருமித்த குரலில் கூறின. விரால் மீன் நாளைக் காலையில் நான் கொக்கைச் சந்தித்துப் பேசுகிறேன்`` என்றது. மறுநாள் காலையில் வழக்கமாக நிற்கும் மண்குதிருக்கு கொக்கு பறந்து வந்தது.

கொக்கின் வருகைக்காகக் காத்திருந்த விரால் மீன், கொக்கைப் பார்த்து நீர் எப்படி எங்களை எல்லாம் காப்பாற்ற முடியும்?`` என்று கேட்டது. கொக்கு விரால் மீனிடம், நான் வானத்தில் பறந்து திரிகிறவன், எனக்கு இந்தப் பகுதியில் உள்ள குளங்களைப் பற்றி நன்கு தெரியும், நீங்கள் தற்போது வசிப்பது சின்னஞ்சிறிய குளம். அதிலும் தண்ணீர் வற்றிவிட்டது. ஆனால் சற்று தொலைவில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. அது கடல் போல விரிந்து பரந்து கிடக்கிறது. எந்தக் கோடைகாலமானாலும் அதில், `கெத்கெத்` என்று தண்ணீர் கிடக்கும். இந்தக் குளத்தில் உள்ள உங்களை நான் மெல்ல நோகாமல் பூப்போல என் அலகால் கொத்தி எடுத்துக் கொண்டு பறந்து சென்று அந்தக் குளத்தில் விட்டுவிடுவேன்.

பெரிய குளத்தில் நீங்கள் நன்றாக நீந்தி மகழலாம். உங்களுக்குத் தேவையான உணவும் தாராளமாக அந்தக் குளத்தில் கிடைக்கும். குளம் வற்றிவிடுமே என்ற கவலையும் வேண்டாம். நீங்கள் பல்லாண்டு காலம் மகிழ்ச்சியாக அந்தக் குளத்தில் வாழலாம். ஏற்கனவே அந்தக் குளத்தில் வாழும் மற்ற மீன்களுடன் நட்புக் கொண்டு சந்தோஷமாக வாழலாம் என்று நயவஞ்சமாகப் பேசியது. கொக்கின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் விரால் மீனின் காதில் தேனாகப் பாய்ந்தது. கொக்கின் வார்த்தைகளை விரால் மீன் முழுமையாக நம்பியது. எனவே, விரால் மீன் மற்ற மீன்களை எல்லாம் ஒரு இடத்தில் கூட்டி அவைகளிடம் கொக்கு சொன்னதை எல்லாம் கூறியது. விரால் மீனின் முடிவை ஏற்பதாக மற்ற மீன்களும் கூறின.

விரால் கொக்கை முழுமையாக நம்பியது. இன்றிலிருந்து நாம் ஒவ்வொரு வரும் வரிசையாக மண் குதிரின் அருகில் செல்வோம். கொக்கு நம்மைக் கொத்திக் கொண்டு சென்று பெரிய குளத்தில் விட்டுவிடும் என்று கூறியது. கொக்கும் விரால் மீனும் பேசிக் கொண்டதை எல்லாம், குளத்தின் கரையில் ஒரு பொந்தில் இருந்த நண்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அன்று காலை முதல், வரிசையாக வந்து நின்ற மீன்களை எல்லாம் கொக்கு மகிழ்ச்சியுடன் கொத்திக் கொண்டு சென்று, ஒரு காட்டின் நடுவில் இருந்த பாறையின் மேல் போட்டது. பாறையின் சூட்டில் போய் விழுந்த மீன்கள் துடிதுடித்துச் செத்தன். மீன்கள் ஒவ்வொன்றும் துடிதுடித்துச் சாவதைக் கண்டு கொக்கு சிரித்தது. மீன்கள் எல்லாம் செத்து பாறையின் சூட்டில் கருவாடான பிறகு, நம் தேவைக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் தின்று கொள்ளலாம் என்று நினைத்து மகிழ்ந்தது

மீன்களை கொக்கு கடத்திச் செல்வதைப் பார்த்த நண்டு மறுநாள் காலையில் கொக்கிடம் வந்து, ``அண்ணா என்னையும் அந்த பெரிய குளத்தில் கொண்டுபோய் சேர்த்துவிடு என்றது. கொக்கிற்கு ரொம்ப நாளாக, நண்டை உலர வைத்துச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனவே, இன்று உன்னை முதலில் கொண்டு பொய் அந்தக் குளத்தில் விடுகிறேன் என்றது.


நண்டு உருவத்தில் பெரியதாக இருந்தது. எனவே கொக்கால் அதன் அலகைக்கொண்டு நண்டைக் கொத்த முடியவில்லை. நண்டு, கொக்கிடம், `அண்ணே நீளமான உங்கள் கழுத்தை நான் என் கால்களால் கவ்விக் கொள்கிறேன். நீங்கள் என்னை அந்த பெரிய குளத்தில் கொண்டு போய்விட்டு விடுங்கள்` என்றது. நண்டின் யோசனையும் கொக்கிற்கு சரி என்று பட்டது. எனவே, கொக்கு குனிந்து கொடுத்தது. நண்டு கொக்கின் கழுத்தைப் பிடித்துக் கவ்விக்கொண்டு, `ம் போகலாம்` என்றது கொக்கு காட்டில் உள்ள பாறைக்கு பறந்து சென்றது.

பாறைக்கு மேலே பறந்து செல்லும்போது நண்டு கீழே பார்த்தது. பாறையில் மீன்கள் எல்லாம் செத்துக் கிடந்தன. அந்தக் காட்சியை கண்ட நண்டிற்கு, கொக்கு மீன்களுக்கு செய்த துரோகம் புரிந்தது. நம்பிக்கைத் துரோகம் செய்த இந்த கொக்கை இனியும் உயிரோடு விட்டால், நீர் வாழும் இனங்களை எல்லாம் கூண்டோடு அழித்துவிடும். எனவே, தாமதியாமல் இந்தக் கொக்கைக் கொன்றுவிட வேண்டும் என்று முடிவு செய்த நண்டு, கொக்கின் கழுத்தில் கவ்விப் பிடித்திருந்த தன் பிடியை இறுக்கியது.

நண்டே என்ன காரியம் செய்கிறாய் என் கழுத்தை இறுக்காதே. நான் செத்துவிடுவேன் என்றது கொக்கு. நண்டு, `நீ மீன்களை எல்லாம் நம்ப வைத்துக் கொன்றுவிட்டாய். எனவே, இப்போது நான் உனக்குத் தண்டனை கொடுக்கிறேன் என்று கூறிக் கொண்டே கொக்கின் கழுத்தை மேலும் மேலும் இறுக்கியது. எனவே, மூச்சுத் திணறிய கொக்கும் பாறையின் மேல் விழுந்து உயிரை விட்டடு. கொக்கு செத்தபிறகு, நண்டு, மெல்ல ஊர்ந்து பாறையைவிட்டு, நீர் பிடிப்பான இடத்தை நோக்கி நடந்து சென்று உயிர் பிழைத்தது` என்று கதையைக் கூறி முடித்த தாத்தா கதை கேட்டுக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்து, பறக்கும் வல்லமை கொண்ட பெரிய பறவையான கொக்கையே சிறிய நண்டு, தன் புத்தி கூர்மையால் கொன்று, இனி இறக்க இருந்த மீன்களின் உயிரைக் காப்பாற்றி விட்டது.

சிந்திக்கும் ஆற்றல் இருந்தால் எவ்வளவு பெரிய எதிரியையும் நம்மால் வெல்ல முடியும் என்ற நீதிக் கருத்தை இந்தக் கதை உணர்த்துகிறது.

மனிதர்களிலும், இந்தக் கொக்கைப்போல் நயவஞ்சகமாகப் பேசி சாமான்ய மக்களை ஏமாற்றுகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள நண்டைப் போல் தைரியமாக நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments: