கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Sunday, July 21, 2013

சொலவடைகளும் பழமொழிகளும் 5

      


 எதார்த்த வாழ்வில் சில மனிதர்கள் ஒரு காரியத்தைத் தானும் செய்ய மாட்டார்கள். அக்காரியத்தைச் செய்யவிட மாட்டார்கள்.

ஒருவனுக்குப் பணம் தேவைப்படும். அவன் ஒரு முதலாளியிடம் வேலை பார்ப்பான். வேலைக்காரன் முதலாளியிடம் தன் அவசரத் தேவைக்குப் பணம் கேட்பான். ஆனால் முதலாளி பணம் கொடுக்க மாட்டான். ‘நாளை தருகிறேன். நாளை மறுநாள் தருகிறேன்’ என்று வாய்தா போட்டுக்கொண்டே இருப்பான். வேறு வழியில்லாமல் அந்தத் தொழிலாளி வேறு ஒருவனிடம் போய் கைமாத்தாகப் பணம் கேட்பான். அவன் கைமாத்துத் தர தயாராக இருப்பான். ஆனால் முதலாளி குறுக்கே வந்து ‘நீ கைமாத்தாக என்னிடம் வேலை பார்க்கிறவனுக்குப் பணம் கொடுக்க வேண்டாம். நான் கொடுத்துக் கொள்கிறேன்’ என்று சொல்லி உதவி செய்கிறவனையும் செய்யவிடாமல் தடுத்து விடுவான் தானும் பணம் கொடுத்து உதவ மாட்டான். இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்த்துச் சொல்லப்பட்ட சொலவம்தான், ‘அக்கப்போர் பிடிச்ச நாயி வைக்கப்போரில் (வைக்கோல் போர்) படுத்துக்கிட்டுத் தானும் திங்காதாம். திங்கிற மாட்டையும் திங்க விடாதாம்’ என்பது இச்சொலவடையில் வரும் நாய், மாடு முதலியவை ‘நாய்’ போன்ற மனிதனை ‘மாடு’ போன்ற மனிதனைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

இதே பொருளில், ‘மேயுற மாட்டைக் கெடுத்திச்சாம். மெனக்கெட்ட மாடு’ என்ற சொலவமும் புழக்கத்தில் உள்ளது. ‘மெனக்கெட்ட’ என்ற வட்டார வழக்குச் சொல்லுக்கு ‘வேலை இல்லாத’ என்று பொருள். தானும் புல்லை மேயாது, புல்லை மேயும் மாட்டையும் மேயவிடாமல் கெடுக்கும் மாடு போன்ற மனிதனைத்தான் இச்சொலவடை சுட்டிக்காட்டுகிறது.

இதே தொனியில் அமைந்த ‘தானும் செய்யான், தள்ளியும் படான்’ என்ற பாலியல் சார்ந்த சொலவடையில் இங்கு நினைவு கூறத்தக்கதாகும்.

தானும் ஒரு வேலையைச் செய்ய மாட்டான். அதே வேலையை அடுத்தவன் செய்ய முன்வந்தால் அவளையும் அவ்வேலையைச் செய்யவிடாமல் தடுத்து விடுகிற மனிதர்களை நடைமுறை வாழ்வில் நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.

.........

பரிசல் மூலம் ஆற்றைக் கடக்கும் ஒரு மனிதனின் பேராசையை, ‘அக்கரைக்குப் போகவும் செய்யனும், பரிசிலை கவிழ்த்தவும் செய்யனும்’ என்ற பழமொழி பதிவு செய்துள்ளது.

நேரமோ இருட்டி விட்டது. இனிமேல் பரிசிலை ஆற்றில் இறக்க முடியாது என்ற நிலை. ஆனால்  அக்கரையில் பார்க்க வேண்டிய வேலையும் இருக்கிறது. மதில் மேல் பூனையாக மனம் கிடந்து துடிக்கிறது பரிசல்காரனுக்கு. நம் பரிசலை இக்கரையில் கவிழ்த்து வைத்துவிட்டு, அக்கரைக்கு வேறு ஒரு பரிசலில் ஓசியில் சென்றால் எப்படி இருக்கும்? என்று அவன் மனம் எண்ணிப் பார்க்கிறது. அந்தப் பரிசல்காரனின் எண்ண வெளிப்பாடுதான் இப்பழமொழி.

‘மச்சித் தானியமும் குறையக்கூடாது. மக்கள் முகமும் வாடக் கூடாது’ என்ற பழமொழியும் அதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறது.

அந்தக் காலத்தில் அறுவடை செய்த நெல்லை மச்சில் பாதுகாப்பாக சேமித்து வைக்கும் பழக்கம் இருந்தது. சாப்பாட்டுத் தேவைக்கு மச்சில் இருந்து நெல், கம்பு, கேழ்வரகு, சாமை, கேப்பை போன்ற தானியங்களை எடுத்து அவ்வப்போது பயன்படுத்திக் கொள்வார்கள்.

ஒரு சம்சாரி, ‘தான் மச்சியில் சேமித்து வைத்த தானியமும் வயிற்றுப்பசிக்காகப் பிள்ளைகள் சாப்பிட்டு குறைந்துவிடக்கூடாது. ஆனால் அதே சமயம், தன் பிள்ளைகளின் (மக்களின்)முகமும் பசியால் வாடிவிடக்கூடாது என்று நினைக்கிறான்.

இப்படி இரட்டை மனநிலையில் வாழும் சில மனிதர்களையும், எதார்த்த வாழ்வில் நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.

‘அக்காளும் விருந்துக்கு வரணும், அரிசியும் தீரக்கூடாது. ‘மாவுக்கும் ஆசை, கூழுக்கும் ஆசை’ என்ற பழமொழிகளும் இதே தொனியில் அமைந்ததுதான் ‘கூழுக்கும் ஆசை. மீசைக்கும் ஆசை’ என்ற பழமொழியும்.

மேலே நான் சொன்ன பழமொழியின் மாற்றுவடிவம்தான்.

‘ம.பொ.சி. ‘ மாதிரி மீசை வைத்துக்கொண்டு கூழைக் குடித்தால் கூழ் மீசையில் ஒட்டத்தான் செய்யும். ஒருவன் ம.பொ.சி. மாதிரி, மீசை வைத்துக்கொண்டு மீசையில் படாமல் கூழ் குடிக்க ஆசைப்படும் அனுபவத்தை இப்பழமொழி கேலி செய்கிறது.

‘காரியமும் நடக்கணும். காசும் செலவாகி விடக்கூடாது’ என்ற உளவியல்சார் மனித மனம் இப்பழமொழியில் கேலி செய்யப்படுகிறது.

‘அக்காள் போனால் போகட்டும், தங்கச்சி வந்தா சந்தோசம்.’

‘தங்கச்சி தலைவாசல் வழி வரவும் அக்காள் புறவாசல் வழி போய்விடுவாள்.’

இந்தப் பழமொழிகளில் ‘அக்காள்’ என்பது மூதேவியையும், ‘தங்கை’ என்பது சீதேவியையும் குறிக்கிறது.

‘மூதேவி’ என்பது புராண மரபுப்படி தரித்திரத்தின் வறுமையில் துன்பத்தின் குறியீடு, ‘சீதேவி’ என்பது செழிப்பின், செல்வத்தின், மகிழ்ச்சியின் குறியீடு.

அக்காள் என்ற மூதேவி நம் வீட்டில் இருந்து வெளியே  நடந்து செல்லும்போது, அந்த நடை அழகாகிறது. அதே அக்காள் நம் வீட்டினுள் நடந்துவந்தால் அந்த நடை அவலட்சணமாகத்தான் இருக்கும்.

சீதேவியும், மூதேவியும் ஒரே வீட்டில் குடியிருக்க மாட்டார்கள். சீதேவி இருக்கிற வீட்டிற்கு மூதேவி போக மாட்டாள். மூதேவி இருக்கிற வீட்டிற்கு சீதேவி போக மாட்டாள் என்பது நாட்டார் நம்பிக்கை. எதார்த்தமாக கிராமத்து மக்களின் பேச்சில் எப்போதும் ஒரு கேலி, கிண்டல், நையாண்டி ஆகியவை இருக்கும். அவர்கள் உருவாக்கிய சொலவடைகளில் நையாண்டி இல்லாமல் போகுமா?

மகள் வாக்கப்பட்டுபோன இடத்தில் சிறிது கஷ்டம்தான். ஆனால் பிறந்த வீட்டிலோ வறுமை. தலையை விரித்துப் போட்டுக் கொண்டு ஆடுகிறது. புகுந்த வீட்டின் வறுமையை நினைத்து போவோர் வருவோரிடமெல்லாம் புதுப்பெண் புலம்பித் தீர்த்துக்கொண்டு இருக்கிறாள். மகளின் புலம்பல் தகப்பக்காரனின் காதில் விழுகிறது.

இத்தகைய சூழலில் அப்பக்காரன், தான் பெற்ற மகளைப் பார்த்துக் கூறிய சொலவடைதான், ‘அங்கு ஏண்டி மகளே கஞ்சிக்கு அழுகிறே’ இங்கே வாடி மகளே காத்தாப் பறக்கலாம்’ என்பது வறுமையிலும், கஷ்டத்திலும் அவர்களால் நகைச்சுவை உணர்வுடன் பேச முடிகிறது. அங்கதச் சுவையுடைய சொலவடை இது.

இச்சொலவத்தைப் போல ‘தொனி’ யுடைய சில சொலவங்களும் வட்டார வாரியாகக் காணக்கிடக்கின்றன.  ‘அங்கே ஏண்டி கிடக்கிற அலகாத்துல, இங்கே வாடி பக்கத்தில் பெருங்காத்தில’ என்ற சொலவடையைச் சொல்லலாம். அலகாத்து என்பது தென்றல் காற்றையும் பெருங்காத்து என்பது புயல் காத்தையும் குறிக்கும்.

போகிற போக்கில் அதிர்வில்லாமல் நம்  வாழ்வியலுக்குத் தேவையான போதனைகளைச் சொல்லாமல் சொல்லிவிடுகின்றன இந்தச் சொலவடைகள்.

No comments: