கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Tuesday, July 23, 2013

மறைவாய் சொன்ன கதைகள் 4



ஒரு ஊர்ல ஒரு புருஷனும் பொண்டாட்டியும் இருந்தாங்க. அவங்களுக்கு ஒரு ஆம்பிளைப் பிள்ளை இருந்தான். அவனுக்கு ஏழெட்டு வயசு இருக்கும். அவன் ஒரு பைத்தியக்காரனா வளர்ந்தான்.

ஒரு நாள் பட்டப்பகலில் கதவை ஒருச்சாத்தி(சிறிது திறந்தபடி) வைத்துக் கொண்டு புருஷனும் பொண்டாட்டியும் ‘பேசிப் பெறக்கிக் கிட்டு’ இருந்தாங்க. அவங்களோட பையன் கதவின் இடைவெளி வழியா உள்ளே எட்டி அந்தக் கங்காட்சியைப் பார்த்துட்டான்.

தன் பாட்டியிடன் வந்து வீட்டுக்குள் தான் பார்த்த கங்காட்சியை பற்றிச் சொல்லி ‘அம்மாவும் அப்பாவும் என்ன செய்றாங்க பாட்டி’ என்று விபரம் கேட்டான்.
பாட்டிக்குத் தூக்கிவாரிப் போட்டுட்டு, ‘கதவைத் திறந்து போட்டுக்கிட்டு அவங்க சந்தோஷம் கொண்டாடியிருக்காங்க’ என்பதைப் புரிந்து கொண்ட பாட்டி பேரன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்து வழக்கம் போல் ஒரு பொய்யைச் சொன்னாள்.

அந்தப் பேரன் அடிக்கை எசக்குப்பிசக்கா பாட்டியிடம் அப்படிக் கேள்விகள் கேட்பதுண்டு.

ஒருநாள் ‘பாட்டி நான் எப்பைப் பிறந்தேன்?’ என்றூ கேட்டான்.
பேரனின் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்ல விரும்பாத பாட்டி, ‘நீ சின்ன பிள்ளையா இருக்கும்போது ஒரு கன்னப் பருந்து உன்னைக் கொண்டுவந்து உன் அம்மாவின் மடியில் போட்டுட்டுப் போய்ட்டு’ என்று ஒரு பொய்யைச் சொல்லி வைத்தாள்.

இப்பமும் அதே மாதிரி ‘பேரப்புள்ள, உங்கம்மா திடீரென்று செத்துட்டா, உங்கப்பா அவளைக் கட்டிப் பிடிச்சி உசிரு கொடுத்துக்கிட்டு இருந்திருக்கு. அதைத்தான் நீ பார்த்திருக்கிறெ.’ என்று பொய்யைச் சொல்லி வைத்தாள்.
பைத்தியக்காரனான பேரப்பிள்ளையும் பாட்டி சொன்னதை நம்பிட்டான்.
ஒரு வாரம் கழித்து பக்கத்து வீட்டில் ஒரு வயசுக்கு வந்த பொம்பளைப் பிள்ளை ஒருத்தி இறந்துவிட்டாள். எல்லோரும் போய் செத்துப்போன பிள்ளையைப் பார்த்துட்டு வந்தாங்க.

பாட்டியோட பேரனும் போய் செத்துப் போன அந்தப் பிள்ளையப் பார்த்துவிட்டு அங்கே நின்றவர்களிடம் ‘எங்கப்பா செத்தவங்களுக்குக் கெல்லாம் உயிர் கொடுக்கத் தெரிஞ்சவங்க. இப்ப எங்கப்பாவைக் கூட்டிக்கிட்டு வந்து செத்துப் போன இந்தப் பிள்ளையக் கட்டி பிடிக்கச் சொல்லுங்க. இந்தப் பிள்ளைக்கும் உயிர் வந்திரும்’ என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.
பையன் சொல்வதைக் கேட்ட நிறைய பேருக்கு ‘விபரம்’ புரியவில்லை. கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் மட்டும் விசயத்தை யூகித்துக் கொண்டு சிரித்தார்.

அதற்குள் பையன் வாய் திறந்ததைக் கேள்விப்பட்டு அவனோட பாட்டி ஓடோடி வந்து அவன் வாயைப் பொத்துக் கொண்டு. ‘வாடா வா பைத்தியக்காரப் பெயல் மகனே!’ என்று சொல்லிக் கொண்டே தன் வீட்டுக்கு பேரனைக் கூட்டிக் கொண்டு போனாள்.

பாட்டி போன பிறகு, பையன் சொன்னதைக் கேட்டு சிரித்த பெரியவரிடம் சுற்றி நின்று ‘என்னன்னு விபரம் புரியலியே. நீங்களாவது சொல்லுங்களேன்’ என்றூ கேட்க பெரியவர் சிரிப்பை அடக்கிக் கொண்டு தான் யூகித்த விஷயத்தை அனைவருக்கும் விளக்கினார். துக்க வீட்டிலும் சிரிப்பலைகள் பரவியது

No comments: